Skip to main content

தாஹிரின் மாயாஜால சுழல்... ராபாடாவின் மின்னல் வேக பவுலிங்...

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

டி20 போட்டிகளில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த முறையும் தோனி, ரஸ்ஸல், ஹார்திக் பாண்டியா உள்ளிட்டோரின் அதிரடியில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன. ஆனால் அதையும் தாண்டி இந்த முறை பவுலர்கள் தான் இந்த தொடரில் அதிக வெற்றிகளை தீர்மானித்துள்ளனர். மும்பை அணியும், சென்னை அணியும் இந்த சீசனில் வெற்றி பெற அந்த அணிகளின் பவுலர்களே அதிக பங்கு வகித்துள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் 60 போட்டிகளில் மொத்தமாக 4934 டாட் பால்கள், 682 விக்கெட்கள். 

 

சன் ரைசர்ஸ் அணியின் நபி டெத் ஓவர்களில் 10 ஓவர்கள் பவுலிங் செய்து 4.50 எகானமி ரேட் வைத்துள்ளார். ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஆர்ச்சர் 16 ஓவர்கள் டெத் பவுலிங்கில் எகானமி ரேட் 4.75 வைத்துள்ளார். கொல்கத்தா அணியின் சுனில் நரைன் 15 ஓவரில் எகானமி ரேட் 5.06.

 

பவர் ப்ளே ஓவரில் தீபக் சஹார் 14 விக்கெட்கள், 7.47 எகானமி ரேட் கொண்டுள்ளார். மிடில் ஓவரிகளில் தாஹிர் 22 விக்கெட்கள், 6.69 எகானமி ரேட் வைத்துள்ளார். டெத் ஓவர்களில் டெல்லி அணியின் ராபாடா 17 விக்கெட்கள், 7.82 எகானமி ரேட் கொண்டு சிறப்பாக பவுலிங் செய்துள்ளனர்.

 

 

DEEPAK

 

ராஜஸ்தான் அணியின் இளம் லெக் ஸ்பின்னர் ஸ்ரேயாஸ் கோபால் இந்த ஆண்டு சிறப்பாக பவுலிங் செய்துள்ளார். கோலி, டி வில்லியர்ஸ், ரோகித் சர்மா என சிறந்த பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் எடுத்து கலக்கியுள்ளார். 5 முறை கேப்டன்களை டிஸ்மிஸ் செய்துள்ளார். கோலியை இரு முறை வீழ்த்தியுள்ளார். மும்பை கேப்டன் சர்மா, டெல்லி கேப்டன் ஐயர், ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் ஆகியோரை ஒரு முறை அவுட் செய்துள்ளார்.

 

இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் கொடுத்த பவுலர்களில் ஹார்திக் பாண்டியா முதலிடத்தில் உள்ளார். 255 பந்துகளில் 23 சிக்ஸர்கள் கொடுத்துள்ளார். அடுத்து உனட்கட் 224 பந்துகளில் 22 சிக்ஸர்கள், சாஹல் 296 பந்துகளில் 22 சிக்ஸர்கள், சாவ்லா 267 பந்துகளில் 21 சிக்ஸர்கள் கொடுத்துள்ளனர். 

 

சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தாஹிர் இந்த தொடரில் 26 விக்கெட்கள் எடுத்து ஊதா நிற தொப்பியை பெற்றார். இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்களில் சுனில் நரைன் அதிகபட்சமாக 24 விக்கெட்கள் எடுத்தது தான் அதிகம். அந்த சாதனையை தாஹிர் முறியடித்துள்ளார்.

 

HARDIK

 

சென்னை அணியின் தீபக் சஹார் 17 போட்டிகளில் 190 டாட் பால்கள் வீசியுள்ளார். டெல்லி அணியின் ரபாடா அதிவேகமாக 154.23 கி.மீ வேகத்தில் பவுலிங் செய்துள்ளார். 

 

அதிக மெய்டன் ஓவர்கள் வீசியதில் ராஜஸ்தான் அணியின் ஆர்ச்சர் மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தலா இரண்டு ஓவர்கள் வீசியுள்ளனர். ஒட்டுமொத்தமாக 20 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. குறைந்த எகானமி ரேட்டாக 6.28 கொண்டு ரசித் கான் கலக்கியுள்ளார். 

 

சென்னை அணியின் பவுலிங் யூனிட் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளது. சென்ற ஆண்டு 99 விக்கெட்கள், பவுலிங் சராசரி 27.78, 8.72 எகானமி ரேட் வைத்திருந்தனர். இந்த ஆண்டு 111 விக்கெட்கள், பவுலிங் சராசரி 21.98, எகானமி ரேட் 7.47. 

 

VIRAT

 

இந்த தொடரில் ஸ்பின்னர்கள் 263 விக்கெட்கள் எடுத்துள்ளனர். இதற்கு முன்பு 2011-ஆம் ஆண்டு 266 விக்கெட்கள் எடுத்தது தான் அதிகம். ஆனால் அந்த தொடரில் 13 போட்டிகள் அதிகமாக விளையாடியிருந்தது. 41% விக்கெட்களை ஸ்பின்னர்கள் எடுத்துள்ளனர். 

 

ஸ்பின்னர்களில் சென்னை அணியின் ஸ்பின்னர்கள் இந்த சீசனில் அதிகபட்சமாக 62 விக்கெட்கள் எடுத்துள்ளனர். இது ஐபிஎல் தொடரில் சாதனையாகும். இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி மொத்தமாக 56 விக்கெட்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச விக்கெட்கள் இது. இதற்கு முன்பு கொல்கத்தா அணி 2009-ஆம் ஆண்டு 59 விக்கெட்கள் எடுத்திருந்தது.  

 

இந்த தொடரில் பஞ்சாப் அணியின் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவரில் 66 ரன்கள் கொடுத்தது ஒரே போட்டியில் ஒரு வீரர் கொடுத்த அதிகபட்ச ரன்கள். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த பவுலிங்காக மும்பை அணியின் அல்ஜாரி ஜோசப் 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணியின் கோபால் மற்றும் பஞ்சாப் அணியின் சாம் கரன் ஆகியோர் தலா ஒரு முறை ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

 

 

 

Next Story

கேப்டனுக்கு மீண்டும் எதிர்ப்பு; எல்லை மீறிய ரசிகர்கள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 Rohit fans who crossed the line for Opposition to hardik pandya for Captain

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், இரண்டு அணிகளுமே தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சமநிலையில் உள்ளன. ஐ.பி.எல். 2024 போட்டியில் 6ஆவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணியை பலப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு நடவடிக்கையை அணி நிர்வாகம் மேற்கொண்டது. 

அந்த வகையில், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் ஷர்மாவை, கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களில் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அதன் விளைவாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் குறைந்தனர்.

இதனை அடுத்து ஹர்திக் பாண்டியாவின் சொந்த மண்னான அகமதாபாத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் போட்டியிலே, ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். இது ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மண்ணான மும்பை வான்கடே மைதானத்தில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் 2024 இன் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. இதில், போட்டி தொடங்குவதற்கு முன்பு டாஸ் போட ஹர்திக் பாண்டியா வந்த போதே, ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.  அப்போது வர்ணனையாளர் சஞ்சய் மாஞ்ரேகர், ரசிகர்களை மரியாதையாக நடக்க அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், போட்டியின் தொடக்கம் முதல் இறுதி வரையில் ‘ரோஹித்... ரோஹித்.... ’ என ரசிகர்கள் முழக்கமிட்டனர். இது மும்பை இந்தியன்ஸ் அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மைதானமான வான்கடேவில் மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கே.கே.ஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கே.கே.ஆர் அணி நிர்வாகத்திற்கு எதிராக கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பரிதாப நிலை!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
5-time champions Mumbai Indians team's pathetic condition for hatrick loss

ஐபிஎல் கிரிக்கெட் 2024 இல் 14 ஆவது லீக் ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர்.

இதில், இஷான் கிஷன் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்து 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ரோஹித் ஷர்மா, நமன் திர், டிவால்ட் ப்ரிவிஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து, திலக் வர்மா 29 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பந்து வீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களான டிரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திய சஹால் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அதன்படி தொடக்க வீரரான யஷ்ல்வி ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் குவெனா பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும், ஜோஸ் பட்லர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிவரை விளையாடிய ரியான் பராக் அதிகபட்சமாக 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்து 54 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளோடு ராஜஸ்தான் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஐ.பி.எல் சீசன் தொடங்கி 14 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 1 வெற்றி முதல் 2 வெற்றி வரை பெற்று புள்ளிப்பட்டியலில் போட்டி போடத் தொடங்கியுள்ளன. ஆனால் 5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் பரிதாபகரமான நிலையில் உள்ளது.