Skip to main content

நோயாளிகளுக்கு பொறுமை தேவை - ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 03/08/2023 | Edited on 07/08/2023

 

Dr. C Rajendiran  Interview

 

நோயாளிகளுக்கு இருக்க வேண்டிய பொறுமை பற்றியும் நோயின் தன்மை குறித்து மருத்துவர்கள் செய்யும் பரிசோதனைகள் குறித்தும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்

 

ஒரு பெரியவரை அவருடைய மகன் என்னிடம் அழைத்து வந்தார். கால் வலியோடு அவர் வந்தார். அவரை நான் பரிசோதித்தேன். காலில் அடிபட்டுவிட்டது, ரத்தம் வருகிறது என்று அவர் கூறினார். அவரை உட்கார வைத்து நாடி பார்த்தேன். அவருக்கு என் மீது கோபம் வந்தது. அவருக்கு காலில் அடிபட்டுள்ள நிலையில் நான் ஏன் நாடி பார்க்கிறேன் என்பது தான் அவருடைய கோபத்துக்கான காரணம். அவருக்கு காலில் ரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. முதலில் நாடி பார்ப்பது என்னுடைய வழக்கம்.

 

அதன் பிறகு அவருக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது என்று நான் சோதித்தேன். அவருடைய கோபம் அடுத்த கட்டத்துக்கு சென்றது. காயம் குறித்து கேட்டபோது, சாப்பிட்டு எழும்போது டைனிங் டேபிளில் இடித்துக்கொண்டதாக அவர் கூறினார். எத்தனை வருடங்களாக அவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்று கேட்டேன். தன்னுடைய தாத்தா காலத்து வீடு அது என்று அவர் கூறினார். டைனிங் டேபிளும் நீண்ட காலமாக வீட்டில் இருக்கிறது என்று அவர் சொன்னார். இப்போதுதான் முதல் முறையாக அதில் இடித்துக்கொண்டதாக அவர் கூறினார்.

 

என்னிடம் அழைத்து வந்ததற்காக அவருடைய மகனை அவர் திட்டினார். ஒரு பக்கம் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே போவதால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இவை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். அந்தப் பெரியவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அவருக்கு ரத்த அழுத்தம் இருப்பதே அவருக்குத் தெரியவில்லை. குறிப்பிட்ட அந்த நாளில் ரத்த அழுத்தம் அவருக்கு அதிகமானதால் தான், மயக்க நிலை ஏற்பட்டு அவர் டைனிங் டேபிளில் இடித்துக்கொண்டார். 

 

அடிபட்டதற்கான சிகிச்சை மட்டும் அவருக்கு நான் கொடுத்தால் போதும் என்று அவர் விரும்பினார். ஆனால் ஒரு நல்ல மருத்துவர் எப்போதுமே பிரச்சனைக்கான மூலக் காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைய வேண்டும். இதற்கான பொறுமையும் அர்ப்பணிப்பும் இன்று நோயாளிகளுக்கு இல்லை. அவர்களுக்கு என்ன பிரச்சனையோ அதை மட்டுமே பார்ப்பது தவறு. என்னுடைய 52 ஆண்டு கால மருத்துவ வாழ்க்கையில் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் இந்த மனநிலை மாற்றத்தை ஒரு முக்கியமான மாற்றமாக நான் பார்க்கிறேன்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலத்தை வைத்தே நோயினை கண்டறியலாமா? - பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

  Dr Chandrsekar | Hemorrhoids | Constipation | Motion Problem |

 

மலச்சிக்கலால் உருவாகும் மூல நோயின் தன்மைகள் பற்றி தொடர்ச்சியாக நமக்கு விழிப்புணர்வு தகவல்களை டாக்டர் சந்திரசேகர் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக உணவு முறையினால் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்படும் சிக்கல் பற்றியும், வெளியேறும் மலத்தினை வைத்தே நோயின் தன்மையை கண்டறிவது பற்றியும் விளக்குகிறார்.

 

நமது உணவு முறையே சரிவிகித உணவாகத்தான் இருந்து வந்தது. அதாவது கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கும், செரிமானத்திற்கு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள், புரதத்திற்கு பருப்பு கூட்டு இருக்கும், நார்ச்சத்திற்கு பொரியல் இருக்கும் இவ்வாறாக அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொண்டோம். தண்ணீரும், மோரும் இறுதியாக எடுத்துக் கொள்ளுதல் எளிமையாக செரிமானம் அடைந்து சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணவு முறை காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

 

ஆனால், இப்போதெல்லாம் எல்லா காய்கறிகளையுமே ஒன்றாக சேர்த்து சமைத்து கொடுக்கிறார்கள். உணவில் கறியை வேக வைத்து பிரியாணியாக கொடுக்கிறார்கள். பக்கெட் சிக்கன் என்று வெறும் சிக்கனை மட்டுமே வாங்கி வைத்து உண்ணுகிறார்கள். இது சரியாக செரிமானம் அடையாமல் மலச்சிக்கலை உருவாக்குகிறது. முந்தைய காலங்களில் மலம் வெளியேறிய பிறகு பரிசோதிப்பார்கள், கருப்பாக இருந்தால் உள் உறுப்புகளில் இரத்த கசிவு இருக்கிறது, வெள்ளையாக வெளியேறினால் மஞ்சள் காமாலை இருக்கிறது, ரத்தக்கசிவு வெளியேறினால் மூலம் இருக்கிறது என்பதை கண்டறிந்து சொல்வார்கள்.

 

இன்றைய வெஸ்டர்ன் டாய்லெட் முறையில் எப்படி மலம் வெளியேறுகிறது என்று அவரவர்களுக்கே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி நோய் என்ன இருக்கிறது என்பது கண்டறிய முடியும்? நோயினை கண்டறிய முடியாத சாத்தியமற்ற நிலையில் தான் இந்த வாழ்க்கை முறை இருக்கிறது. வலியே இல்லாமல் இரத்தம் வருகிற மலச்சிக்கலால் மூல நோய் உருவாகும். ஆரம்பத்திலேயே மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மருந்து, மாத்திரை, உணவு பழக்க வழக்க மாற்றங்களால் மூல நோயைச் சரி செய்ய முடியும். நோயின் தன்மை முற்றும் போது அறுவை சிகிச்சையால் தான் மூல நோயைச் சரி செய்ய முடியும்.

 


 

Next Story

வைரஸ் காய்ச்சலால் இறப்பு ஏற்படுமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

 Dr Rajendran | Virus Fever | Dengue Fever |

 

இந்த மழைக்காலத்தில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது வெறும் காய்ச்சல்தானா? அல்லது அதைத் தாண்டி ஏதேனும் பிரச்சனை உருவாகுமா என்ற நமது கேள்விக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் விளக்கம் அளிக்கிறார்.

 

மழைக்கால நோய்கள் என்பது பல வகைகளில் உண்டு. அவற்றில் முக்கியமானது வைரஸ் காய்ச்சல். இது ஒரு நுண் கிருமிகளால் உண்டாவது. தற்போதைய மழைக்கால வைரஸ் காய்ச்சல்களில் எவற்றிற்கெல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்புளுயன்சா வைரஸ், ஹெச் 1 என் 1, ஸ்வைன் ப்ளூ, போன்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற காய்ச்சல்கள் ஆபத்து நிறைந்தவை. வைரஸ் தொற்றால் ஏற்படுகிற காய்ச்சல் வெறும் காய்ச்சல் மட்டுமில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நிறைய வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாகும். 

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாகி வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கு கடுமையான காய்ச்சலாக இருக்கும். அதோடு உடல் வலி, இடுப்பில் கடுமையான வலி, கண்ணைச்சுற்றி வலி போன்ற வலிகளால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுவார்கள். அடுத்தடுத்த நாட்களில் குணமாகிவிடுவது போன்று தோன்றியிருக்கும் உடனே மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுவார்கள். அது மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும். 

 

குழந்தைகளுக்கு பெரியவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தது, நாங்களே மாத்திரை கொடுத்தோம். மூன்று நாளில் சரியாகி விட்டது என்று பள்ளிக்கு அனுப்பினோம், ஆனால் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டாள் என்று மருத்துவரை அணுகுவார்கள். தானாகவே மாத்திரை எடுத்துக் கொள்வது மிகவும் சிக்கலில் முடியும். 

 

காய்ச்சலை சரி பண்ண வெறும் பாராசிட்டமால் என்ற எண்ணத்தை முதலில் மனதிலிருந்து நீக்குங்கள். அது ஒரு வகை வலி நிவாரணி மருந்து மட்டுமே. முறையாக மருத்துவரை அணுகி, என்ன வகையான வைரஸ் தொற்று என்பதை உறுதி செய்ய இரத்த பரிசோதனை செய்து, அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். நீர் ஆகாரம் உள் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே மழைக்கால காய்ச்சலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளும் முறையாகும்.