Skip to main content

அதீத யோசனை, மன அழுத்தத்திலிருந்து மீள்வது எப்படி? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
DrRadhika Murugesan mental health tips 

அதிகப்படியான யோசனை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

சாதாரணமாக ஒருவருக்கு 72,000க்கும் அதிகமான சிந்தனைகள் வரும். இது இயல்பானது. கற்காலத்தில்  குகைகளில் வாழ்ந்த மனிதன் தன்னை விலங்கிடமிருந்து காப்பாற்றிக்கொண்ட காலத்திலிருந்து இந்த நெகடிவ் திங்கிங் என்பது பரிணாமத்தில் இயற்கையாகவே இருந்து வருகிறது. இந்த ஓவர் திங்கிங் என்பதை மருத்துவத்தில் 'ரூமினேஷன்' என்று குறிப்பிடுவோம். அசை போடுதல் என்று அர்த்தம். ஒருவர் நடந்ததையே திருப்பி திருப்பி நினைத்து பார்த்து அசை போட்டுக்கொண்டே இருக்கும்போது அதுவே மோசமான நிலைக்கு கொண்டு போய்விடும்.

அசை போடுவதால் அவர்களுக்கு அதிலிருந்து தீர்வு கிடைக்காது. ஆனால் அதையே வேறு வேறு விதமாக சிந்தித்து கொண்டிருப்பர். ஒன்று நடந்ததை மட்டுமே யோசிக்கும் வரலாற்று பிரியராகவோ அல்லது எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் ஜோசியக்காரர்களாகவோ தான் சிந்திக்கிறார்கள். இதனால் தான் 'நிகழ்கால உணர்வு' இல்லாமல் இருப்பது என்று சொல்லப்படுவது. இதில் சோசியல் மீடியா பெரும் பங்கு விளைவிக்கின்றது. நமது மூளையை மல்டி டாஸ்கிங் செய்ய வைத்து அளவுக்கதிகமான சக்தியை வாங்கி அடிமையாக வைத்திருக்கின்றது. இது அசைபோடுவது என்னும் ரூமினேஷனுடன் நின்று விடாமல் டிப்ரெஷன் என்று நோய் வரை சென்றால் ஆபத்துதான்.

தானாக வரும் சிந்தனைகள் என்பது 'இன்றூசிவ் தாட்ஸ்'-இல் வரும். உதாரணமாக தினசரி, கதவை பூட்டினோமா கேஸ் அணைத்தோமா என்று சந்தேகம் மற்றும் குழப்பமான எண்ணங்கள் போன்று வருவன. இதற்கும் ரூமினேஷன்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ரூமினேஷன்க்கு நல்ல தீர்வாக அமைவது மனதை திசைதிருப்புதல் தான். மனம் யோசித்துக் கொண்டு இருக்கும்போது உடனடியாக அலமாரியை அடுக்குவது போன்றவை செய்யலாம். அதை செய்து முடித்ததும் நமக்கு நாமே சாதித்தது போன்று ஒருவித திருப்தி கிடைக்கும். அடுத்த யுக்தியாக அர்ப்பணிக்கப்பட்ட கவலை நேரம் என்று ஒதுக்கிவிட்டு மத்த நேரம் சிந்தனைகள் வந்தாலும், அதற்கான நேரம் என்று வரும்போது நினைத்து கொள்ளலாம் என்று மனதை நாமே திசை திருப்பி கொள்ளலாம். 

முடிந்து போன காதலயோ, மாமியாரையோ பேசிய கடின வாக்குவாதங்களை மீண்டும் நினைத்து அசைபோடும். அது நிஜத்தில் அந்த இடத்தில் அவர்கள் இல்லை என்றாலும், அந்த நினைவுகள் நிஜமாக நடந்தபோது கொடுத்த அதே உணர்வுகள் நீங்கள் நினைக்கும்போது மீண்டும் உணர்வீர்கள். இது ஆரோக்கியமான விஷயமன்று. இதற்கு நினைவாற்றல் தியானம் (mindfulness practice) பயிற்சி எடுக்கலாம். ஒரு இடத்தில் கண்களை மூடி உட்கார்ந்து மூச்சினில் மனதை செலுத்தி, சிந்தனைகள் வரும்போது இயல்பாக அதன் போக்கினில் அப்படியே விட்டுவிட வேண்டும். நம்மை சுற்றி வேறேதும் சத்தம் கேட்டாலும், நாம் இருக்கும் இடத்தை உணர்ந்து பார்த்து அந்த குறிப்பிட்ட நேரம் நாம் ஒருமித்த மனதோடு இருப்பது என்பது நம் வாழ்க்கை முறை. அதுதான்  'mindfulness' என்பது.

இதற்கென்று பயிற்சி என்று ஒதுக்கவில்லை என்றாலும், நாம் சாப்பிடும்  போது  கூட, சுற்றி இருப்பனவற்றை கவனித்து அதில் ஒருநிலையோடு 20 நிமிடம் செய்தோம் என்றாலும் கூட நல்ல பலன் இருக்கும். இதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. மனது அலைபாயும் பொழுது ஜர்னலிங் கூட செய்யலாம். நம் சிந்தனையை அப்படியே எழுதுவதன் மூலம் கூட உங்கள் கோவம் கூட குறைந்து கொண்டே வரும். அடுத்து 'எம்ப்டி சேர்' முறை என்று உண்டு. அதில் உங்களுக்கு யார் மேல் கோவம் வருகிறதோ அவர்கள் உங்கள் முன்னே இருப்பது போன்று நினைத்து கொண்டு ஒரு சேரை பார்த்து உங்கள் மனதில் உள்ள கோபங்களை கொட்டி மனதை அமைதிப்படுத்தலாம்.

Next Story

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா? -  மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dr Radhika | Brain | Youngsters  

குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார். 

முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது  அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும். 

குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை. 

மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம். 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.