Skip to main content

நேபாளம் அணி ஃபிக்ஸ் செய்த பெஞ்சு மார்க்! கிரிக்கெட் ரசிகர்கள் வியப்பு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Nepal team fixed the bench mark! Cricket fans are amazed

 

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்றுவருகிறது. கடந்த 23ம் தேதி துவங்கிய இந்தப் போட்டி வரும்  அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் இந்த போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இதில் இந்தியா இதுவரை மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதில், பெண்கள் கிரிக்கெட் போட்டியில் ஏற்கனவே இந்திய மகளிர் அணி இறுதி போட்டியில் இலங்கையை எதிர்கொண்டு வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 

 

இந்நிலையில், ஆசியப் போட்டியில் ஆண்கள் டி.20 கிரிக்கெட் போட்டி ஹாங்சோ நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இதில் இன்று, மங்கோலியா - நேபாளம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கில் இறங்கிய நேபாளம் அணியின் துவக்க வீரர்களான குஷல் புர்டேல், ஆசிஃப் சேக் ஆகியோர் முறையே 19 மற்றும் 16 ரன்களில் வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களத்திற்கு வந்த குஷல் மல்லா மற்றும் திபேந்திர சிங் ஐரி ஆகிய இருவரும் மங்கோலியா அணியை தனது சிக்ஸர்களாலும், பவுண்டரிகளாலும் புரட்டி எடுத்தனர். 

 

குஷல் மல்லா, பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் தூக்கி அடித்து 34 பந்துகளில் 100 ரன்களை கடந்து அசத்தினார். இவர் 50 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

 

குஷல் மல்லா மலைக்க வைக்க, திபேந்திர சிங் ஐரி 9 பந்துகளிலேயே 8 சிக்ஸர்கள் அடித்து அரை சதத்தை கடந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்து அசத்தினார். இதில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களையும் அவர் அடித்தார். இவர்களின் வானவேடிக்கை ஆட்டத்தால் நேபாள அணி மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 314 ரன்களை எடுத்து, மங்கோலியா அணிக்கு 315 ரன்களை டார்கெட்டாக ஃபிக்ஸ் செய்தது. 

 

இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவந்த மங்கோலியா அணி வீரர்கள் துவக்கம் முதலே நேபாளம் அணிவீரர்களின் பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க அந்த அணி 13.1 ஓவரில் 41 ரன்கள் எடுத்து ஆல்-ஆவுட் ஆனது. இதன் மூலம் நேபாள அணி 273 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

 

இந்தப் போட்டியில் நேபாள அணி பல சாதனைகளைப் புரிந்துள்ளது. அதன்படி 314 ரன்கள் குவித்த நேபாள அணி, டி.20 போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என வரலாறு படைத்துள்ளது. 

 

2007ல் நடந்த டி.20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வீரர் யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை அடித்து 12 பந்துகளில் அரை சதம் விளாசியிருந்தார். இந்தச் சாதனையை முறியடித்த நேபாள வீரர் தீபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் 8 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 

 

273 ரன்கள் வித்தியாசத்தில் மங்கோலியா அணியை வீழ்த்தி டி.20 போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையையும் படைத்து நேபாள அணி முத்திரை பதித்துள்ளது. 

 

 

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

கிரிக்கெட் கதைக்களத்தை கையிலெடுத்த ஜேசன் சஞ்சய்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
jason sanjay movie update

விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவரது மகனான ஜேசன் சஞ்சய், கனடா பல்கலைக்கழகத்தில் சினிமா துறை சம்பந்தமாகப் படித்து வந்தார். இவர் குறும்படம் இயக்கும் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இயக்கம் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  இப்படத்தை லைகா தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. 

பின்பு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி லால் சலாம், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

மேலும் டெஸ்ட் என்ற தலைப்பில் சசிகாந்த் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி வருகிறது.