Skip to main content

ஆறுதல் வெற்றிபெற்ற இந்தியா!

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

team india

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே முதற்கட்டமாக ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அதிரடியாகக் கைப்பற்றியது. இதனையடுத்து, மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பெர்ராவில் நடைபெற்றது.

 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக தவான் மற்றும் கில் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 26 ரன்களாக உயர்ந்த போது தவான் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழ, 31.5 ஓவர்களில் 152 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணியின் ஸ்கோர் 200-ஐ நெருங்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்த நிலையில், ஆறாவது விக்கெட்டிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா இணைந்தனர்.

 

ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எளிமையாகச் சமாளித்து அதிரடி காட்டிய இந்த இணை, 50 ஓவரின் முடிவில் அணியின் ஸ்கோரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302-ஆக உயர்த்தியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 66 ரன்களும் எடுத்தனர். ஆறாவது விக்கெட்டிற்கு கைகோர்த்த இந்த இணை 108 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 150 ரன்கள் குவித்தது.

 

இதனையடுத்து, 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. துவக்க வீரர் மார்னஸ் லாபுசாக்னே விக்கெட்டை, அறிமுக வீரர் நடராஜன் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். கடந்த இரு போட்டிகளிலும் அசத்திய ஸ்மித் விக்கெட்டை இளம் வீரர் தாக்கூர் வீழ்த்த ஆஸ்திரேலிய அணி ஆட்டம் காணத் தொடங்கியது. 7-ஆவது வீரராகக் களம்கண்ட மேக்ஸ்வெல் அதிரடி காட்ட, போட்டியில் சற்று பரபரப்பு தொற்றிக் கொண்டது.

 

பின் அவரது விக்கெட்டை பும்ரா வீழ்த்த, இந்திய அணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. பின் வரிசை வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரின் முடிவில் 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்டுகளும், பும்ரா, நடராஜன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

 

cnc

 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி பறிகொடுத்த போதிலும், இன்றைய போட்டியில் பெற்ற ஆறுதல் வெற்றி இந்திய வீரர்களுக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றி அடுத்து வரவிருக்கிற 20 ஓவர் தொடரிலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

 

 

 

Next Story

“எனக்கு வருத்தம் அளிக்கிறது” - ஆஸ்திரேலிய வீரரின் செயல் குறித்து முகமது ஷமி கருத்து

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Mohammed Shami comments on the Australian player's action

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில், பிரதமர் மோடி இந்திய அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியின்  மிட்செல் மார்ஷ், வென்ற உலகக் கோப்பை மீது தனது காலை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், உலகக் கோப்பையின் மீது எப்படி கால் வைக்கலாம் என்று மிட்செல் மார்ஷ்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் முகமது ஷமி, மிட்செல் மார்ஷின் செயலுக்கு தனது வேதனையை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முகமது ஷமி, “நான் காயமடைந்திருக்கிறேன். அந்த உலகக் கோப்பைக்காக தான் உலக நாடுகள் அனைத்தும் போட்டியிடுகிறது. அந்த கோப்பையை தலைக்கு மேல் உயர்த்தி தூக்கிக்காட்ட வீரர்கள் விரும்புகின்றனர். அப்படி தலைக்கு மேல் வைக்க வேண்டிய கோப்பையில், காலை வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை” என்று கூறினார். ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷின் செயல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

T20 series against Australia; Indian team announcement

 

ஒவ்வொரு கிரிக்கெட் அணியின் கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஒரு நாள் தொடர், வழக்கம் போல் கோலாகலமாக இந்தாண்டும் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி விளையாடியதால் நிச்சயம் கோப்பையைக் கைப்பற்றுவார்கள் என இந்திய ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். மேலும் இந்தியாவில் இத்தொடர் நடைபெற்றதால் பெரும் ஆசையோடும் இருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக இறுதிப் போட்டி அமைந்தது. நேற்று நடந்த இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியைத் தழுவியது.  

 

உலக கோப்பை முடிந்ததை தொடர்ந்து இங்கேயே தங்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இத்தொடர் நவம்பர் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. 

 

இந்த நிலையில், இந்த தொடரில் பங்கு பெறும் 16 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ருத்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இஷான் கிஷான், ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் ஷர்மா (WK), வாசிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னாய், அர்ஸ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் துணை கேப்டனாக கடைசி இரு போட்டிகளுக்கு இந்திய அணியுடன் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.