Skip to main content

"அவரைப்போல் இருக்க முயற்ச்சிக்கிறேன்" - தனது ஹீரோவிற்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

SACHIN ON GAVASKAR

 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான ஐம்பதாவதுவது ஆண்டு இது. சச்சினுக்குப் பிறகு இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாய் இன்று விராட் கோலி இருப்பதுபோல், சச்சினுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்தவர் கவாஸ்கர். சச்சின் டெண்டுல்கருக்கு ரோல் மாடலும் இவரே.

 

கவாஸ்கர் கிரிக்கெட்டிற்கு வந்த 50வது ஆண்டையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சச்சின், அவரால் கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் புதிய அர்த்தம் கிடைத்துள்ளதாகவும், இன்றும் கவாஸ்கர்தான் தனது ரோல் மாடலாக தொடருவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் அவர் கிரிக்கெட் உலகில் புயலாக நுழைந்தார். அவர் தனது முதல் தொடரில் 774 ரன்கள் எடுத்தார். அப்போது வளர்ந்து வந்த எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹீரோ கிடைத்தார். மேற்கிந்தியத் தீவுகளிலும் பின்னர் இங்கிலாந்திலும் இந்தியா தொடரை வென்றது. திடீரென்று இந்தியாவில் (கிரிக்கெட்) விளையாட்டுக்கு ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது. ஒரு சிறுவனாக, நான் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள ஒருவர் இருக்கிறார் என தெரிந்துகொண்டதோடு, அவரை போல் இருக்க முயற்சி செய்தேன். அது எப்போதும் மாறவே இல்லை. இப்போதும் அவர்தான் எனது ஹீரோ. சர்வதேச கிரிக்கெட்டில் உங்களின் 50வது ஆண்டிற்கு வாழ்த்துக்கள் கவாஸ்கர்" எனத் தெரிவித்துள்ளார்.

 

1971 அணியில் இடம்பெற்றவர்களுக்கும், இது சர்வதேச கிரிக்கெட்டில் 50வது ஆண்டு ஆகும். அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின், 1971 அணியிலிருந்த அனைவருக்கும் 50வது ஆண்டிற்கு வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் எங்களை பெருமைப்படுத்தியதோடு, வெளிச்சத்தையும் காட்டினீர்கள்" எனக் கூறியுள்ளார்.

 

 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.