Skip to main content

சிங் இஸ் கிங்... ஆஸ்திரேலியாவின் இறுமாப்பை உடைத்த சிங்...

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி, 1999-2001காலகட்டங்களில் தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி என்ற பல ஆதிக்கங்களுடனும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கே உரித்தான இறுமாப்புடனும் 2001-ஆம் ஆண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாட வந்தது அந்த அணி. அந்த தொடரில் இந்திய அணி படைத்த 2 வரலாற்று நிகழ்வுகள் ஆஸ்திரேலியா அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. 

நிகழ்வு 1: லக்ஸ்மன்-டிராவிட்டின் வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப். நிகழ்வு 2: அனுபவமிக்க ஆஸ்திரேலியா அணியை திக்குமுக்காட வைத்த 20 வயதே ஆன ஒரு இளைஞனின் சுழல் பந்துவீச்சு. அந்த தொடரில் இந்திய அணி பவுலர்களில் அந்த இளைஞனை தவிர யாரும் 3+ விக்கெட்கள் வீழ்த்தவில்லை. ஆனால் அந்த இளைஞன் மட்டும் 32 விக்கெட்களை சாய்த்திருந்தான். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த ஸ்பின் பவுலரும் அந்த இளைஞன் தான். அப்போதைய ஸ்பின் ஜாம்பவான் வார்னே அந்த தொடரில் மொத்தமாக 10 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

 

harbhajan singh cricket history

 

 

2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு கும்ப்ளேவுக்கு காயம் ஏற்பட்டது. எந்த ஸ்பின் பவுலரை அணியில் சேர்ப்பது என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. கேப்டன் கங்குலி வெளிப்டையாகவே ஹர்பஜன் சிங்கை அணியில் சேர்க்க ஆதரவுக்கரம் நீட்டினார். அதற்கு முன்னர்வரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்கள் மட்டுமே எடுத்திருந்த சிங்கை கிங்காக மாற்றியது அந்த தொடர் தான். 

சர்ச்சை, அதிரடி, ஆக்ரோஷம், என்டர்டைன்மெண்ட் என ஹர்பஜன் சிங் மிகவும் பிஸியான ஒரு வீரராகவே வலம் வந்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என இரண்டிலும் சிறப்பாக பங்களித்து வந்தார். டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பல மூத்த வீரர்கள் தடுமாறினார்கள். ஆனால் சிங் அந்த ஃபார்மேட்டிலும் அசத்தினார்.

பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். கேப்டன்களின் நம்பிக்கைக்குரிய பவுலராக இருந்தார். பல போட்டிகளில் முதல் ஓவரை வீசினார். இடது கை பேஸ்ட்மேன்கள் இவரின் பந்து வீச்சில் திணறினார்கள். 38 வயதிலும் ஐபிஎல் போட்டிகளில் அசத்தி வருகிறார். மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துதல், விக்கெட்களை வீழ்த்துதல் என தனது பவுலிங் மூலம் அணிக்கு பெரிதும் உதவியுள்ளார். 

2010-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8-வது வீரராக களமிறங்கி அடுத்தடுத்து இரு சதம் அடித்து சாதனை படைத்தார். அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 69, 115 ரன்கள் எடுத்து டிரா செய்ய முக்கிய காரணமாக இருந்தார். அடுத்த போட்டியில் 111 ரன்கள் எடுத்தார்.    

இலங்கையில் 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 170 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஹர்பஜன் வீசிய மாயாஜால சுழலில் 80 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 12 ரன்களுக்கு 4 விக்கெட்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார் சிங்.    

ஐபிஎல் தொடர்களில் மும்பை அணியின் வெற்றிகள், 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றி, 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி என பல வெற்றிகளுக்கு உதவியவர் ஹர்பஜன். இந்திய அணிக்கு கிடைத்த பெஸ்ட் ஆஃப் ஸ்பின்னரான சிங், கங்குலி தேர்ந்தெடுத்த மற்றுமொரு கிங். இன்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாள். 

ஹர்பஜன் பற்றி சில தகவல்கள்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2001-ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இந்திய வீரராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

ஆஃப் ஸ்பின்னராக டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார். 

2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வீரர் சைமண்ட்ஸ் உடன் வாக்குவாதம் மற்றும் அதே ஆண்டு இந்திய வீரர் ஸ்ரீசாந்த்தை அறைந்தது என சர்ச்சைகளில் சிக்கினார்.

2003-ஆம் ஆண்டு அர்ஜுனா விருது, 2009-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றார்.

முதலில் பேட்ஸ்மேனாக சரஞ்சித் சிங்கிடம் பயிற்சி பெற்று வந்த நிலையில், பின்னர் தவேந்தர் சிங் என்பவர் மூலம் ஸ்பின் பவுலராக பயிற்சி பெற்றார். 

பிறந்த தேதி 3 என்பதால் தனது ஜெர்ஸி நம்பர் 3 வைத்துள்ளார்.

ட்ரெஸ்ஸிங் ரூமில் குறும்பாகவும், விளையாட்டாகவும் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்.

கங்குலி கேப்டன் பொறுப்பேற்ற பின்பு அணியில் மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அனைவரையும் சமமாக நடத்தியதாக கூறியிருந்தார்.

கங்குலி தன்னை மிகவும் வலிமைப்படுத்த உதவியுள்ளதாகவும், இக்கட்டான நிலையில் தன்னுடன் ஆதரவாக நின்றதற்காக அவருக்கு கடமைப்பட்டிருப்பதாகவும், கங்குலி செய்த நன்றியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது எனவும் ஹர்பஜன் பலமுறை தெரிவித்துள்ளார். 

பல சர்ச்சைகள், மைதானத்தில் ஆக்ரோஷம், தமிழ் மக்களை கவரும் விதமாக தமிழில் ட்விட் என தனது பாணியில் ஏதேனும் ஒன்றை செய்து கொண்டே இருப்பார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சிங். மும்பை, சென்னை அணிகள் கோப்பைகளை வென்றபோது மறைமுக ஹீரோவாக பங்களித்துள்ளார். 

 

 

Next Story

போராடித் தோற்ற மும்பை இந்தியன்ஸ்; முதல் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sun risers won the match ipl live score update mi vs srh

ஐபிஎல் 2024 இன் 8ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். 18 பந்துகளில் அரை சதத்தை கடந்த ஹெட் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தார். அபிஷேக் ஷர்மா ஹெட்டை மிஞ்சும் அளவுக்கு அதிரடியில் கலக்கி 7 சிக்ஸர்கள் மூன்று பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிளாசனும் தன் பங்கிற்கு 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன்  34 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். மார்க்ரம் 28 பந்துகளில்  42 ரன்கள் எடுத்தார்.

இறுதியின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்தது. இதற்கு முன்பு கெயில் 175 அடித்த  அந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்ட 263 ரன்களே சாதனையாக இருந்து வந்தது. தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது.

அதனைத் தொடர்ந்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு இஷான், ரோஹித் சிறப்பான துவக்கம் தந்தனர். இஷான் 13 பந்துகளில் 4 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்தார். ரோஹித் 12 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த திலக் வர்மா மற்றும் நமன் திர் இணையும் அதிரடியைத் தொடர்ந்தது. இருவரும் இணைந்து 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.  நமன் திர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 33 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் பாண்டியாவுடன் டிம் டேவிட் இணைந்தார். கேப்டன் பாண்டியா முதலிரண்டு பந்துகளில் அதிரடி காட்டி பின்னர் ரன் எடுக்க திணறினார். ஆனால் டிம் டேவிட் ஓரளவு அதிரடி காட்டி 42 ரன்கள் எடுத்தார். முதல் முறையாக களமிறங்கிய ஷெபெர்டு 15 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே மும்பை அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக 23 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் மும்பை அடித்த 246 ரன்களும் சேர்த்து ஒரு டி20 இல் இரு அணிகளும் சேர்த்து அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Next Story

சேப்பாக்கத்தில் செழுமையான வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
ipl score CSK vs gt ipl latest live score update chennai wins

ஐபிஎல் 2024 7 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினர். கடந்த ஆட்டத்தைப் போலவே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றினார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் ஓரளவு நிதானமாக ஆட, சிவம் துபே சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர் மழையால் ரசிகர்களை நனைய வைத்தார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பின்னர் வந்த சமீர் ரிஸ்வி கடைசி கட்டத்தில் அதிரடியாக அடித்த இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 200 ரன்களை கடந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோ தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறத் துவங்கியது. அந்த அணியின் கேப்டன் கில் 8 ரன்களில் விரைவிலேயே நடையைக் கட்டினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுபவ வீரரான சஹாவும் 21 பெரிதாக நிலைக்கவில்லை. பின்னர் இறங்கிய சாய் சுதர்சன் கடந்த ஆட்டத்தைப் போலவே இம்முறையும் பொறுப்பாக ஆடத் தொடங்கினார். அவருடன் சேர்ந்த மில்லர் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

ஆனால், அவரின் அதிரடி வெகு நேரம் நிலைக்கவில்லை. தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரஹானேவின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஒமர்சாயுடன் இணைந்த சுதர்சன் நிதானமாகவே ஆடி வந்தார். ஆனாலும் தவறான ஷாட்டால் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒமர்சாயும் 11 ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் வந்த ரஷித் 1, டெவாட்டியா 8, என வெளியேற, உமேஷ் 10, ஜான்சன் 5 என 20 ஓவர்களில் குஜராத் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.