Skip to main content

தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்பவர்களுக்கு... - மனநல மருத்துவர் ராதிகா  முருகேசன் விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
DrRadhika Murugesan mental health tips - self harm  

தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளும் செல்ப் ஹார்ம் நோய் என்றால் என்ன? அது எப்படியான மனச் சிக்கலை உருவாக்கும் என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

பொதுவாக மன நல மருத்துவரிடம் தற்கொலை எண்ணத்திற்கு தீர்வு கேட்டுத்தான் வருவார்கள். ஆனால் அதுமட்டுமில்லாமல் தன்னைத் தானே வருத்திக் கொள்ளுதல், தற்கொலை அல்லாமல் ஆனால் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளுமளவு செல்லும் வகையை பற்றி பேசலாம். இதுபோன்று செய்யும்போது அவர்கள் ஏதோ ஒரு செய்தியை தான் சொல்ல வருகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மன வலியை வெளிக்காட்ட முடியாமல், உடல் வழியாக உணர்த்துவார்கள். உதாரணத்திற்கு  தலை வலிக்கும் போது தைலம் தடவுவதால் வலி சரி ஆவதில்லை. ஆனால் வலி கொடுக்கும் அந்த உணர்வை தைலத்தை தடவி வேறொரு உணர்வால் அதை மறைக்க செய்வதை போல இந்த சுய வருத்தலை பார்க்கலாம்.  

இதுபோன்ற பழக்கம் எல்லா மதம் சார்ந்த முறையில் கூட நிறைய இருக்கிறது. தீ மிதிப்பது, அலகு குத்திக் கொள்ளுவது, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வது போன்றவை இருந்து வருகிறது. இந்த முறைகள் எல்லாமே கடவுளிடம்  தன்னுடைய பிரச்சனை, வலிகளுக்கு நிவாரணம் கேட்பது போன்றவை தான். செல்ப் ஹார்மில் பெரும்பாலானவை கையை குத்திக் கொள்வது, சுவரை  குத்திக் கொள்வது போன்றவை இருக்கும். ஒருவர் மீதோ, சமூகம் மீதோ, ஏதோ ஒரு அளவுமீறின கோவத்தில் சிலர் அதிகமாக சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் வலி, கோபத்தில் கூட வயிறு முழுமையாக இருந்தாலும் மேலும் மேலும் தன்னை தண்டித்து சாப்பிடுவர். மேலும் அளவுமீறின உடற்பயிற்சி செய்வது, சூடான ஒரு பொருளை கையாள்வது, புகை பழக்கம், குடிப்பழக்கம் கூட போன்றவையும் இதில் அடங்கும். ஆண்களை பொறுத்தவரை தற்கொலை அதிகமாக இருக்கும். பெண்களை பொறுத்தவரை இதுபோன்று செல்ப் ஹார்ம் நிறைய இருக்கும். இது குறிப்பாக  பார்டார் லைன் ஆளுமை கோளாறு என்று சொல்லக்கூடிய நோயில் அடங்கும்.

உள்ளுக்குள்ளே அவர்களுக்கென்று தனி மதிப்பு இல்லாததால் வெறுமையாக உணர்பவர்களிடம் பொதுவாக இந்த செல்ப் ஹார்மை பார்க்கலாம். இந்த காலத்தில் டீன் ஏஜ் குழந்தைகளிடம் கூட இது நிறைய காணப்படுகிறது. இதுபோன்று மனதில் உள்ள வலியைக் கையாளும் யுக்தியாக அப்படியே அதை ஜர்னலில் எழுதுவது, மெடிட்டேஷன் செய்வது, பாக்சிங் போன்ற ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டியில் திசை திருப்பி தங்களுடைய வலியை அதில் காட்டி ஆரோக்கியமான வகையில் நம்முடைய உணர்வை வெளிக்காட்டி தீய வகையில் செல்லாமல் தடுக்கலாம்.

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.