Skip to main content

நடுவரின் முடிவை எதிர்த்து பஞ்சாப் அணி நிர்வாகம் மேல்முறையீடு!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

Kings XI Punjab

 

 

நடுவர் அளித்த தவறான தீர்ப்பு பஞ்சாப் அணியின் வெற்றியைப் பறித்ததால், அம்முடிவை எதிர்த்து பஞ்சாப் அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் மேல்முறையீடு செய்துள்ளது.

 

13-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இறுதி ஓவர் வரை பரபரப்பாக சென்ற அப்போட்டியில், 20 ஓவர் முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்தன. வெற்றியைத் தீர்மானிப்பதற்கு நடந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

 

டெல்லி அணி வீரர் ரபடா போட்டியின் 19-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அடித்துவிட்டு மயங் அகர்வால் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்முனையில் நின்ற கிறிஸ் ஜோர்டனும் துரிதமாக ஓடினார். அவ்வோட்டத்தின் முடிவில், கிறிஸ் ஜோர்டன் முதல் ரன்னை  முழுமையாக முடிக்கவில்லை என்று கூறி களத்தில் இரண்டாவது நடுவராக இருந்த நிதின் மேனன் இரு ரன்கள் வழங்க மறுத்தார். பின்பு டீவி ரீஃபிளேயில் பார்க்கும்போது அவர் முதல் ரன்னை முழுமையாக முடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடியது தெளிவாக தெரிந்தது. நிதின் மேனன் இம்முடிவை சரியாக வழங்கியிருந்தால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக முடிவு மாறியிருக்கும். 

 

நடுவரின் இந்த முடிவால் பஞ்சாப் அணி ரசிகர்கள் மட்டுமின்றி, மூத்த வீரர்கள், அணி நிர்வாகம் எனப் பலர் அதிருப்தியடைந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், 'ஆட்டநாயகன் விருதை நடுவருக்கு வழங்குங்கள்' எனக் காட்டமாக தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தனார். இந்நிலையில், நடுவரின் இந்த முடிவை எதிர்த்து போட்டி நடுவரிடம் பஞ்சாப் அணி நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

 

இதுகுறித்து அவ்வணியின் தலைமை அதிகாரி சதீஸ் மேனன் கூறுகையில், "நடுவரின் தவறான முடிவு குறித்து போட்டி நடுவரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான். ஐபிஎல் போன்ற தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த ஒன்றில் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இது எங்களின் அடுத்த சுற்று வாய்ப்பைக் கூட பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. விதிமுறையை மறுபரிசீலனை செய்யவேண்டும்" எனக் கூறினார்.

 

 

Next Story

ஒரே 'தல'தான்... ரசிகைக்கு பதிலளித்த கே.எல்.ராகுல்! 

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

kl rahul

 

 

13-வது ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. சமநிலையில் முடிந்த இந்தப் போட்டியில், வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. பரபரப்பாக நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

 

முதலாவது சூப்பர் ஓவரில், கே.எல்.ராகுல் ரன் அவுட் செய்த புகைப்படத்தைப் பகிர்ந்த ரசிகை ஒருவர் என்னுடைய 'தல' எனப் பதிவிட்டார். அதற்குப் பதிலளித்த கே.எல்.ராகுல், 'ஒரே ஒரு 'தல'தான் இருக்கிறார். அது யாரென்று அனைவருக்கும் தெரியும்' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

Next Story

மயங்க் அகர்வாலை புகழ்ந்த பீல்டிங் ஜாம்பவான்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Mayank Agarwal

 

 

மயங்க் அகர்வால் பீல்டிங் குறித்து பீல்டிங் ஜாம்பவானும், பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

13-வது ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. சமநிலையில் முடிந்த இந்த போட்டியில், வெற்றியைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. பரபரப்பாக நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, வெற்றியைத் தீர்மானிக்க மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. 

 

இரண்டாவது சூப்பர் ஓவரின் இறுதிப்பந்தில் எல்லைக்கோட்டருகே நின்ற மயங்க் அகர்வால், பொல்லார்ட் அடித்து சிக்ஸருக்குச் சென்ற பந்தை லாவகமாகத் தடுத்தார். மயங்க் அகர்வாலின் இந்த பீல்டிங் பஞ்சாப் அணியின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பெரிதும் கைகொடுத்தது. இதனையடுத்து அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஜான்டி ரோட்ஸ், "மயங்க் அகர்வால் பீல்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. பொல்லார்ட் மாதிரியான வீரர்கள் களத்தில் இருக்கும் போது, பவுண்டரிகளை தடுத்து பீல்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்று நாம் முன்னரே பேசியிருக்கிறோம். அதிக நேரம் செலவிட்டு பவுண்டரி எல்லையில் பயிற்சி செய்தோம். இது நம் வீரர்களுக்கு சிறப்பு திறமையாகிவிட்டது. கடினமான நேரங்களிலும் நம் வீரர்கள் பொறுமையாக செயல்படுவதை பார்க்க சிறப்பாக உள்ளது" என பஞ்சாப் அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் பேசியுள்ளார்.