Skip to main content

சிங் இஸ் கிங்... ஆஸ்திரேலியாவின் இறுமாப்பை உடைத்த சிங்...

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி, 1999-2001காலகட்டங்களில் தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி என்ற பல ஆதிக்கங்களுடனும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கே உரித்தான இறுமாப்புடனும் 2001-ஆம் ஆண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாட வந்தது அந்த அணி. அந்த தொடரில் இந்திய அணி படைத்த 2 வரலாற்று நிகழ்வுகள் ஆஸ்திரேலியா அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. 

நிகழ்வு 1: லக்ஸ்மன்-டிராவிட்டின் வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப். நிகழ்வு 2: அனுபவமிக்க ஆஸ்திரேலியா அணியை திக்குமுக்காட வைத்த 20 வயதே ஆன ஒரு இளைஞனின் சுழல் பந்துவீச்சு. அந்த தொடரில் இந்திய அணி பவுலர்களில் அந்த இளைஞனை தவிர யாரும் 3+ விக்கெட்கள் வீழ்த்தவில்லை. ஆனால் அந்த இளைஞன் மட்டும் 32 விக்கெட்களை சாய்த்திருந்தான். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த ஸ்பின் பவுலரும் அந்த இளைஞன் தான். அப்போதைய ஸ்பின் ஜாம்பவான் வார்னே அந்த தொடரில் மொத்தமாக 10 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

 

harbhajan singh cricket history

 

 

2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு கும்ப்ளேவுக்கு காயம் ஏற்பட்டது. எந்த ஸ்பின் பவுலரை அணியில் சேர்ப்பது என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. கேப்டன் கங்குலி வெளிப்டையாகவே ஹர்பஜன் சிங்கை அணியில் சேர்க்க ஆதரவுக்கரம் நீட்டினார். அதற்கு முன்னர்வரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்கள் மட்டுமே எடுத்திருந்த சிங்கை கிங்காக மாற்றியது அந்த தொடர் தான். 

சர்ச்சை, அதிரடி, ஆக்ரோஷம், என்டர்டைன்மெண்ட் என ஹர்பஜன் சிங் மிகவும் பிஸியான ஒரு வீரராகவே வலம் வந்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என இரண்டிலும் சிறப்பாக பங்களித்து வந்தார். டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பல மூத்த வீரர்கள் தடுமாறினார்கள். ஆனால் சிங் அந்த ஃபார்மேட்டிலும் அசத்தினார்.

பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். கேப்டன்களின் நம்பிக்கைக்குரிய பவுலராக இருந்தார். பல போட்டிகளில் முதல் ஓவரை வீசினார். இடது கை பேஸ்ட்மேன்கள் இவரின் பந்து வீச்சில் திணறினார்கள். 38 வயதிலும் ஐபிஎல் போட்டிகளில் அசத்தி வருகிறார். மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துதல், விக்கெட்களை வீழ்த்துதல் என தனது பவுலிங் மூலம் அணிக்கு பெரிதும் உதவியுள்ளார். 

2010-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8-வது வீரராக களமிறங்கி அடுத்தடுத்து இரு சதம் அடித்து சாதனை படைத்தார். அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 69, 115 ரன்கள் எடுத்து டிரா செய்ய முக்கிய காரணமாக இருந்தார். அடுத்த போட்டியில் 111 ரன்கள் எடுத்தார்.    

இலங்கையில் 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 170 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஹர்பஜன் வீசிய மாயாஜால சுழலில் 80 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 12 ரன்களுக்கு 4 விக்கெட்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார் சிங்.    

ஐபிஎல் தொடர்களில் மும்பை அணியின் வெற்றிகள், 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றி, 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி என பல வெற்றிகளுக்கு உதவியவர் ஹர்பஜன். இந்திய அணிக்கு கிடைத்த பெஸ்ட் ஆஃப் ஸ்பின்னரான சிங், கங்குலி தேர்ந்தெடுத்த மற்றுமொரு கிங். இன்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாள். 

ஹர்பஜன் பற்றி சில தகவல்கள்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2001-ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இந்திய வீரராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

ஆஃப் ஸ்பின்னராக டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார். 

2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வீரர் சைமண்ட்ஸ் உடன் வாக்குவாதம் மற்றும் அதே ஆண்டு இந்திய வீரர் ஸ்ரீசாந்த்தை அறைந்தது என சர்ச்சைகளில் சிக்கினார்.

2003-ஆம் ஆண்டு அர்ஜுனா விருது, 2009-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றார்.

முதலில் பேட்ஸ்மேனாக சரஞ்சித் சிங்கிடம் பயிற்சி பெற்று வந்த நிலையில், பின்னர் தவேந்தர் சிங் என்பவர் மூலம் ஸ்பின் பவுலராக பயிற்சி பெற்றார். 

பிறந்த தேதி 3 என்பதால் தனது ஜெர்ஸி நம்பர் 3 வைத்துள்ளார்.

ட்ரெஸ்ஸிங் ரூமில் குறும்பாகவும், விளையாட்டாகவும் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்.

கங்குலி கேப்டன் பொறுப்பேற்ற பின்பு அணியில் மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அனைவரையும் சமமாக நடத்தியதாக கூறியிருந்தார்.

கங்குலி தன்னை மிகவும் வலிமைப்படுத்த உதவியுள்ளதாகவும், இக்கட்டான நிலையில் தன்னுடன் ஆதரவாக நின்றதற்காக அவருக்கு கடமைப்பட்டிருப்பதாகவும், கங்குலி செய்த நன்றியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது எனவும் ஹர்பஜன் பலமுறை தெரிவித்துள்ளார். 

பல சர்ச்சைகள், மைதானத்தில் ஆக்ரோஷம், தமிழ் மக்களை கவரும் விதமாக தமிழில் ட்விட் என தனது பாணியில் ஏதேனும் ஒன்றை செய்து கொண்டே இருப்பார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சிங். மும்பை, சென்னை அணிகள் கோப்பைகளை வென்றபோது மறைமுக ஹீரோவாக பங்களித்துள்ளார். 

 

 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.