Skip to main content

எட்டு வருட காத்திருப்புக்கு கிடைத்த வெற்றி; கையிலே ஆகாசமாய் கிடைத்த இந்திய அணி வாய்ப்பு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
​  A victory after an eight-year wait; The Indian team got a chance in hand  ​​    ​

ஒரு வீரர் உள்ளூர் போட்டிகளில் 2014இல் ரஞ்சி போட்டிகளில் அறிமுகமாகி 14 சதங்கள், 11 அரை சதங்கள் என உள்ளூர் முதல்தர போட்டிகளில் ரன் மெஷினாக தன்னை மாற்றியுள்ளார். அரை சதங்களைக் காட்டிலும் சதங்களின் எண்ணிக்கை அதிகம். பேட்டிங் சராசரி 69.85ஐ வைத்துள்ளார். சிவப்பு நிற பந்துகளின் ஸ்ட்ரைக் ரேட் 70.48. இவ்வளவு சிறப்பாக விளையாடியும்  எட்டு வருடமாக இந்திய அணியில் இடம் என்பது எட்டாக்கனியாக இருந்தது அந்த இளம் வீரருக்கு. இருந்தும் மனம் தளராத அந்த வீரர் இந்த வருடம் கிடைத்த முதல் தர போட்டி வாய்ப்பிலும் முத்திரை பதிக்கும் அளவு தன்னுடைய பேட்டிங்கை மெருகேற்றி வந்தார்.

2019 - 20 ரஞ்சி சீசன் முதல் இன்னும் சிறப்பாக விளையாடத் தொடங்கினார். இருப்பினும் இந்திய அணியில் தேர்வாகும் வாய்ப்பு தள்ளிக் கொண்டே போனது. காரணம் இவரின் ஃபிட்னஸ் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்கும் ரோஹித் சராசரி உடலமைப்போடு நன்றாக ஆடும்போது அவரால் ஆட முடியாதா என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு அதிர்வுகள் எழுந்தது. கடந்த ஒரு வருட காலமாக அணிக்கு இந்த வீரர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் உட்பட பலரும் கூறி வந்தனர்.

இடைவிடாமல் சிறப்பாக ஆடிய அவர் இங்கிலாந்து முதல் தர அணிக்கு எதிராக முத்தான சதத்தைக் கடந்தார். அதுவும் 100 ஸ்ட்ரைக் ரேட்டில். அதிரடியாக விளையாடி 161 ரன்கள் குவித்தார். அதன் பலனாக தற்போது அந்த இளம் வீரரின் 8 வருட உழைப்புக்கு பதில் கிடைத்துள்ளது. கோலியின் விருப்ப ஓய்வு, ராகுலின் காயம் என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார் அந்த வீரர்.

A victory after an eight-year wait; The Indian team got a chance in hand

எட்டு வருடமாக உழைத்த உழைப்புக்கு எட்டாக்கனியாக இருந்த இந்திய அணி வாய்ப்பு தற்போது கிட்டி உள்ளது. ராகுல் இல்லாததால் ஆடும் லெவனில் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீரர் தான் சர்பிராஸ் கான். கடந்த சில ஆண்டுகளாக யாவரும் வியக்கும் வண்ணம் முதல் தர ரஞ்சி போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். ஃபிட்னஸ் காரணமாக புறக்கணிக்கப்படுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தாலும், தொடர்ச்சியான தனது சிறப்பான ஆட்டத்தாலும், பொறுமையாலும் தனது இந்திய அணிக்காக ஆடும் கனவை நினைவாக்கியிருக்கிறார்.

வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்பது போய், வெளிநாடுகளின் சுழற்பந்து வீச்சாளர்களும் தற்போது ஐபிஎல் போட்டிகள் மூலமாக இந்திய பிட்சுகளில் சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொள்ளும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் சர்பிராஸ் கான் அதைப் போக்குவார் என்று நம்பலாம். வேகப்பந்து, சுழற்பந்து என இருவித பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை சர்பிராஸ் கானுக்கு உள்ளது. ஒரு சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கு உள்ள அனைத்து தகுதிகளும் உள்ளதால், இவர் கோலி பொன்று ஒரு சிறப்பான வீரராக உருவாக வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

சஞ்சு, சர்பிராஸ் கான் என்று வாய்ப்பு அரிதாக கிடைக்கும் வீரர்கள் மத்தியில் இஷான், க்ருனால் போன்ற வீரர்கள் கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டு, ரஞ்சி போட்டிகளிலும் ஆட மாட்டேன் என்பது இளம் வீர்களுக்கு அழகல்ல என்று முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.