Skip to main content

"இதை பிசிசிஐ-யிடம் விட்டுவிடுங்கள்" - விராட் கோலி விவகாரத்தில் முதல்முறையாக பேசிய கங்குலி!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

virat kohli

 

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் நீக்கப்பட்டது குறித்து பதிலளித்த கங்குலி, "இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ விராட்டை கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை" என தெரிவித்தார்.

 

மேலும் கங்குலி, "ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தனித் தனி கேப்டன்கள் இருப்பது சரியானதல்ல என தேர்வாளர்கள் நினைத்தார்கள். எனவே, விராட் டெஸ்ட் கேப்டனாக தொடர்வார் என்றும் ரோகித் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு குறித்து (பிசிசிஐயின்) தலைவர் என்ற முறையில் நான் விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன், தேர்வுக்குழு தலைவரும் அவருடன் பேசியுள்ளார்" எனக் கூறினார்.

 

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விலக வேண்டாம் என யாரும் கூறவில்லை என தெரிவித்தார். மேலும், "டெஸ்ட் அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் என்னை தொடர்புகொண்டனர். தலைமை தேர்வாளர் என்னுடன் டெஸ்ட் அணி குறித்து விவாதித்தார். அழைப்பு முடிவடைவதற்கு முன்பு, நான் இனி ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை என ஐந்து தேர்வாளர்களும் முடிவு செய்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. அதற்கு முன்பாக இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை. டி20 கேப்டன் பதவியைவிட்டு விலகும் முன்னர் பிசிசிஐயிடம் அதுகுறித்து தெரிவித்தேன். எனது கருத்தை அவர்களிடம் சொன்னேன். அதைப் பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று கூறி அதனைப் பிசிசிஐ வரவேற்றது" என்றார்.

 

கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் நீக்கப்பட்டது தொடர்பாக, கங்குலி கூறியவற்றிலிருந்து முரண்பட்ட ஒன்றை விராட் கோலி கூறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் வீரர்களும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என குரலெழுப்பினர். அதேநேரத்தில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து சர்ச்சைக்கு விளக்கம் அளிப்பார் எனக் கூறப்பட்டது.

 

இந்நிலையில் கங்குலி, விராட் கோலி விவகாரத்தில் "அறிக்கை வெளியிடப்படாது. செய்தியாளர் சந்திப்பு நடைபெறாது. நாங்கள் இதைக் கையாள்வோம். இதைப் பிசிசிஐயிடம் விட்டுவிடுங்கள்" எனக் கூறியுள்ளார். விராட் கோலியின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

RCB vs SRH: ஒன் மேன் ஷோ காட்டிய தினேஷ் கார்த்திக்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Dinesh Karthik who showed one man show!

40 ஓவர்கள் 549 ரன்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் பந்து வீச்சாளர்கள் வாழ்க்கையில் மறக்க நினைக்கும் நாளாகவும், பேட்ஸ்மேன்கள் வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக மனதில் நிறுத்தும் நாளாகவும் ஏப்ரல் 15 இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவால் 434 அடிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் அந்த 434 ஐயும் துரத்திப் பிடித்து வரலாறு படைத்தனர், தென் ஆப்பிரிக்க அணியினர். முக்கியமாக கிப்ஸின் ஆட்டமானது கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று.

அந்த ஆட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டம். கிப்ஸ் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு கிடைத்த வெற்றி போல ஆர்.சி.பிக்கும் கிடைக்க வேண்டியது. ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பலால் வெற்றிக்கனியின் அருகில் போய் தவறவிட்டுள்ளது ஆர்.சி.பி.

ஐபிஎல்2024 இன் 30ஆவது லீக் ஆட்டம் பெஙகளூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஏன் பவுலிங்கை தேர்வு செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு ஹைதராபாத் அணி பேட்டிங் இருந்தது. ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் தங்களது அலட்சியமான அதிரடியால் எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.

உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஹெட், நேற்று பெங்களூரு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தார். ஒரு மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ஹெட், இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 9 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 40 பந்துகளி சத்தைக் கடந்தார். கடந்த சில ஆட்டங்களாகவே ஃபயர் மோடில் இருக்கும் கிளாசன், ஹெட்டின் அதிரடிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 31 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். மார்க்ரமும் தான் எதிர்கொண்ட பந்துகளை மைதானத்தில் சுழல விட்டு 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.

இவர்களின் அதிரடியை அலேக்காக தூக்கி சாப்பிட்டார் அப்து சமத். 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹைதராபாத் முந்தைய சாதனையான 277 ஐ முறியடித்து 287 ரன்கள் எனும் புதிய வரலாற்றைப் பதித்தது. பெங்களூரு சார்பில் பந்து வீசிய அனைவரின் எகானமியும் 10.00 க்கு மேல் இருந்தது.

பின்னர் 288 என்ற வரலாற்று இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு மோசமான தோல்விதானோ என்று ரசிகர்கள் அஞ்சிய வேளையில், நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று கோலி மற்றும் டு பிளசிஸ் அதிரடி காட்டினர். கோலி 20 பந்துகளில் 42, டு பிளசிஸ் 28 பந்துகளில் 62 என ரன் ரேட்டை அதிகரித்து இலக்கைத் துரத்தினாலும் அடுத்து வந்த இளம் வீரர்கள் வில் ஜேக்ஸ் 7, பட்டிதார் 9, செளகான் 0 என ஏமாற்றினர்.

பின்னர் வந்த பினிஷர் கார்த்திக், அதிரடியின் உச்சம் காட்டினார் என்று சொன்னால் அது மிகையாகாது. நடராஜன் பந்தில் அடித்த ஒரு இமாலய சிக்சர் 108 மீட்டர் எனும் புதிய உச்சத்தை ஐபிஎல் 2024இல் எட்டியது. 7 சிக்சர்களுடன் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அனுஜ் ராவத்தும் 14 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். வரலாற்று வெற்றியாக இருந்திருக்க வேண்டிய ஆட்டம் மிடில் ஆர்டர் சொதப்பியதால், வெற்றிக்கு அருகே வந்து கை நழுவியது. 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு தோல்வியைத் தழுவினாலும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி பேட்டிங் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மும்பை அணியுடனான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடிய போது ரோஹித், தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் வகையில் உலகக்கோப்பை தேர்வு உள்ளது என்றார். தற்போது உண்மையிலேயே உலகக்கோப்பை அணிக்கு தன்னை தேர்வாளர்கள் உற்றுநோக்கும் வகையில் ஒரு இன்னிங்சை ஆடியுள்ளார் டி.கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.