Skip to main content

இந்திய அணிக்கு எதிராக வரலாறு படைத்த நியூசிலாந்து பந்துவீச்சாளர்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

ajaz

 

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (03.12.2021) தொடங்கி நடைபெற்றுவருகிறது.

 

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணி சார்பில் மயங்க் அகர்வால் 150 ரன்களும், சுப்மன் கில் 44 ரன்களும், அக்ஸர் படேல் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் வீழ்த்தி வரலாறு படைத்துள்ளார்.

 

இதன்மூலம் அவர், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜே.சி. லேக்கர் என்ற இங்கிலாந்து வீரர் 1956இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதனைத்தொடர்ந்து இந்தியாவின் அனில் கும்ப்ளே, 1999இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

அரசுப் பேருந்தில் பயணித்த கும்பளே!

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

anil kumble travelled in government bus

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் கடந்த ஜூன் 11ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு சக்தி திட்டம் என்று பெயரிடப்பட்டு அதற்கான அடையாள அட்டையை கர்நாடகா அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.

 

இந்த நிலையில், தங்களது 28 கோரிக்கைகளை அரசுப் போக்குவரத்துத் துறை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து நேற்று (11-09-2023) மாநிலம் முழுவதும் கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் நடத்தியது. இது குறித்து, தனியார் போக்குவரத்து ஊழியர்கள்  இந்த சக்தி திட்டத்தால் தாங்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று கூறினர். பின்னர், ஜூலை 24 மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் கலந்து பேசினர். அப்போது, செயலி மூலம் இயங்கும் வாகன சேவைகளையும் நிறுத்த வேண்டும் என 30 கோரிக்கைகளை வைத்தனர். அதற்கு அமைச்சர், தனியார் போக்குவரத்து சங்கங்களின் 30 கோரிக்கைகளில் 28 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அரசுத் தரப்பிடம் பதில் தரப்படாததால் நேற்று கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின்  கூட்டமைப்பு ஸ்ட்ரைக் நடத்தியது.

 

இந்நிலையில், நேற்று கர்நாடகாவுக்கு வந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே தனது வீட்டிற்கு செல்ல அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூரில் டாக்ஸிகள் இயங்காததால், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய பயணிகளுக்கு வீடு திரும்ப வாகனம் கிடைக்காத சூழல் உருவானது. இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அணில் கும்ப்ளே, விமான நிலையத்தில் இருந்து பனசங்கரி வரை மாநகர போக்குவரத்து கழக பஸ்சில் பயணித்துள்ளார். இது குறித்த அணில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்திலிருந்து இன்று பிஎம்டிசி பஸ்ஸில் வீடு திரும்பினேன்” என பேருந்தில் பயணித்த புகைப்படத்தை பகிர்ந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

சாதனை வெற்றியுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

india vs newzealand

 

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது.

 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 325 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களுக்கு சுருண்டது. இதன்பின்னர் ஃபாலோ ஆன் தர வாய்ப்பிருந்தும் மீண்டும் பேட்டிங் செய்த இந்திய அணி, 276 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

 

இதன் காரணமாக 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி, நேற்றைய (05.12.2021) ஆட்ட நேர முடிவில் 140 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்தநிலையில், இன்று ஆட்டம் தொடங்கியதிலிருந்தே நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி, 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

ரன்களின் அடிப்படையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இது இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 14வது டெஸ்ட் தொடர் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.