Skip to main content

டெங்கு காய்ச்சல் ஏழுநாள் தான் இருக்கும்; ஆனால் இப்படி ஆகிடும் - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

 DrRajendran | Dengue fever |

 

டெங்கு காய்ச்சல் பற்றி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விரிவாக விளக்குகிறார்

 

டெங்கு காய்ச்சலுக்கு காரணமானவை கொசு மற்றும் வைரஸ். இதில் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். முதல் இரண்டு நாட்கள் காய்ச்சல் அதிகமாக இருக்கும். அதன் பிறகு காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். ரத்தம் இறுகிப் போவதால், ரத்த அழுத்தம் குறையும், பல்ஸ் ரேட் அதிகமாகும். இதனால் மற்ற உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பிக்கும். இதனால் ரத்தக் கசிவு நிச்சயம் இருக்கும். நோயாளியை கவனமாக நாம் கவனித்துக்கொண்டால் விரைவாக குணமாக வாய்ப்பு இருக்கிறது. 

 

இந்த நோயை விரைவில் கண்டறிவது மிகவும் முக்கியமானது. சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், பரிசோதனை செய்துகொள்வது முக்கியம். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால், உடனடியாக சந்தேகப்பட்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் நோயாளிக்கு வேறு ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் நாங்கள் கண்டறிவோம். இதன் மூலம் மற்ற நோய்கள் இருந்தால் அவையும் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படும். இதனால் மற்ற நோய்களும் களையப்படும். 

 

அதிகமான பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் உறுப்புகள் பாதிக்கப்படுவதை முடிந்தவரை நாம் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் ஏழு நாட்கள் வரை நன்றாக பாதுகாக்கப்பட்டால், அதன் பிறகு அவருக்கான பிரச்சனை என்பது குறைவாகவே இருக்கும். டெங்கு நோயை ஏழு நாள் காய்ச்சல் என்று கூட சொல்வார்கள். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் டெங்கு நோய் ஏற்பட்டால் அதிகமான உதிரப்போக்கு ஏற்படும். இதை நாம் கவனமாக அணுக வேண்டும். 

 

சொத்தைப் பற்களில் இருந்தும் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சரியான பரிசோதனை மேற்கொண்டு, நன்றாக தண்ணீர் அருந்தி, சரியான மருந்துகளை நாம் எடுத்து வந்தால் நிச்சயம் டெங்கு நோயை நம்மால் குணப்படுத்த முடியும். சரியான சிகிச்சையின் மூலம், பாதிப்புக்கு உள்ளான நோயாளி மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

வைரஸ் காய்ச்சலால் இறப்பு ஏற்படுமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

 Dr Rajendran | Virus Fever | Dengue Fever |

 

இந்த மழைக்காலத்தில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வெறும் காய்ச்சல்தானா? அல்லது அதைத் தாண்டி ஏதேனும் பிரச்சனை உருவாகுமா என்ற நமது கேள்விக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 

மழைக்கால நோய்கள் என்பது பல வகைகளில் உண்டு. அவற்றில் முக்கியமானது வைரஸ் காய்ச்சல். இது ஒரு நுண் கிருமிகளால் உண்டாவது. தற்போதைய மழைக்கால வைரஸ் காய்ச்சல்களில் எவற்றிற்கெல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்புளுயன்சா வைரஸ், ஹெச் 1 என் 1, ஸ்வைன் ப்ளூ, போன்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற காய்ச்சல்கள் ஆபத்து நிறைந்தவை. வைரஸ் தொற்றால் ஏற்படுகிற காய்ச்சல் வெறும் காய்ச்சல் மட்டுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாகும். 

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாகி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கு கடுமையான காய்ச்சலாக இருக்கும். அதோடு உடல் வலி, இடுப்பில் கடுமையான வலி, கண்ணைச்சுற்றி வலி போன்ற வலிகளால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுவார்கள். அடுத்தடுத்த நாட்களில் குணமாகிவிடுவது போன்று தோன்றியிருக்கும் உடனே மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுவார்கள். அது மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும். 

 

குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தது, நாங்களே மாத்திரை கொடுத்தோம். மூன்று நாளில் சரியாகி விட்டது என்று பள்ளிக்கு அனுப்பினோம், ஆனால் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டாள் என்று மருத்துவரை அணுகுவார்கள். தானாகவே மாத்திரை எடுத்துக் கொள்வது மிகவும் சிக்கலில் முடியும். 

 

காய்ச்சலை சரி பண்ண வெறும் பாராசிட்டமால் என்ற எண்ணத்தை முதலில் மனதிலிருந்து நீக்குங்கள். அது ஒரு வகை வலி நிவாரணி மருந்து மட்டுமே. முறையாக மருத்துவரை அணுகி, என்ன வகையான வைரஸ் தொற்று என்பதை உறுதி செய்ய இரத்த பரிசோதனை செய்து, அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். நீர் ஆகாரம் உள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே மழைக்கால காய்ச்சலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

எலிக் காய்ச்சலால் இந்த உறுப்பெல்லாம் பாதிக்கப்படுமா? - டாக்டர் இராஜேந்திரன் விளக்கம்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Dr Rajendran | Fever | Rat Bite Fever |

 

மழைக் காலங்களில் பலவகை காய்ச்சல் உருவாகிறது. அவற்றில் ஒருவகை எலிக் காய்ச்சல் ஆகும். இந்த வகை காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது. அதனால் எந்த உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்று ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் இராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 

டெங்கு காய்ச்சல், மலேரியா போன்று இதுவரை எத்தனையோ வகையான காய்ச்சல்களைப் பார்த்திருப்போம். ஆனால் எலிக் காய்ச்சலைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த வகை காய்ச்சல் மழைக்காலத்தில் ஏற்படக்கூடியது. ஸ்பைரோகீட் என்ற விசக்கிருமியால் ஏற்படக்கூடியது. இந்த கிருமி பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீரால் பரவக்கூடியது. 

 

நோயால் பாதிக்கப்பட்டு இறப்பு நிலையை அடையும் எலி, சாவதற்கு முன் அதிகப்படியான சிறுநீரை வெளியேற்றும். அந்த சிறுநீரில் உள்ள விசக்கிருமிகள் மழைக்காலங்களில் தேங்கிய தண்ணீரில் கலக்கும். அங்கிருந்து பரவும் வேலை தொடங்கும். மழைத்தண்ணீரை வெறும் காலில் மிதிப்பதால் காலின் பாதத்தினை துளைத்துக் கொண்டு மனித உடலுக்குள் செல்லும். ஒரு வேளை கால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டிருந்தாலோ, கீறல் காயங்கள் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலோ ஸ்பைரோகீட் கிருமிக்கு உடலுக்குள் செல்வதற்கு இன்னும் இலகுவாகி விடும். 

 

ஒரு பெரிய விஐபிக்கு தீவிரமான காய்ச்சல் ஏற்பட்டது. ஏதேதோ சோதனை செய்தும் சிகிச்சை செய்தும் சரியாகவில்லை. நான் தான் எலிக் காய்ச்சல் சோதனை செய்து பார்க்கலாமே என்றேன். அவரோ பெரிய விஐபி எங்குமே செருப்பு போட்டு போகாமல் போகமாட்டார், வீட்டுக்குள் கூட செருப்பு அணிவார். அவருக்கு எப்படி ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று சக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அவரிடம் பேசிய போது கோவிலுக்குள் செருப்பு போடாமல் போனதாகவும் அங்கே ஒரு எலி செத்துக் கிடந்ததையும் பார்த்ததாகவும், மழை நீர் தேங்கி இருந்ததில் கால் நனைத்ததாகவும் சொன்னார். பிறகு எலிக் காய்ச்சலுக்கான சோதனை செய்து பார்த்தபோது நோய் உறுதியானது. அதற்கான சிகிச்சை கொடுத்து குணமாக்கினோம்.

 

அதனால் மழைக் காலங்களில் ஏற்படுகிற காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த வகை காய்ச்சலால் கல்லீரல், கிட்னி, நரம்பு மண்டலம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எனவே மழைக் காலங்களில் எலிக் காய்ச்சலையும் மனதில் வைத்து நாம் வரும் முன் காப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
 

 

விரிவான அலசல் கட்டுரைகள்