Skip to main content

அங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28

Published on 06/01/2021 | Edited on 10/01/2022

 

AR Rahman

 

ஆஸ்கர் விருது விழா மேடை பரபரப்பாக இருந்தது. அவ்வருட ஆஸ்கர் விருது பெறப்போவது யார் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அங்கே திரண்டிருந்தவர்கள் மத்தியில் நிலவியது. அதில் ஒருவராக, ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் அறிவிக்கப்பட்டதும் பலத்த கைதட்டல். எவ்வித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாக மேடையேறி விருதுபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' எனத் தன்னடக்கத்துடன் பேசிவிட்டுக் கீழே இறங்கினார். ஒரு இந்தியர், தமிழர் ஆஸ்கர் மேடையேறுவது நமக்கெல்லாம் புதிய அனுபவமாக இருந்தது. அதுவரை விருது வாங்கிவிட்டு கத்திக் கூச்சலிடுதல், மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தல் என அம்மேடையைப் பார்த்துப் பழகிய மேலைநாட்டினருக்கும் அந்த நிகழ்வு புதிய அனுபவமாகவே இருந்தது. சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால் ஆஸ்கர் மேடை சிறுபொழுது ஒட்டுமொத்தமாகவே வேறு வடிவம் கண்டிருந்தது.

 

ஏ.ஆர்.ரஹ்மான் என இன்று அறியப்படும் இந்த இசைப்புயலுக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் திலீப்குமார். தந்தை ஆர்.கே.சேகர் சினிமாவில் பெயர் சொல்லக்கூடிய அளவிலான இசைக்கலைஞர். இதனால், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறு வயதிலேயே இசை பரிட்சயமானது. ரஹ்மானுக்கு காலைப்பொழுதுகள் பள்ளியில் என்றால், மாலைப் பொழுதுகள் தந்தையின் இசை அரங்கில்தான். தந்தையோடு இணைந்து இசைக்கருவிகள் வாசிப்பது, அதை முறையாகப் பராமரிப்பது ஆகியவைதான் அவரது வேலை. வாட்டி வதைக்கக் கூடிய அளவில் வறுமை இல்லாவிட்டாலும், செல்வங்கொழிக்கும் நிலைமையும் குடும்பத்தினுள் நிலவவில்லை. இந்த நிலையில், ரஹ்மானுக்கு 9 வயது இருக்கும்போது அவரது தந்தை எதிர்பாராத விதமாக மரணமடைகிறார். அப்பாவின் மரணம் ரஹ்மானை மட்டுமின்றி ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் வெகுவாகப் பாதித்தது. தந்தையின் பொறுப்பும் ரஹ்மானின் தலையில் ஏறி உட்கார, ஒரு கட்டத்தில் பள்ளிப்படிப்பையும் பாதியில் கைவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவ்வயதில் தாங்கக்கூடிய அளவிற்கும் மேலான பொறுப்புகளைச் சுமந்து, கடின மற்றும் துல்லிய உழைப்பினால் பின்னாட்களில் பெரும் புயலாக இசை உலகைத் தாக்கியது இந்தத் தென்றல்.

 

AR Rahman

 

"எனக்கு 6 வயதாக இருக்கும்போது என் அப்பாவுடன் இணைந்து அவர் ஸ்டூடியோவிற்குச் செல்வேன். அங்கே உள்ள ஹார்மோனியம் பெட்டியை எடுத்து வாசிப்பேன். அப்போது அங்கே இருந்தவர்கள் இவன் பெரிய இசையமைப்பாளராக வருவான் எனக் கூறுவார்கள். என் அப்பாவும் சிரிப்பார். பின் எனக்கு 9 வயது இருக்கும் போது அப்பா மரணமடைந்துவிட்டார். அப்பாவின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலமாகத்தான் அம்மா குடும்பத்தை நடத்திவந்தார். அப்பா செய்த வேலையை நீயும் செய்யவேண்டும் என என் அம்மா கேட்டுக்கொண்டதால்தான் தொடந்து இசை சார்ந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்தேன். எனக்கு சிறுவயதிலேயே கணினி மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்தத் துறையில் போகவேண்டும் என்றுதான் விரும்பினேன். குடும்பச் சூழலை கருத்தில் கொண்ட என் அம்மா, "உனக்கு இசை தெரியுமே... அது மூலமாகவே நீ சம்பாதிக்கலாம்" என்றார். இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் என் அம்மாதான் காரணம்".

 

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பே ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக இசைக் கலைஞராகப் பின்வரிசையில் பணியாற்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதில், இளையராஜா உடன் பணியாற்றியதும் அடக்கம். பொதுவாக 'படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்' என்பது நம்மிடம் புழக்கத்தில் உள்ள ஒரு கருத்துருவாக்கம். இக்கருத்துருவாக்கத்தினுள் கனகச்சிதமாகப் பொருந்துகிறார் ரஹ்மான். பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக நிறைவு செய்யாவிட்டாலும் இசை மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்து ரஹ்மானுக்கு இருக்கும் அறிவுடன், இத்துறையில் பட்டம் பெற்றவர்களே போட்டியிட முடியாது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என அவருக்குள் இருக்கும் தேடல் அலாதியானது. பழங்காலத்து இசைக்கருவிகள் தொடங்கி இன்றைய இசைக்கருவிகள் வரை அத்தனையும் ரஹ்மானுக்கு அத்துப்பிடி. சந்தையில் எந்த நவீனத் தொழில்நுட்பம் வந்தாலும் அது ரஹ்மானின் பார்வைக்கோ அறிவிற்கோ எட்டாமல் தப்புவதில்லை. இதை ரஹ்மான் ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். 'பழக்கம்தான் பின்னாட்களில் வழக்கமாகும்' என்பதும் தமிழ்ச் சமூகத்தில் உள்ள மற்றொரு கருத்துருவாக்கம். இதற்குள்ளும் ரஹ்மான் கனகச்சிதமாகப் பொருந்துகிறார். இளையராஜாவுடன் பணியாற்றிய போதே கணினி இசையை தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றினார் ரஹ்மான். தமிழ் சினிமாவில் கணினி இசை பயன்படுத்தப்பட்ட முதல் படமான 'புன்னகை மன்னன்' படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் அதில் பின்னிருந்து பணியாற்றியதில் ரஹ்மானின் பங்கு பெரியது. 

 

பின் 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் இசை வடிவம் மற்றும் ரசிகர்களின் ரசனையை மொத்தமாக மாற்றினார். முதல் படத்திலேயே தேடிவந்தது 'தேசிய விருது'. அதன் பிறகு இந்திய சினிமா, ஹாலிவுட் சினிமா எனத் தன்னுடைய கால் தடத்தை அகலப் பதித்தார். திரையுலகு உயரிய விருதாகக் கருதும் 'கோல்டன் குளோப்ஸ்', 'கிராமி விருது', 'ஆஸ்கர்' உட்பட அனைத்து விருதுகளையும் வென்று அசத்தினார்.

 

இவையனைத்தையும் தாண்டி, ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்ப்பற்றும் பாராட்டிற்குரியதே. பொதுவாக ஆரம்பக்காலங்களில் தமிழ், தமிழர் என்று பேசி தன்னை வளர்த்துக்கொள்ளும் திரைக்கலைஞர்கள், கணிசமான வளர்ச்சியை எட்டியபின் அதை வெளிப்படுத்தமாட்டார்கள். "நம்ம தமிழ்ப்பாடல் கிராமி விருதுகள் வெல்லும் அளவிற்கு வரணும்... அது பத்தோடு பதினொன்னா இருக்கக் கூடாது.. அதுதான் முதல் இடத்தில் வரணும்" எனத் தன்னுடைய முதல் பேட்டியிலேயே கூறிய ரஹ்மான், சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம், இன்றும் தனது தமிழ் உணர்வை வெளிப்படுத்தி வருகிறார். 2009-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்றதற்காக, அவருக்கு ஒரு பாராட்டுவிழா தமிழ்த்திரையுலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வை ரத்து செய்யும்படி ரஹ்மான் கூறிவிட்டார். பின்னர் ஒரு பேட்டியில் அது குறித்துப்பேசிய ரஹ்மான், "பக்கத்து நாட்டுல நம்ம மக்கள் போரில் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஆஸ்கர் விருது வாங்கியதைக் கொண்டாடணுமா என நினைத்தேன்" எனக் கூறி ஒட்டுமொத்த தமிழுணர்வாளர்களின் மனங்களையும் வென்றார்.

 

cnc

 

குடும்ப வறுமை, சிறு வயதிலேயே தந்தை மரணம், பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமை உட்பட பல இன்னல்களை எதிர்கொண்டாலும் கனவினை நோக்கிய அவரது தொடர் உழைப்பே, ஏ.ஆர்.ரஹ்மானை இன்று உலகப் புகழின் உச்சத்தில் நிறுத்தியுள்ளது.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

வெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.