Skip to main content

கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? - விவரிக்கிறார் டாக்டர் அருணாச்சலம்

Published on 08/04/2023 | Edited on 17/04/2023

 

 Dr Arunachalam health tips for summer

 

இந்தக் கோடை காலத்தில் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து  டாக்டர். அருணாச்சலம் விரிவாக விளக்குகிறார்.

 

வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. எவ்வளவு குளிரை நாம் சந்தித்தோமோ, அதைவிட அதிக வெயிலுக்கு நாம் தயாராக வேண்டும் என்று அரசாங்கம் எச்சரிக்கிறது. இந்தக் கோடை காலத்தில் தண்ணீரை சுற்றியே நம்முடைய வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய உடல் பெரும்பாலும் தண்ணீரால் ஆனது. நீர் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியம். சுத்தமான தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். அசுத்தமான தண்ணீரால் பல நோய்கள் வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

 

கோடைக் காலத்தில் காலரா போன்ற நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்று நாம் நம்பினாலும் அதனை காய்ச்சித்தான் குடிக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரை மட்டுமே நாம் குடிக்க வேண்டும். ஆபீஸில் ஏசியில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை. குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை தினமும் அருந்த வேண்டும். நீர் மோர், சாலட் சாப்பிடுவது நல்லது. சிறுநீர் தொடர்ந்து மஞ்சளாக வெளியேறினாலோ, நீண்ட நேரமாக சிறுநீர் வரவில்லை என்றாலோ நீங்கள் சரியான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். 

 

சிலருக்கு நீர் பற்றாக்குறையால் சிறுநீரில் ரத்தம் வெளியேறும். தண்ணீரால் உடலை அவ்வப்போது கழுவ வேண்டியது அவசியம். இல்லையெனில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். கோடைக் காலத்தில் அதிகம் ஜீன்ஸ் அணியாமல் இருப்பது நல்லது. வியர்வையை உறிஞ்சும் வகையிலான துணிகளை உடுத்துவது நல்லது. துண்டை வைத்து உடல் பாகங்களை அவ்வப்போது கழுவி துடைத்தால் உடல் சுத்தமாக இருக்கும். சிறுநீரில் கல் ஏற்படும் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு அதிகம் தண்ணீர் குடிப்பது தான் தீர்வு. ஞாயிற்றுக்கிழமைகளிலும் உணவில் பழங்களும் காய்கறிகளும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அன்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

 


 

Next Story

அதிகரிக்கும் வெப்பம்; செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?

Published on 22/04/2024 | Edited on 23/04/2024
What to do? What not to do? on increasing heat in summer season

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

இதனிடையே, வெப்ப நிலை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால்  மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், குழுந்தைகள் மற்றும் கால்நடைகளை வெளியே அழைத்து வருவதை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் பலர் அறிவுறுத்துகின்றனர். இந்த வெப்பத்தில் இருந்து தப்பிக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பின்வருமாறு காண்போம்.

வெப்பத்தைத் தனித்துக்கொள்ள தாகம் எடுக்கவில்லை என்றாலும், பொது மக்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தால் மயக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார குழுவினர் கூறுகின்றனர். ஒருவேளை அவசர வேளையாக வெளியே செல்ல நேரிட்டால், வெளியே செல்லும் போது கட்டாயம் தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர்.

அதே வேளையில், பாட்டிலில் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பானங்கள், தேநீர், காபி, மது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது போன்றவற்றை தவிர்த்துவிட்டு மோர், எலுமிச்சை, தண்ணீர் போன்ற வீட்டில் செய்யக்கூடிய பானங்களைக் குடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனையடுத்து, நண்பகலில் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியே வேலை பார்ப்பவராக இருந்தால் குடையோ அல்லது தொப்பியோ இல்லாமல் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அலை தாக்கத்தின் போது, புரதச் சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல் சோர்வுற்றாலோ அல்லது காய்ச்சல் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் எனச் சுகாதார துறையினர் கூறுகின்றனர். மேலும், வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகளை வெளியே கட்டி போடாமல் நிழலில் கட்டி வைக்க வேண்டும்.

அந்தப் பிராணிகளுக்கும் அதிக தண்ணீரை கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், வீட்டை அடிக்கடி தண்ணீர் மூலம் சுத்தம் செய்து குளிர்ச்சியாக வைக்க வேண்டும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொது மக்கள் மேற்கொண்டால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.