Skip to main content

அதிமுகவின் தோற்றமும் இரட்டை இலையும்! சின்னங்களின் கதை #3

Published on 07/05/2019 | Edited on 08/05/2019

எம்.ஜி.ஆரின் இரட்டை நாடி முகத்தை மைனஸ் பாய்ண்ட்டாகக் கூறி, அவரை மந்திரிகுமாரி படத்தில் நாயகனாக ஏற்க தயாரிப்பாளர்கள் மறுத்தார்கள். உடனே, எம்.ஜி.ஆரின் மெட்டியில் உள்ள பள்ளத்தில் சிறிய தாடியை ஒட்டவைத்து, இவர்தான் எனது கதையின் நாயகன் என்று பிடிவாதமாகச் சொல்லி, அவரை கதாநாயகனாக்கியவர் கலைஞர்.

 

mandhiri kumari mgr



அபிமன்யு படத்திற்கு வசனம் எழுதும்போதே எம்.ஜி.ஆரைக் கவனித்து அவருடன் நண்பரானார். ராஜகுமாரியில் அந்த நட்பு நெருக்கமானது. இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆரின் முகத்தோற்றத்தில் ஒரு உறுத்தல் இருந்தது. அதுதான் அவருடைய இரட்டை நாடி. அந்த இரட்டை நாடியைத்தான் மந்திரிகுமாரி படத்தின் டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன் குறையாகச் சொன்னார். அவரையே சமாளித்து தனது கதையின் நாயகனாக்கினார் கலைஞர்.

அதாவது 1947 ஆம் ஆண்டிலிருந்தே சினிமா ஸ்டுடியோக்களில் இருவரும் நண்பர்களானார்கள். 1953 ஆம் ஆண்டுதான் எம்.ஜி.ஆரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தி திமுகவில் இணைத்தார் கலைஞர். அப்போதிருந்தே இருவரும் திமுகவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார்கள். ஏற்கனவே கே.ஆர்.ராமசாமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் திமுகவில் இருந்தாலும், கலைஞர்தான் முழுநேர திமுக உறுப்பினராகத் தமிழகம் முழுவதும் சுற்றியவர். அவருடைய பேச்சைக் கேட்க தனியே ஒரு கூட்டம் உருவானது.

நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்களுக்குக் கிடைக்காத நண்பர்கள் கூட்டம் கலைஞருக்குக் கிடைத்தது. தமிழகம் முழுவதும் கூட்டம் பேசச் செல்லும் கலைஞர், தான் போகிற ஊர்களில் உள்ள கழகத் தோழர்களை மட்டுமல்லாமல், தனது திரைப்பட வசனங்களை ரசிப்போரையும் சந்தித்து திமுகவில் இணைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மற்ற முன்னணித் தலைவர்கள் தாங்கள் செல்லும் பொதுக்கூட்டங்களில் கட்சி நிர்வாகிகளை மேடையில் சந்திப்பதோடு சரி. ஆனால், கலைஞர், தன்னை பேச அழைக்கும்வரை மேடைக்கு பின்புறம் உள்ளூர் கட்சிப் பிரமுகர்களிடம் தோழமையை ஏற்படுத்திக் கொள்வார். தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடர்பிலும் இருந்தார். திமுக முதன்முதல் தேர்தலில் போட்டியிட்டபோதே வாய்ப்புக்கிடைத்து குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு ஏரியா பண்ணையாரை திண்ணைப் பிரச்சாரத்தின் மூலம் ஜெயித்தார் கலைஞர். 
அப்போதிருந்து கட்சிக்குள் அவருக்கும் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கும் எதிராக ஒரு குழு உருவானது. கலைஞருக்கு கட்சியில் கிடைக்கும் முக்கியத்துவதைச் சகிக்கமுடியாத ஈ.வி.கே.சம்பத் முதல்முறையாகக் கட்சியை பிளந்தார். ஆனால், அந்த பிளவு திமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 


 

mgr with karunanidhi


1967 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மிகப்பெரிய கோபம் மக்கள் மத்தியில் இருந்தது. அத்துடன் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவமும் சேர்ந்துகொண்டது. திமுக அணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கூட நிறையாத நிலையில் அண்ணா மறைந்தார். அதைத்தொடர்ந்து திமுகவின் பொருளாளராக இருந்த கலைஞருக்கு பெரும்பாலான கட்சி நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் கலைஞரை ஆதரவளிப்பதை எம்ஜியாரும் அறிந்தார். நீண்டகால நண்பர் என்பதால் எம்.ஜி.ஆரும் ஆதரி்ததார். கலைஞர் முதல்வரானார்.

கலைஞர் முதல்வரான சமயத்தில் எம்.ஜி.ஆர் அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்தால் இருவருக்கும் இடையிலான உறவை புரிந்துகொள்ள முடியும். மத்தியில் இந்திரா அரசுக்கு ஆதரவு அளித்ததால் அங்கும் திமுகவின் செல்வாக்கு அதிகரித்திருந்தது. அதேசமயம், தமிழ்நாட்டுக்கென தனித்தன்மையையும் திமுகவின் தனித்தன்மை, அதன் கொள்கைகளை அமல்படுத்துவதில் உறுதி என்று கலைஞர் பெரியார், அண்ணா ஆகியோரின் அடியொற்றி செயல்பட்டார். தந்தை பெரியாரின் விருப்பம் அறிந்து அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய சமூகநீதி திட்டங்கள் பலவற்றை சட்டவடிவமாக்கினார்.

1970ல் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தையும் பிறப்பித்தார் கலைஞர். இந்த சட்டம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கப்பட்டது. தமிழக அரசும் இந்தத் தடையை எதிர்த்து வழக்காட முடிவுசெய்தது. மாநில உரிமைகளுக்காக கலைஞரின் குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்தது. மாநில சுயாட்சிக்காக நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவையும் கலைஞர் அமைத்தார். தேசியக் கொடியுடன் தலைமைச் செயலகத்தில் தமிழகத்துக்கென்று ஒரு கொடியையும் கலைஞர் வடிவமைத்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.

விடுதலை தினத்தன்று மாநில ஆளுநர்கள் கொடியேற்றும் முறையை மாற்றி மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றதிலும், அரசு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கடவுள் வாழ்த்து பாடும் முறையை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கச் செய்ததிலும் கலைஞரின் நடவடிக்கைகள் மத்திய அரசை மட்டுமின்றி பார்ப்பனர்களை மிகவும் அச்சுறுத்தியது.


 

pillayo pillai mkm

மு.க.முத்து



எனவேதான் 1971 தேர்தலில் திமுக ஆட்சியை ஒழித்தே தீருவேன் என்று ராஜாஜி சபதம் செய்து காமராஜருடன் கூட்டணி அமைத்தார். இந்திரா காங்கிரஸ், சிபிஐ, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணியில் இந்திரா காங்கிரஸுக்கு மக்களவைத் தொகுதியில் மட்டும் 9 தொகுதிகளை கலைஞர் ஒதுக்கினார். சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியைக்கூட ஒதுக்க கலைஞர் மறுத்துவிட்டார். கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில், தந்தை பெரியார் ராமர் சிலையை செருப்பால் அடித்தார் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டது. திமுகவுக்கு எதிராக நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 203 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்றது. மக்களவைக்கு நடந்த தேர்தலில் திமுக 23 இடங்களையும் இந்திரா காங்கிரஸ் 9 இடங்களையும் மொத்தத்தில் கூட்டணி 38 இடங்களையும் வென்றது.

இந்த வெற்றி டெல்லியை 
திகைக்க வைத்தது. கலைஞரின் மாநில உரிமைப் போக்கும், சமூகநீதித் திட்டங்களும், அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முன்னுரிமையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டமும் அவர்களுடைய ஆதிக்கத்தை அடியோடு தகர்த்துவிடும் என்று அஞ்சினார்கள். திமுகவை உடைக்க சரியான ஆளைத் தேடினார்கள். அச்சுறுத்தலுக்கு பயப்படும் ஆளாக இருக்க வேண்டும். அதேசமயம் தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றவராக இருக்க வேண்டும் என்று தேடியதில் எம்.ஜி.ஆர் சிக்கினார். தேர்தல் முடிந்த கையோடு மதுரையில் திமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் பேரணியில் முகப்பில் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து குதிரைமீது அமர்ந்து திமுகவின் கொடியை பிடித்தபடி வந்தார். அவர் அப்போதுதான் கலைஞர் கதை வசனம் எழுதிய பிள்ளையோ பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருந்தார். அந்தப் படத்தை எம்.ஜி.ஆர்தான் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்திருந்தார். 

இப்படி இருந்த நட்பு... பின் கட்சியில் நடந்த பிளவு... அடுத்த பகுதியில் பார்க்கலாம்...  

 

முந்தைய பகுதி...

கிடைத்தது எளிது, ஆனால் தக்கவைத்தது பெரிது! திமுகவுக்கு 'உதயசூரியன்' கிடைத்த கதை... சின்னங்களின் கதை #2

 

 

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.