Skip to main content

தன்னை வளர்த்தெடுத்த அணிக்கு கோப்பையை பரிசளித்த நம்பிக்கை நாயகன்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் எகனாமி ரேட் 10. 2014-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 11 போட்டிகளில் விளையாடிய பும்ரா 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். 2015-ல் 4 போட்டிகளில் 3 விக்கெட்கள், எகனாமி ரேட் 12. ஆனால் பும்ராவின் திறமையை அறிந்திருந்த மும்பை அணியும், ரோஹித் சர்மாவும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தனர்.

 

jasprit bumrah

 

அந்த வாய்ப்புகளே இன்று பும்ரா எனும் உலகின் மிகச்சிறந்த பவுலிங் ஆளுமையை இந்திய அணிக்கு அளித்துள்ளது. மேலும் தன்னை வளர்த்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வெல்ல அனைத்து விதத்திலும் உதவியுள்ளார் பும்ரா. 
 

மலிங்கா தன்னுடைய பவுலிங்கில் சிறந்து விளங்கிய காலங்களில்கூட, அவரின் டெத் பவுலிங்கில் சில பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறந்தது. சில சமயம் துல்லியமான யார்கர் தவறி, ஓவர் பிட்ச்சாக சிக்சருக்கு சென்றது. ஆனால் பும்ராவின் பவுலிங்கில் சிக்சர்கள் அடிப்பது அரிதிலும் அரிதாக உள்ளது. அந்தளவுக்கு பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார் பும்ரா. 
 

ஐபிஎல் தொடரில் இதுவரை பும்ராவின் 45 பந்துகளை சந்தித்த தோனி 47 ரன்கள் மட்டுமே எடுத்து 3 முறை ஆட்டமிழந்துள்ளார். இதில் 18 டாட் பால்கள். பெஸ்ட் பினிஷர் என்று கருதப்படும் தோனியை 104.4 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே கொண்டு விளையாட வைத்தது பும்ராவின் ஸ்கில்களை காட்டுகிறது. பும்ராவுக்கு எதிராக  சற்று தடுமாற்றத்துடன் தான் விளையாடியுள்ளார் தோனி. 
 

ஒரு நாள் போட்டிகளில் 2016 முதல் இன்று வரை கிரிக்கெட் உலகில் பவுலிங்கில் இந்தியா அசத்தி வருவதற்கு முக்கிய பங்காற்றி வருபவர் பும்ரா. இன்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் ரபாடா மற்றும்  இவரை போல யாரும் யார்கர் வீச இயலாது. ஓவரின் ஆறு பந்துகளையும் யார்கர் பந்துகளாக வீசுவதில் வல்லவர். 

 

jasprit bumrah

 

திணறடிக்கும் பவுன்சர்கள், ஸ்லொவ் பால், பேட்ஸ்மேனின் அசைவை பொறுத்து அவரை நோக்கி பந்து வீசுதல் என உலகின் சிறந்த டெத் பவுலராக வலம் வருகிறார் பும்ரா. வாசிம் அக்ரம், லசித் மலிங்கா வரிசையில் இவரும் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.
 

கடந்த மூன்று வருடங்களில் ஐ.பி.ல்.-ல் 60 போட்டிகளில் 71 விக்கெட்கள், எகனாமி ரேட் 7 ரன்களை விட குறைவு. ஐ.பி.ல்.-ன் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார். இதுவரை 49  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 85 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார், எகனாமி ரேட் 4.5. சர்வதேச டி20-ல் 42 ஆட்டங்களில் 51 விக்கெட்கள்,  எகனாமி ரேட் 6.7.  இப்படி விக்கெட்கள் வீழ்த்துவதிலும், ரன்களை கட்டுபடுத்துவதிலும் வல்லவரான இவர் இந்திய அணிக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். 
 

பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கே அதிக ரசிகர்கள் இருப்பார்கள். இது கிரிக்கெட்டில் இயல்பு. அந்த இயல்பை மாற்றி வருகிறார் பும்ரா. இவருக்கு சர்வதேச அளவில் நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. 
 

இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும்போது கேப்டனின் முதல் அழைப்பு பும்ராவுக்கு தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் 40-50 ஓவர்கள், டி20-ல் 15-20 ஓவர்கள் என இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி, விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை தடுமாற செய்வதில் இன்றைய காலகட்டத்தில் இவருக்கு இணை யாரும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வெல்ல அசாத்தியத்தை நிகழ்த்திய பும்ரா அந்த அணிக்கு நம்பிக்கை நாயகன். இனி அடுத்து உலககோப்பையில் இந்திய அணிக்கு இதே போல அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.  

 

 

 

 

Next Story

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sun risers won the match ipl live score update mi vs srh

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார்.

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Story

MI vs GT: சறுக்கிய ஹர்திக்; சாதித்த சுப்மன் கில்

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
MI vs GT ipl live score update gujarat titans wins

ஐ.பி.எல் 2024 இன் 5ஆவது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்குடையே அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இரவு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் மற்றும் சஹா களமிறங்கினர். அதிரடியாகத் தொடங்கிய சஹாவை, பும்ரா தனது முதல் ஓவரிலேயெ துல்லியமான யார்க்கர் மூலம் க்ளீன் போல்டாக்கி 19 ரன்களுக்கு வெளியேற்றினார். அடுத்து கேப்டன் கில்லுடன் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் இணைந்தார். இந்த இணை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கில் 31 ரன்களில் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்மத்துல்லா 17 ரன்களில் வெளியேறினார். பிறகு வந்த மில்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் பொறுப்புடன் ஆடிய சாய் சுதர்சன் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசிக்கட்ட ஓவர்களில் ராகுல் டெவாட்டியாவின் அதிரடியான 22 ரன்கள் கைகொடுக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. விஜய் சங்கர் 6 ரன்களும், ரசித் கான் 4 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், கோயெட்ஸி 2 விக்கெட்டுகளும், சாவ்லா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷான் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்து ரோஹித்துடன் நமன் திர் இணைந்தார். ஆரம்பம் முதலே அதிரட் காட்டிய நமன் திர் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித்துடன் இம்பாக்ட் பிளேயராக டிவால்டு ப்ரீவிஸ் களமிறங்கினார். இருவரும் இணைந்து குஜராத் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் விரட்டிய வண்ணம் இருந்தனர்.

தலைமை பொறுப்பின் பாரம் இல்லாததால் ரோஹித் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடிப்பார் என மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 43 ரன்களில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ப்ரீவிஸ் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து திலக் வர்மாவுடன் இணைந்த டிம் டேவிட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவிட் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய திலக் வர்மா 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கோயெட்ஸி 1 ரன்னில் வெளியேறினார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் 10 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

குஜராத் அணி தரப்பில் அஸ்மத்துல்லா, உமேஷ், ஜான்சன், மொஹித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதன் மூலம் முதன் முறையாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள கில் வெற்றிகரமாக தனது கேப்டன்சியை துவக்கி உள்ளார். மும்பை அணிக்கு முதல் முறை கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சறுக்கியுள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 11 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்ற மோசமான வரலாற்றை 12ஆவது ஆண்டாக தொடர்கிறது. சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.