Skip to main content

‘நீ சிங்கமாக இரு. நாயாக இருக்காதே’

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

பிரச்சனைகளைப் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே வயிற்றுக்குள் ஒரு பயம் உருளத் தொடங்கும். மிகப் பெரிய பூதம் ஒன்றும் பின்னால் நிழல் போலத் தொடர்ந்து வருவதாகப் பயம் தோன்றும்.இதனால் பிரச்சனையை சமாளிப்பது நிச்சயமாக முடியவே முடியாது என்ற தவறான முடிவை மனம் மேற்கொண்டுவிடும்.இந்த எண்ணம் தோன்றிய உடனேயே வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுகிறது. வாழவே பிடிக்காத ஒரு வெறுப்பு வந்து ஆட்கொள்கிறது.எரிச்சல், கோபம், அழுகை எல்லாம் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொள்கிறது. அப்புறம் எவ்வளவு துரத்தினாலும் வெட்கம், மானமே இல்லாமல் நம்முடனேயே அவை குடித்தனம் நடத்துகிறது. சந்தோஷம் எங்கே என்று தேடுகிற அளவிற்கு நிலைமை மாறிவிடுகிறது.அதேநேரத்தில் பிரச்சனையைக் கண்டு அஞ்சிநடுங்காமல் தைரியமாக அதனை நேருக்கு நேராக எதிர்த்து நின்றால் பயம்  சட்டென்று நம்மைவிட்டு நீங்கிவிடுகிறது.மனதில் மட்டுமல்லாமல் உடம்பிலும் புதிய தெம்பு வருகிறது. தைரியம் வந்து குடியேறுகிறது. மனம் இறக்கை கட்டிப் பறக்கத் துவங்குகிறது.எனவே பிரச்சனையைக் கண்டு பயந்து தலைதெறிக்க ஓடக் கூடாது. தைரியமாக, அச்சத்தை உதறித் தள்ளிவிட்டு  எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
 

confidential story

மன உறுதியும் தன்னம்பிக்கையும் பிரச்சனைக்குத் தெளிவான தீர்வைக் காண உதவும்.இளைஞன் ஒருவனைப் பிரச்சனைகள் துரத்திக் கொண்டே இருந்தது. அவனும் ஒவ்வொரு பிரச்சனைகள் வரும்போதும் அதனைப் பார்த்துப் பயந்து விலகி ஓடினான். அவ்வாறு ஓட ஓட மேலும் மேலும் பிரச்சனைகள் அவனை விரட்டத் தொடங்கியது.ஒரு கட்டத்தில் அதற்கு மேலும் ஓட முடியாமல் சோர்ந்து போனான். மூச்சிரைத்தது. மனம் களைத்துப் போனது. ஆலமரத்தின் நிழலில் வெறுத்துப் போய் அமர்ந்தான்.அப்போது அங்கே வந்த பெரியவர் ஒருவர் அவனது பரிதாப நிலையைப் பார்த்து விசாரித்தார்.ஆறுதலாக அவர் கேட்டதும் பிரச்சனைகளின் அழுத்தம் தாங்காமல் இதுவரை குமுறிக் கொண்டிருந்த அவன் வெடித்து அழ ஆரம்பித்து விட்டான். எவ்வளவுதான் ஓடினாலும் பிரச்சனைகள் துரத்திக் கொண்டே வருவதைக் கண்ணீருடன் புலம்பினான்.

அவன் தோளைத் தொட்டு ஆறுதலாக அணைத்த பெரியவர், ‘‘நீ சிங்கமாக இரு. நாயாக இருக்காதே’’என்றார்.‘என்ன சொல்கிறார் இவர்?’ என்று புரியாத குழப்பத்துடன் அவரைப் பார்த்தான் அவன்.‘‘புரியவில்லையா? விளக்கிச் சொல்கிறேன். சிங்கத்தை நோக்கி ஒரு பொருளைத் தூக்கி எறிந்தால் அது அந்தப் பொருளை நோக்கி ஓடாது. மாறாக அந்தப் பொருளை எய்தவர் யாரோ அவர் மீது சீற்றத்துடன் பாயும். ஆனால் அதேநேரத்தில் ஒரு நாயை நோக்கி ஒரு பொருளை எறிந்தால் அது எய்தவரை நோக்கி ஓடாது. அந்தப் பொருளை நோக்கித்தான் ஓடும். அதனால்தான் உன்னை சிங்கம் போல இரு என்று சொன்னேன்’’ என்றார் பெரியவர்.அதாவது பிரச்சனையைக் கண்டு பயந்து ஓடக்கூடாது. தைரியமாக அதனை எதிர்க்க வேண்டும். ஆனால் அதற்காக முட்டாள்தனமாகவும் இருக்கக்கூடாது. பிரச்சனையின் அடிப்படை என்னவென்பதைத் தெரிந்து கொண்டு அதை நோக்கி உங்கள் செயலைத் திருப்பிவிட வேண்டும். அப்போதுதான் பிரச்சனையைத் துரத்தி வெற்றியை மீட்க முடியும்.
 

lion image

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை காசிக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தார். அங்குள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் திரும்பினார்.அவர் நடந்து வந்த பாதையின் ஒருபுறம் மிகப் பெரிய மதில் சுவர். இன்னொரு புறமோ குளம். நடுவில் ஒற்றையடிப் பாதை. கவனமாக அதில் நடந்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று எங்கிருந்தோ குரங்குகள் பட்டாளம் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. இவர் மீது அவை கோபமாகப் பாய்ந்தது. பயந்துவிட்டார் சுவாமி. திரும்பி ஓட ஆரம்பித்தார்.இவர் பயந்து ஓடுவதைப் பார்த்ததும் குரங்குகளுக்கு ஒரே ஆனந்தம். அவையும் இவரைத் துரத்த ஆரம்பித்தன.அப்போது அங்கே நின்றிருந்த வயதான துறவி ஒருவர், ‘‘திரும்பி ஓடாதே! அவற்றைத் தைரியமாக எதிர்த்து நில். பயந்து ஓடிவிடும்’’ என்று நம்பிக்கை கொடுத்தார்.அவர் சொன்னதுபோல சட்டென்று திரும்பி எதிர்த்து நின்றார் விவேகானந்தர்.இவ்வாறு சட்டென்று தங்களை நோக்கி அவர் திரும்பியதும் அந்தக் குரங்குகள் பயந்துவிட்டன. அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து பயந்து ஓடின.இதுபோலத்தான் பிரச்சனைகளைக் கண்டு ஓடக்கூடாது. தைரியமாக அதனை எதிர்கொள்ள வேண்டும். நிச்சயமாக பிரச்சனை உங்களைக் கண்டு பயந்து நடுங்கும். உங்களை நெருங்க அஞ்சும்.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பிரச்சனையை சுமுகமாகத் தீர்க்கும் வழிமுறைகளில் ஈடுபட வேண்டும்.

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.