Skip to main content

தொடரை கைப்பற்றி அசத்திய வங்கதேசம்; இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

Bangladesh won the series; The Indian team suffered a shock defeat

 

இந்திய கிரிக்கெட் அணி ஏழு ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி 4 ஆம் தேதி தாக்காவில் நடந்தது. அதில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவ இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. 

 

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 6 ஆவது விக்கெட்டாக களமிறங்கிய மஹமதுல்லா மற்றும்  8 ஆவது விக்கெட்டாக களமிறங்கிய மிஹதி ஹாசன் மிராஸ் இணைந்து பொறுமையாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 50 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 271 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக மஹமதுல்லா 77 ரன்களையும் மிஹைதி ஹாசன் 100 ரன்களையும் அடித்தனர். 

 

18 ஆவது ஓவரின் இறுதி பந்து வரை 6 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணி அடுத்த 7 ஆவது விக்கெட்டை 46 ஆவது ஓவரில் தான் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்களையும் உம்ரான் மாலிக் மற்றும் சிராஜ் தலா இரண்டு விக்கெட்களையும் எடுத்தனர்.

 

272 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் 5 ரன்களிலும் தவான் 8 ரன்களிலும் வெளியேற ஸ்ரேயாஸ் ஐயர் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். மறுபுறம் விக்கெட்கள் வீழ்ந்து கொண்டு இருக்க 6 ஆவது விக்கெட்டாக களமிறங்கிய அக்ஸர் படேல் ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகோர்த்து ரன்களை சேர்த்தனர். ஸ்ரேயாஸ் 34 ஆவது ஓவரில் இறுதிப் பந்தில் 82 ரன்களுக்கு வெளியேற, மீண்டும் விக்கெட்கள் வேகமாக சரிய ஆரம்பித்தது. இறுதியில் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 50 ரன்களை எடுத்தும் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சிறப்பாக பந்து வீசிய வங்கதேச அணியின் ஹூசைன் 3 விக்கெட்களையும் மெஹைதி மற்றும் ஷாகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். 

 

இப்போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

 


 

Next Story

“மீண்டு வர சிறிது காலம் ஆகும்” - மருத்துவமனையில் முகமது ஷமி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Mohammed Shami tweet after surgery

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக சாதனை படைத்தார். அந்த போட்டிகளில் விளையாடிய போதே, முகமது ஷமியின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதனால், ஒவ்வொரு போட்டியிலும் அவர், காயத்திற்கான ஊசி செலுத்திக்கொண்டு விளையாடி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடி வந்த முகமது ஷமி, அதன் பின் லண்டனுக்கு சென்று கணுக்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தினால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. 

இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-02-24) லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் முகமது ஷமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தனது புகைப்படத்தை எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது. குணமடைய சிறிது காலம் ஆகும். மீண்டு வருவதற்கு ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமிக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் முகமது ஷமி. மிகவும் தைரியத்துடன் இந்த காயத்தை நீங்கள் சமாளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஷமி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால், அடுத்த மாதம் நடைபெறும் ஐ.பி.எஸ் தொடரிலும் ஜூன் மாதம் அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சாதனை படைத்த அஸ்வின்; “சென்னையின் மைந்தன்” - தமிழக முதல்வர் வாழ்த்து

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Greetings from the Chief Minister of Tamil Nadu Accomplished by cricket player Ashwin

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்தன. இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலியின் விக்கெட்டை இந்திய அணி வீரர் அஸ்வின் வீழ்த்தினார். 

இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அஸ்வினின் இந்த சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 500வது விக்கெட்டை பெற்ற அஸ்வினுக்கு வாழ்த்துகள். சாதனைகளை முறியடித்து கனவுகளை நனவாக்கியவர் சென்னையின் மைந்தன் அஸ்வின். அவரின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு வெளிப்படுகிறது. இது உண்மையான மைல்கல்லைக் குறிக்கிறது. அவரது மாயாஜால பந்துவீச்சு, 500வது விக்கெட்டை கைப்பற்ற உதவியுள்ளது. அவர் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.