இந்திய அணியில் 18 ஆண்டுகளுக்கு முன்பு 9 விரல்களுடன் விக்கெட் கீப்பர் ஒருவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார் என்றால் அது நம்பும் படியாக இருக்கின்றதா? இந்த கேள்வி இயல்பாக நம் எல்லோர் மனதிலும் எழும். கடந்த 2000 ஆண்டுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக கங்குலி இருந்தபோது அவரது அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் பர்தீவ் பட்டேல். 2002ம் ஆண்டு தன்னுடைய 16ம் வயதில் இந்திய அணிக்காக களம் இறங்கினார். சில ஆண்டுகள் இந்திய அணியில் விளையாடிய அவர், தோனியின் வருகைக்கு பின் வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்தார்.
கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்தபோது, அந்த போட்டிகளில் களம் இறங்கி விளையாடினார். மேலும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் அணிக்காக ஆடிவந்தார். இந்நிலையில் இந்த டாக் டவுன் நேரத்தில் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், " நான் சின்ன வயதில் படு சுட்டியாக சேட்டைகள் செய்து கொண்டிருப்பேன். அப்படி ஒருநாள் குறும்பு செய்யும்போது என சுண்டு விரல் கதவிடுக்கில் மாட்டிக்கொண்டு துண்டானது. அதனால் சிறுவயது முதல் ஒன்பது விரல்களுடனே இருந்து வந்தேன். 9 விரல்களை வைத்து இந்திய அணிக்காக விளையாடிய ஆட்டம் நெஞ்சில் நிற்கிறது. 9 விரல்கள் மட்டுமே இருந்ததால் பல சமயங்களில் விக்கெட் கீப்பிங் செய்வது என்பது எனக்கு கடினமாக இருந்தது" என்றார்.