Skip to main content

அப்பாவி கணவனை தெருவில் அலைய வைத்த மனைவி - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 47

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
advocate-santhakumaris-valakku-en-47

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் நம்மோடு பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து கொள்கிறார்.

ரமேஷ்பாபு  என்பவரின் வழக்கு இது. அப்பா இல்லாமல் அம்மா வளர்ப்பில் ஏழ்மை நிலையிலிருந்து வளர்ந்து வேலை தேடி கஷ்டப்பட்டு வயது சற்றே அதிகம் ஆன பின்பு தான் திருமணம் செய்து கொள்கிறார். இவருக்கு குழந்தையும் பிறக்க, நான்கு வருடம் கழித்து திடீரென்று சற்றும் எதிர்பாராமல் மனைவியிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வர, பதட்டமாக வந்து என்னை சந்திக்கிறார். அந்த இரண்டு நோட்டீசில் ஒன்று விவாகரத்து கேட்டும் இன்னொன்று குழந்தைக்கு பராமரிப்பு பணம் கேட்டும் இருந்தது. என்னதான் பிரச்சனை என்று ரமேஷ்பாபுவிடம் கேட்ட பின்னே மெல்ல சொல்கிறார். 

ஒண்ணுமே இல்லாத நிலையிலிருந்து வீடு வசதி இல்லாமல் சிரமத்துடன் வளர்ந்ததால், தன் அம்மாவிற்காக சொந்த வீடு கட்டி முடிக்கையில் வயதும் அதிகம் ஆகிவிட்டது. இதை சொல்லித்தான் திருமணமும் நடந்தது. நாங்கள் சந்தோஷமாகத்தான் இருந்தோம். ஒரு குழந்தை கூட பிறந்திருக்கிறது என்றார். பின் எதற்காக உங்கள் மனைவி விவாகரத்து நோட்டீஸில், நீங்கள் இரவு மிகவும் லேட்டாக வருவதாகவும், கெட்ட வார்த்தை பேசுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் என்று கேட்டேன். ரமேஷ்பாபுவுக்கு தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் மாதத்தின் முதல் வாரம் மட்டும் கொஞ்சம் நிறைய வேலைகள் இருக்கும் என்பதால், அந்த வாரம் மட்டுமே வீடு திரும்ப நள்ளிரவு ஆகிவிடும் என்றும், தான் சத்தியமாக ஒரு கெட்ட வார்த்தை கூட பேசியது இல்லை. வேண்டுமென்றால் என் மனைவியிடமே ரெக்கார்டு எதுவும் இருந்தால் கேட்டுப் பாருங்கள் என்றார். என் மனதிற்கு இவர் பேசுவது உண்மை என்றுதான் பட்டது. அவர் மனைவி நோட்டீசுடன் குழந்தைக்கு பராமரிப்பு பணம் கேட்டிருப்பதால் அவர் வருமான விவரம் கேட்டோம். 

ஓரளவு லட்சத்தில் சம்பாதிக்கும் ரமேஷ்பாபு அதை வைத்து தன் தாய்க்காக கட்டியிருக்கும் வீட்டின் கடனை மாதாமாதம் அடைப்பதாகவும், மேலும் தன் மனைவிக்கும் சர்ப்ரைஸாக ஊரப்பாக்கத்தில் ஒரு வீடும் கட்டிக்கொண்டிருக்கிறார். அதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கிறார். நான் செய்யாமல் இருந்தால் தானே நான் மெயின்டனன்ஸ் பணம் கொடுக்க வேண்டும்.  நான் தான் ஏற்கனவே என் குழந்தைக்கு ஸ்கூல்ல பீஸ் முதல் அவர்கள் குடியிருக்கும் வீடு வாடகை முதல் கட்டிக்கொண்டுதானே இருக்கிறேன் என்றார். 

மேலும் அந்தப் பெண் இவரை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார் என்பதும் தெரிய வருகிறது. என்னவென்று கேட்டபோது தான் தெரியவந்தது, இவருக்கும் மனைவிக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும், அந்தப் பெண்ணின் அம்மாவினால் தான் இந்த நிலைமை என்றும் மேலே சொல்கிறார். செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கும் அவர் மனைவி கர்ப்பமான பின், சென்னையிலேயே பிரசவம் பார்த்து கொள்ளலாம் என்று ரமேஷ்பாபு கூறி இருக்கிறார். ஆனால் அந்த பெண்ணின் அம்மா செங்கல்பட்டிலேயே பிரசவம் பார்க்க வைக்க, அதில் சில சிக்கல்கள் வந்து யாராவது ஒரு உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று ஆகியிருக்கிறது. ரமேஷ்பாபுவும் அதிக விலை கொடுத்து தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சிசிச்சை பார்க்க வைத்து காப்பாற்றி இருக்கிறார். குழந்தை பிறந்தபோது சிக்கல் வந்ததால், அந்த பெண்ணின் தாயாரும் இவர்கள் வீட்டில் கூடவே தங்கி இருக்கிறார். 

இது இயல்புதானே என்று ரமேஷ்பாபுவும் விட, ஆனால் வந்த தாயார் திரும்பி செல்லவே இல்லை. மேலும் இந்த அம்மா, கணவன் மனைவிக்குள் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறார். லேட்டாக வந்தால் கதவை திறக்காதே என்றும், தன் மகளின் அதிர்ஷ்டமே இப்படி மேலே வந்ததற்கு காரணம் என்றும், அவரை உருவ கேலி வரை செய்கிறார். அந்த பெண்ணின் தம்பியும் மாதக் கணக்கில் இவர்கள் கூடவே தங்கி விடுகிறார். ரமேஷ்பாபுவுக்கு டிப்ரெஷன் அதிகமாகி புகைப் பழக்கமும் அதிகம் ஆகிறது. மனைவியும் விலகிப் போக, தன் மாமியாரிடமும் பேசிப் பார்க்கிறார். ஆனால் அதுவும் தவறாக போகிறது. மேலும் மனைவியின் தம்பியும் இவரை அடித்து வெளியே துரத்தி விடுகிறார். இந்த நிலையில் தான் அவருக்கு நோட்டீஸ் வருகிறது.

இதையெல்லாம் நாங்கள் கோர்ட்டில் நீதிபதியிடம் சொல்ல, ரமேஷ்பாபுவையும் அந்த பெண்ணையும் மீடியேஷனுக்கு அனுப்பினார்கள். குழந்தையைப் பார்க்க ரமேஷ்பாபுவை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு பெட்டிஷன் போட்டு அதன்படி பார்க்க போனாலும், குழந்தையை வாசலிலேயே காண்பித்து அவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பி விடுகின்றனர். 

பின்னர் விசிட்டிங் ரயிட்ஸ் வாங்கியும், அந்த பெண்ணும் குழந்தையும் வீட்டை விட்டே சென்றதாக தகவல் வர, ஊரப்பாக்கத்தில் இருப்பதாக அறிந்து கொள்கிறார். கடைசியாக கோர்ட்டில் அந்த பெண் எதற்கும் ஒத்து வரவில்லை. ஏதாவது செட்டில் பண்ணுமாறு கூற, அந்த பெண்ணும் குழந்தையை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றால் ஊரப்பாக்கத்தில் ஒரு பிராப்பர்ட்டியை தனது பெயரில் எழுதித் தருமாறு கேட்கிறாள். ஆனால் அவளுக்குத் தெரியவில்லை அது அவளுக்காகத் தான் ரமேஷ்பாபு வங்கியிருக்கார் என்று. இறுதியில் அவரும் இதற்கு ஒத்துக்கொண்டு சொத்தையும் அவள் பெயரில் ரிஜிஸ்டர் செய்த பின், மியூச்சுவல் கன்சென்ட்டில் டைவோர்ஸ் வாங்கியும், அந்த பெண்  குழந்தையை காட்டவே இல்லை. அதற்கு பெட்டிஷன் போட்டு, நோட்டீஸை அந்த பெண்ணுக்கு அனுப்பினாலும், சரியான ரெஸ்பான்ஸ் இருக்காது. அந்த குழந்தை பள்ளிக்கு போய் வரும்போது மட்டும் பார்த்து வருகிறார் ரமேஷ்பாபு. இப்போது அவர் தன் அம்மா இருக்கும் பாண்டிச்சேரிக்கே சென்றுவிட்டார்.

கணவனை என்றுமே வெறும் பணம் காய்க்கும் மரமாக மட்டுமே பார்க்காமல், அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொள்ளும் பெண்கள் இருக்கும் குடும்பம் முன்னேற்றம் அடையும். அப்படியில்லாத குடும்பம் முன்னேற்றம் அடையாது.

Next Story

கணவனுக்குத் தெரியாமல் கர்ப்பத்தைக் கலைத்த மனைவி; கதறிய கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 54

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
advocate-santhakumaris-valakku-en-54

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சரண் என்பவருடய வழக்கு இது. ஒரே பையன், பிஸினஸ் பார்க்கிறார். ஜாதக பொருத்தம் பார்த்து ஒரு பெண் அமைந்து, பெரியோர்களால் நிச்சயத் தேதி முடிவாகிறது. ஆனால், பெண்ணோ நிச்சயத்தில் அவ்வளவாக விருப்பம் காட்டாமல் இருக்கிறாள். ஒரு நெருக்கம் இல்லை. புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்கும்போதும் கூட சரியான ஒத்துழைப்பு இல்லை. ஒருவித வெறுமையாக இருக்கிறாள். திருமணம் பின்பு சரியாகி விடும் என்று சரண் நினைக்கிறார். முதலிரவிலும் தங்களுக்கு செய்திருந்த அலங்காரங்கள் எல்லாவற்றையும் மிகவும் கோபமாக தூக்கி வீசுகிறாள். இதெல்லாம் சரணுக்கு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு அன்பாக பேசியும் அவளிடம் சரியான பதிலில்லை. கணவன் மனைவி ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதை சந்தேகித்து சரணுடைய அப்பா அவனை விசாரிக்கிறார். மனம் தாங்காமல் சரணும் சொல்லி விடுகிறார். அவர் பெண் வீட்டினருக்கும் சொல்லி பெண்ணின் தந்தை அவளிடம் விசாரிக்க அவள் ஏதோ சமாளித்து விடுகிறாள். 

தேனிலவுக்கு அந்த பெண் தன் தம்பி இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் கொள்ள அங்கேயே போகிறார்கள். அங்கும் தம்பியுடனே சுற்றுவது என்று கூட வருகிறான். இருவரும் அங்கே மனமில்லை என்றாலும் சேர்ந்து இருந்து விடுகிறார்கள். அதற்கு பின் சென்னையில் தனி வீடு பார்த்து போய் விடுகிறார்கள். அங்கே அவள் கர்ப்பமாகிறாள். சரண் மற்றும் அவரது பெற்றோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அந்த பெண்ணிற்கு இந்த குழந்தை வேண்டாம் என்றும் ஒரு இரண்டு வருடம் நன்கு சேர்ந்து வாழ்ந்த பின்னர் பெற்று கொள்ளலாம் என்று அழிக்க நினைக்கிறாள். இது சரணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரண் பெற்றோர் பார்க்க வந்திருந்த போதும் கூட அவர்களிடம் சரியாக முகம் குடுத்து பேசவில்லை. அவள் பின்னர் தன் அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டு பாட்டி வீட்டிற்கு சென்று விடுகிறாள். போனவள் பத்து நாட்கள் கழித்து வருகிறாள். டாக்டர் செக்கப் கேட்டதற்கு தன் குழந்தை நிற்கவில்லை என்று சொல்லி விடுகிறாள். 

அதில் ஆரம்பித்து இரு வீட்டிலும் புரிதல் இல்லாமல் போய் அடிக்கடி பிரச்சனை, தகராறு என்று ஆகிறது. இரண்டு மாதம் அப்படி போக, கடைசியில் அந்த பெண் சரணுடன் போய் வாழ மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். பெற்றவர்களும் சரணும் சேர்ந்து வாழ அறிவுரை சொல்லி, இனிமேல் புதிதாக சேர்ந்து வாழலாம் என்று பலவாறு பேசி அனுப்பி வைக்கிறார்கள். அவனுடன் வந்த பின்னர் தன் தோழிக்கு கல்யாணம் பெங்களூரில் நடக்கிறது. போய் பார்க்கப் போகிறேன் என்று நகையை லாக்கரில் இருந்து எடுக்கிறாள். மாமனார் வந்து பார்த்த போது அவரிடம் சொல்ல, அவர் எடுத்து போகும் நகையை குறித்து வைக்க சொல்கிறார். அவரிடம் நீங்கள் எனக்கு போட்ட வைர நெக்லஸ் ரொம்ப பிடித்தது மாமா. நான் என்ன என் நகை, உங்கள் நகை என்று பிரித்தா பார்க்கிறேன் என்று அன்பாக பேச அவரும் இறங்கி எது வேண்டுமோ எடுத்து செல்லுமாறு சொல்கிறார். ஆனால் இவளோ அவர்கள் நகையை வைத்து விட்டு தன் அம்மா வீட்டில் போட்ட நகையை எடுப்பது போல நடித்து  பையன் வீட்டு நகை எல்லாமே எடுத்து சென்று விடுகிறாள். அதன் பின்னர் திரும்பி இங்கே வரவே இல்லை. 

இரண்டு வருடம் மேல் ஆனது. அடுத்து சரண் குடும்பம் மேல் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, என்று எல்லா கேஸ் போட்டு, பெண்ணின் அப்பா சரணுக்கு கார் வாங்கிக்கொள்ள சொல்லி அன்பளிப்பாக கொடுத்த இருபது லட்சத்தையும் இவர்கள் வேண்டுமென்றே வாங்கி கொண்டு வீட்டை விட்டு தன்னை துரத்தி விட்டதாக வேறு புகார்கள். போலீஸ் கைது செய்யும் வரை வழக்கு ஆகிறது. எல்லாருக்கும் பெயில் வாங்கி, ஸ்டேஷனில் கையெழுத்து வாங்கி வழக்கு மேல் வழக்கு போட்டு இறுதியில் சரண் வெறுத்து போய் அவரே விவாகரத்து பதிவு செய்தார். அந்த பெண்ணிற்கும் விவாகரத்து தான் வேண்டும் என்றாலும் அவர்கள் மேல் போட்ட எல்லா வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றால் தனக்கு ஐந்து கோடி பணம் வேண்டும் என்று கேட்டாள். மீடியேஷன் போட்டும் பலனில்லை. வழக்கை வேண்டுமென்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பி அங்கு மீண்டும் மீடியேஷன் போட்டு பேசியதில் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கு ஒத்துக்கொண்டு மியூச்சுவல் கன்செண்ட் போட்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இப்பொழுது சரண் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அந்த பெண் தன் தோழியுடன் சேர்ந்து ஏதோ கடை வைத்திருக்கிறாள் என்று தெரிய வந்தது.

Next Story

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்ததால் பிரச்சனை; கதறிய அப்பாவி கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 53

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 advocate-santhakumaris-valakku-en-53

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அவசரமாக ஒரு நபர் ஒருநாள் என்னுடைய அலுவலகத்தில் வந்திருந்தார், அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்கமுடியாது என்பதால், நான் அனுமதிக்காமல் இருக்க, சிறிது நாள் கழித்து அப்பாயின்மென்ட் வாங்கியபின் நான் அவரை சந்தித்தேன். அவரும் மிக பதற்றமாக என்னிடம் பேசினார். தான் ஒரு விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்தவர் என்றும், இப்போது அந்த பெண் தன்னை வீட்டினுள்ளே விடுவதில்லை என்றும் பதற்றமாக பேசினார். என்ன ஆனது என்று கேட்டபின் தான் சொல்ல ஆரம்பித்தார். 

அந்த பெண்ணை அவர் முதலில் ஒரு தெரிந்த விழாவில் சந்தித்ததாகவும், பிடித்திருந்ததால் விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே கோர்ட்டில் விவாகரத்து கேஸ் போய்க்கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது. பின்னர் கேஸ் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவளுக்கு முதல் கணவனால் வந்த குழந்தையையும் ஏற்று கொள்கிறார். திருமணம் ஆன பின்னர் இவர்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. இருவரையும் அவர் ஒன்றாக தான் வைத்து வளர்க்கிறார், ஆனால் மற்றவர்கள் சும்மா இல்லாது, அவர் தன்னுடைய குழந்தையை மட்டும் எப்படி கொஞ்சுகிறார் பார். தன் மகனை மட்டும் நன்றாக வளர்க்கிறார் என்று ஏற்றி விட, இவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி விடுகிறது.

இவர் வெளியில் சென்று சாதாரணமாக  நண்பர்கள் என்று சந்தித்து  வந்தாலும், உன் கணவனை நான் வேறொரு பார்ட்டியில் பார்த்தேன் என்றெல்லாம் அவளின் நண்பர்கள் கூற கூற இவளுக்கு தேவையில்லாத சந்தேகம் தானாக வருகிறது. வீட்டிற்கு வந்ததும் கணவனிடம் ஒழுங்காக பேசுவதில்லை, எது பேசினாலும் சரியாக பதிலளிப்பதில்லை. பார்ட்டி என்று சென்று வருவதை சொல்லிக் காட்ட, இவர் தனக்கு அது வெறும் பொழுதுபோக்கு தான் என்று சொல்லிவிட்டு, அடுத்தமுறை அவளையும் கூட்டி போவதாகச் சொல்கிறார். ஆனால் அவளை அழைத்துப் போக ஆபிசில் அதுவரை எந்த பார்டியும் நடக்கவில்லை. அதனை புரிந்துகொள்ளாமல் மேலும் கோவப்படுகிறாள்.

எல்லாரும் இல்லாததை சொல்ல சொல்ல, அந்த முதல் கணவனின் பதினாறு வயது மகன் அவரை வெறுக்கிறான். ஒருநாள் குடித்துவிட்டு வந்ததில், அந்த பதின்வயது பையன் மரியாதை இல்லாமல் பேச பிரச்சனை பெருசாக ஆகிறது. 

கையை ஓங்குவது என்று அவரை அடக்கும் அதிகாரம் எடுத்துக் கொள்கிறான். அவருக்கென்று அவருடைய காரும் கொடுக்காமல், வாங்கிக் கொள்வது, பணத்தை எண்ணி பார்ப்பது போன்ற வேலையை எல்லாம் செய்கிறான். எல்லை மீறி அடிப்பது வரை ஆகிறது. ஒருநாள் அந்த பையனே குடிக்க ஆரம்பித்து விடுகிறான். தந்தை தடுக்க போய், பாட்டிலாலே அடித்து விடுகிறான். சின்ன பையனையும் அடக்கி வைத்திருக்கிறார்கள். இவருக்கு வீட்டில் மரியாதை இல்லை என்று தெரிய வருகிறது. வீட்டில் பணம் வைப்பதை நிறுத்தி விடுகிறார். சாப்பாடு போடுவது, கவனிக்கிறது என்று கிடையாது. தகராறு ஆகி வெளியே வந்து அப்போது தான் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று என்னிடம் வந்தார். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்ல, அங்கு கவனிக்காததால், கமிஷனருக்கு மெயில் அனுப்பினார். பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

காவலர்கள் வீட்டிற்கு சென்று விசாரிக்க, இதனால் மேலும் அந்த அம்மா, பையன் என்று இவரிடம் அதிகமாக தகராறு செய்ய, மீண்டும் என்னிடம் வந்து என்ன செய்வது என்று நின்றார். எனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியை வைத்து அவர்கள் தரப்பில் பேச வைக்க ஏற்பாடு செய்யச் சொல்ல, அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் முடிவானது. போய் பேசவைப்பது என்று வாரக்கணக்கு ஆனது. ஆனாலும் அந்த அம்மாவிற்கு இவருடன் வாழ விருப்பமே இல்லை என்று தெரிய வந்தது. சரி வாழப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடலாமே என்று பேச, நான் இவரை விட்டு வெளியே தெருவிலா நிற்க முடியும். எனக்கும், என் பையனுக்கும் செய்ய வேண்டிய செட்டில்மென்டை கொடுக்கச் சொல்லுங்கள் என்றாள். சட்டப்படி அந்த பையனுக்கு பதினெட்டு வயது ஆனதால், அவனுக்கு இவர் செட்டில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவனே தான் வேலைக்கு போய் பார்த்து கொள்ளவேண்டும்.  பையனுக்கு நான் லீகல் கார்டியனாக இருக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

எனக்கு நிரந்தர ஜீவனாம்சம் எழுபது லட்சம் வேண்டும் என்று கேட்டாள். அவ்வளவு பணம் முடியாது என்று முழுமனதாக இவர் நிராகரிக்க கடைசியாக முப்பது லட்சம் வாங்கிக்கொள்ள ஒத்துக்கொள்கிறாள். அவரும்  பையனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு, எப்போது வேண்டுமோ அவள் வந்து பார்க்கலாம் என்றும் தான் அனுமதிப்பதாகவும் சொல்கிறார். ஆனால் மாறாக, தன்னுடைய பிளாட்டிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றார். முடிந்தவரை மறுத்தாலும், இறுதியாக ஒத்துக்கொண்டு செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் தவணை செட்டில்மென்ட் குடுத்து, இருவர் பேரில் இருந்த வீட்டின் ஒரு பாதி தொகையை இவர் பெறுமாறு பெட்டிஷன் போட்டு, எல்லாம் தொகை குடுத்து முடிக்க ஆறு மாத காலம்  ஆனது. டிவோர்ஸ் ஆன அன்று மாலையே வீட்டின் சாவியை கோர்ட்டில் வந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு சொல்லப்பட்டு கடைசியாக வழக்கு முடிந்தது.