Skip to main content

அன்று தமிழகத்தின் இரண்டாம் எய்ட்ஸ் நோயாளி... இன்று 26 நாடுகளில் விழிப்புணர்வு உருவாக்கியவர்... 

Published on 15/04/2018 | Edited on 16/04/2018

இன்று தமிழ்நாட்டில் திருநங்கையர் தினம். இதே ஏப்ரல் 15இல் 2008ஆம் ஆண்டு தமிழகத்தில் திருநங்கைகளுக்கென தனி வாரியம் அமைக்கப்பட்டது. அந்த நாளை 2011இல் இருந்து திருநங்கையர் தினமாக கொண்டாடுகிறோம். உண்மையில் 'கொண்டாடுகிறோம்'-ஆ? இன்னும் அது பொதுவாகவில்லை. கொண்டாடுகிறார்கள். ஆணிற்கும், பெண்ணிற்கும் கிடைக்கும் அங்கீகாரம், சலுகை, பாதுகாப்பு எதுவும் மூன்றாம் பாலினத்தவர்க்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கான சுதந்திரம், உரிமை அனைத்துமே இன்றும் ஒரு வித இறுக்கமான சூழ்நிலையில்தான் உள்ளது. நமது சமூகம் இவர்களை இன்றும் தூரப்பார்வையில் பார்த்தாலும் அதையும் மீறி இந்த சமூகத்தில் வெற்றிநடைபோட்டு வாழ்ந்து காட்டியவர்களும் உள்ளனர். அதில் ஒருவர்தான் சமூக ஆர்வலர் திருநங்கை  "நூரி அம்மா" 

 

Noori transgender


உங்களை  பற்றி  சொல்லுங்க அம்மா ?

என் பெயர் நூரி. நான் ஒரு திருநங்கை, நான் பிறந்தது சென்னைதான். என்னோட பூர்வீகம்  ராமநாதபுரம். எங்க அம்மா எனக்கு நாலு வயசா இருக்கும்போது இறந்துட்டாங்க. எங்க அப்பா என்னோட பதினெட்டாவது வயசுல இறந்துட்டாரு. அதுக்கப்புறம் வறுமைதான். இடையில் என்னை நான் பெண்ணாக உணர்ந்து திருநங்கையா மாறி வீட்டிலிருந்து வெளியேறி வாழ்க்கையில பல கஷ்டங்கள் பட்டேன். சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டேன். 1987ஆம் ஆண்டு இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதலில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவரை கண்டறிந்தனர். இரண்டாவது  நபர்  நான்.  முதலில்  கண்டறியப்பட்டவர் இறந்துவிட்டார். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்.

எய்ட்ஸ் நோய் உங்க வாழ்க்கையை எப்படி மாற்றியது?

முதலில் எனக்கு இந்த நோய் இருப்பது தெரிந்தவுடன் மனதளவில் மிகவும் சோர்வடைந்து விட்டேன். எனக்கு ஊக்கம் கொடுத்தது  டாக்டர்.உஷா ராகவன் மேடம்தான். எனக்கு மாத சாப்பாடு செலவுக்கு 750 ரூபாய் ஆகும். அதையும் மேடம்தான் தந்தாங்க. இந்த நோய் இருப்பதா நினைக்காம 'காசுடன் வந்த எச்.ஐ.வியை, ஓசியில் கொடுக்க விரும்பவில்லை நண்பா'னு  போஸ்டர் வெளியிட்டு  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன். அதுக்கப்புறம் அரசு மருத்துவமனையில் இருந்த எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சேவை செய்யத் தொடங்குனேன். சிறிது காலம் எனக்கு மேடம் உதவி பண்ணாங்க. என் சேவை தொடரவேண்டும் என்பதற்காக பல தன்னார்வு தொண்டு நிறுவனங்களில்  பணியாற்றி அது மூலம் எனக்கு வருமானமும் வந்துச்சு. பால்வினை நோய்களுக்கு  எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தேன். ஆனா என்னோட உழைப்பை வாங்கிட்டு என்னை விளம்பரத்துக்கு மட்டும் முன்னிலைப்படுத்துனாங்க. எனக்கு அதனால் எந்த பலனுமில்லை.

அந்தத் தருணத்துல உறுதுணையா இருந்து, 'நூரி உங்களால ஜெயிச்சு காட்ட முடியும்'னு ஊக்கம் கொடுத்தது டாக்டர்.ஜோசப் வில்லியம்ஸ்தான். 'சார் எனக்கு படிப்பறிவு அதிகமில்ல சார்'னு சொன்னேன். 'உங்களுக்குப் படிப்பறிவை விட பகுத்தறிவு அதிகம்னு சொல்லி டாக்டர் கொடுத்த நம்பிக்கையில் 'தென்னிந்திய எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டமைப்பை' 2001இல் 26  பேரைக் கொண்டு ஆரம்பித்தேன். இந்த அமைப்பின் மூலமாக பாலியல் தொழில் செய்தவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் திருங்கைகள் எல்லோருக்கும் சேவை செய்தோம். 2003இல் எஸ்.ஐ.பி மெமோரியல் டிரஸ்ட்னு ஒன்றை ஆரம்பிச்சேன். 'எஸ்.ஐ.பி'னா என்னோட பழகிய மூன்று திருநங்கை நண்பர்களின் பெயரின் முதல் எழுத்து. செல்வி, இந்திரா, பழனி மூனு பேரும் எச்.ஐ.வியால பாதிக்கப்பட்டு இறந்துட்டாங்க. அவங்க ஞாபகமா அந்தப் பெயரை வைத்தேன். இந்தக் கூட்டமைப்பு குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

விழிப்புணர்வு கொடுக்க நீங்க எந்தெந்த நாடுகளுக்கு போயிருக்கீங்க, எத்தனை விருதுகள் வாங்கியிருக்கீங்க?

நான் 2001ல் முதன்முதலாக ஆஸ்திரேலியா போனேன். அதுக்கப்புறம் 26 நாடுகள் இதுவரைக்கும் போயிருக்கேன். இந்தியாவில கேரளா தவிர மற்ற எல்லா மாநிலத்துக்கும் போயிருக்கேன் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்ள பேசியிருக்கேன். விருதுகள்னு பார்த்தீங்கனா 2006ல "வாழ்நாள் சாதனையாளர் விருது" தமிழ்நாடு அரசிடமிருந்து வாங்கியிருக்கேன். அப்போதைய ஆளுநர் ரோசையா அவர்கள் கையாள "பெஸ்ட் மதர் விருது" வாங்குனேன். மும்பைல டாக்டர் பத்ரா விருதுல "வில் பவர் லேடி விருது" வாங்கிருக்கேன். இது மாதிரி பல விருதுகள் வாங்கிருக்கேன்.  எஸ்.ஐ.பி டிரஸ்ட்ல இப்ப ஒரு 45 குழந்தைங்க இருக்காங்க. அந்த பிள்ளைங்களுக்கு தாயாவும், தந்தையாவும் இருந்துட்டு இருக்கேன்.  நான் இல்லனாலும் இந்த இல்லம் மூலமா என் பேரு சொல்லி குழந்தைகள் வாழனும்.

 

Noori transgender



திருநங்கைகளுக்கான சலுகைகளை பற்றியும், அவர்களுக்கான  அங்கீகாரங்களை பற்றியும் என்ன நினைக்குறீங்க?

திருநங்கைகளுக்கு அங்கீகாரமும், சலுகையும் கொடுத்தோம்னு சொல்றாங்க. ஆனா அதுவும் எங்கள மாதிரி அரைகுறையாதான் இருக்கு. இந்திய அரசாங்கம் என்ன சொல்லுது? பாலியல் தொழில்ல ஈடுபடாதீங்க, கடைகள்ள போய் காசு கேக்காதீங்க, அது சட்டபடி குற்றம் அப்படின்னு சொல்றாங்க. ஆனா அதுக்கு மாற்றா எந்த வேலை வாய்ப்பையும் அமைச்சுக் கொடுக்கலையே? இப்போதைக்கு எங்கள மாதிரி உள்ளவுங்கள்ள சாதிச்சவுங்கனு பாத்தா விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குதான் இருக்காங்க. இதுக்கும் சேர்த்துதான் நான் போராடிட்டு இருக்கேன். எனக்கு உறுதுணையா இன்னும் சிலர் தேவை. அதுமட்டுமில்ல எங்கள மாதிரி பிறக்குற குழந்தைங்கள முதல்ல பெத்தவுங்க ஒதுக்காம இருந்தா போதும், அவுங்க ஒதுக்காம இருந்தா இந்த சமூகம் எங்களை தள்ளிவச்சு பார்க்காது. அதனால பெற்றோரும் எங்கள மாதிரி உள்ள குழந்தைகளை ஏத்துக்கனும்.

இந்த சமூகத்திற்காக நூரி போன்று உள்ளவர்களும் பல நல்ல விஷயங்களை  செய்து வருகின்றனர். அவர்கள்தான் தன்னம்பிக்கையின் உருவாகவும், மற்ற திருநங்கைகளுக்கு உதாரணமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். தன் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தாயின் பாசத்தையும், தந்தையின் வழிகாட்டுதலையும் ஓர் உருவில் வழங்கி வரும் நல்ல ஆத்மாதான் இந்த நூரி அம்மா.

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

“திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
People should not ignore Transgender says Chief Minister MK Stalin

இந்தியாவில் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அங்கீகரித்து உத்தரவிட்டிருந்தது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 தேசிய திருநங்கையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை திருநங்கைகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றியக் குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் திருநங்கைகளுக்காகத் தனி நலவாரியம், அடையாள அட்டைகள், பேருந்துகளில் இலவசப் பயணம், மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம், உயர்கல்வி பயிலக் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அரசே ஏற்பு எனப் புரட்சிகரமான பல திட்டங்களைச் செய்துள்ளது திமுக. தங்களது ஆற்றலால் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் திருநர்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.