Skip to main content

விலையுயர்ந்த காய்களை சாப்பிட்டால் புற்று நோய் வராதா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Siddha Doctor Arun - Vegetables 

 

விலை அதிகமான காய்கறிகளை கஷ்டப்பட்டு வாங்குகிறோம், அதில் தான் ஆரோக்கியம் இருப்பதாக நம்புகிறோம் இது குறித்து சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்.

 

நாம் வசிக்கும் இடங்களில் கிடைக்கும் காய்கறிகளை விட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் காய்கறியைத்தான் பொதுவாகவே நம் மக்கள் விரும்புகின்றனர். வீட்டுத் தோட்டத்தில் விளையும் அவரைக்காய், முருங்கைக்காய், பசலைக் கீரை உண்பதில் சத்து இல்லை என நினைக்கின்றனர். மாறாக, சூப்பர் மார்க்கெட் சென்று கலர் கலர் முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் தான் சத்துகள் இருப்பதாக எண்ணுகிறார்கள். நம் மண்ணில் விளையும் தானியங்களை, காய்கறிகள் நமக்கேற்ற தாதுக்களை வழங்குகிறது. இவை விலை குறைவாக கிடைக்கிறது. எனவே, பணக்காரர்கள் உண்ணும் விலையுயர்ந்த காய்கறிகளை உண்பதற்கு ஆசைப்படுகிறார்கள். 

 

முன்னொரு காலத்தில் நாம் கேழ்வரகு, கம்பு, சோளம் என சாப்பிடும் போது, பணக்காரர்கள் அரிசி சாப்பிடுவதை பார்த்து அந்த பழக்கத்திற்கு மாறினோம். அப்பொழுது, உயர்ந்த வகுப்பினர் மட்டுமே உண்ணும் பொருளாக அரிசி இருந்தது. ஆனால், சுழற்சி முறையில் தற்போது, பணக்காரர்கள் சிறுதானிய உணவிற்கு மாறிவிட்டு. அரிசி உடலுக்கு ஏற்றதில்லை என்ற பிரச்சாரமும் பரவிவருகிறது. மேலும், பழைய சாதம் தான் சத்தானது என்று சிலர் பேட்டியும் கொடுக்கின்றனர். இதனால், நாமும் ஹோட்டலுக்குச் சென்று பழைய சாதத்தை 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். பணக்காரர்கள் பின்பற்றி வரும் உணவு பழக்கம் தான் பிறர் அந்த நிலைக்கு சென்றவுடன் தாங்களும் உணவு, உடை போன்றவற்றில் மாற்றம் அடைகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, இன்று பலரும் உண்ணும் பீட்சா கூட இப்படி வந்தது தான். இதற்கு காரணம், உயர்வானவர்கள் எதனை பின்தொடர்கிறார்களோ அது உயர்ந்தது என்று எண்ணிக் கொள்வதுதான். 

 

இதனால், நம் அன்றாடம் சாப்பிட்டு வந்த நாட்டுக் கத்திரிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், சுண்டைக்காய் முதல் வீட்டு தோட்டத்தில் விளையும் கீரை வகைகள் புறந்தள்ளப்பட்டு. வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு பிறகு, மிளகாய், தக்காளி முதலியன பயன்படுத்த தொடங்கினோம். மேலும், வெளிநாட்டவர்கள் வெண்மையின் காரணம் அவர்களின் உணவு என்று அதனை பின்பற்றுவது நமது அறியாமை என்று சொல்லலாம். 

 

பொதுவாக சித்த மருத்துவர்கள் புதிதாக ஒரு ஊருக்கு சென்றால் அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்வோம். ஏனென்றால், அந்த மூலிகைகளை வைத்து தான், எந்த மாதிரி நோய் அருகில் பரவும் என கண்டறிவோம். எனவே, நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்தாலும் சுற்றி 50கி.மீ. விவசாய நிலங்களில் கிடைப்பதை வாங்கலாம். இதைவிடுத்து, இந்த விலையுயர்ந்த காய்களை சாப்பிட்டால் புற்று நோய் வராது எனும் வாட்ஸ் அப் செய்திகளை நம்பாதீர்கள். முன்பு கூறியது போல, உயர்தட்டு மக்கள் தங்களது உணவு பழக்கத்தை சிறுதானியத்தை நோக்கி மாற்றியுள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நூடில்ஸ் கூட இன்றைக்கு கெடுதல் என சொல்கிறார்கள். எனவே, ஏழைகளின் உணவை(தானியங்கள்) அவர்கள் உண்கின்றனர், அவர்களின் உணவு முறைக்கு நாம் மாறிவிட்டோம். 

 

இதனால், நம்மை சுற்றி தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கீரை வகைகள், நெல்லிக் கனி, மாதுளை முதலானவைகளை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இவைதான் எளிதில் செரிக்கக் கூடியது. இதைவிட்டு, முட்டகோஸ், ப்ரக்கலி போன்ற உணவுகள் நமக்கு மருத்துவ காலத்தில் உதவாது. நமக்கு அருகில் விளையும் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வாருங்கள். இதுவே, நோய் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளும் நல்ல மருந்தாக பயன்படும். உணவே மருந்து, மருந்தே உணவு!

 

 

 

Next Story

குழந்தைகளுக்கு சித்த மருந்துகள் கொடுக்கலாமா? - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 22/12/2023 | Edited on 26/12/2023
 Dr Arun | Cold | Fever | Child | Siddha | Recap |

சித்த மருத்துவ மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்ற கேள்விக்கு பிரபல சித்த மருத்துவர் அருண் விளக்கமளிக்கிறார்.

இன்றைய இளம் தாய்மார்களுக்கு தங்களுடைய குழந்தைகளுக்கு சித்த மருத்துவ மருந்துகள் கொடுக்கலாமா என்ற சந்தேகம் வருகிறது. முதலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான நோய் உருவாகிறது என்று பார்ப்போம். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தோலில் அரிப்பு இதற்கெல்லாம் உடனடியாக பெரிய எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

பூமிக்கு வந்த உயிர் இங்குள்ள நுண்ணுயிர்களை எதிர்கொள்ளும்போது சில எதிர்வினை நடக்கத்தான் செய்யும். அதுதான் மேலே சொன்ன சிறிய அளவிலான நோய்களாகும். அடிக்கடி குழந்தைகளுக்கு சளி பிடிக்கத்தான் செய்யும், எங்கேயாவது சளியால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தையை தூக்கி கொஞ்சினாலோ, பேருந்துகளில் பயணிக்கும்போது அருகே இருப்பவர்களுக்கு தொற்று இருந்தால் கூட சளி பிடிக்கத்தான் செய்யும். சக குழந்தைகளோடு விளையாடும்போது கூட யாராவது ஒருவருக்கு சளி இருந்தால் கூட மற்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

யாரோடும் பழகாமலும், பார்க்காமலும், தொடாமலும் இருக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஆனால் எந்த நோய் வந்தாலும் அதை எதிர்த்து நிற்கிற எதிர்ப்பு சக்தியை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டும். சிறுவயதிலேயே தாய்ப்பாலுடன் இணைத்து உரை மருந்து கொடுப்பார்கள், அதை ஆறு மாதம் வரை கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது குழந்தைக்கு உரை மருந்தின் அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும். 12 வயது வரை கொடுக்கலாம். 

இந்த உரை மருந்தில் சுக்கு, அதிமதுரம், அக்கரகாரம், வசம்பு, ஜாதிக்காய், மாசிக்காய், கடுக்காய், திப்பிலி, பெருங்காயம், பூண்டு அனைத்தும் கலந்து இருக்கும். முன்னெல்லாம் இதை வீட்டிலேயே தயாரிப்பார்கள், இப்பொழுது நகரங்களில் நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானாலே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை தாக்காமல் காக்கலாம். இந்த சித்த மருந்துகளை தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் நோயின் தன்மை தீவிரமடைந்தால் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

Next Story

நன்றாக தூங்குவதற்கு இதை பின்பற்றுங்க - சித்த மருத்துவர் நித்யா விளக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Siddha doctor Nithya - Sleeping tips

 

நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.

 

தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.

 

காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். 

 

இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.