Skip to main content

தமிழ்த் தேசியவாதிகள் கவனிக்க...

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

1937 தேர்தல்களில் நீதிக்கட்சி தோல்வியுற்றதும் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் கூறும் அறிவுரை, "ஒற்றுமை மிகவும் முக்கியம்.' 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள் மதராஸ் கன்னிமேரா ஹோட்டலில், சண்டே அப்சர்வர் ஆசிரியரான பி. பாலசுப்பிரமணியம் அளித்த நண்பகல் விருந்தின்போது டாக்டர். அம்பேத்கர் உரை நிகழ்த்தினார்.

 

ambedkar



டாக்டர் அம்பேத்கார் உரை "நான் ஆய்வு செய்த அளவில், பிராமணர் அல்லாதார் கட்சி ஒன்று தோன்றியிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். பிராமணர் அல்லாதார் கட்சியின் அடிப்படைக் கோட்பாடு, அந்தச் சொல் குறிப்பிடுவது போல ஒரு வகுப்புவாதத் தன்மை கொண்டதன்று. பிராமணர் அல்லாதார் கட்சியை நடத்துபவர்கள் யார் என்பது முக்கியம் அன்று. பிராமணர்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் இடைப்பட்ட ஒரு வகுப்பார் இதனை வழிநடத்துகின்றனர். ஜனநாயக வழிப்பட்டதாக அந்தக்கட்சி செயல்படவில்லை என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. எனவே, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இக்கட்சியின் வளர்ச்சியை கவலையுடனும் அக்கறையுடனும் கவனித்து வருகின்றனர். ஒரு பிராமணரல்லாதார் கட்சியின் தோற்றம் நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். அக்கட்சியின் வீழ்ச்சியும் வேதனையுடன் காணவேண்டிய ஒரு நிகழ்ச்சியே. 1937 தேர்தல்களில் ஏன் அக்கட்சி படுதோல்வி அடைந்தது என்பதை அக்கட்சித் தலைவர்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்னால் 24 ஆண்டுக்காலம் மதராசில் பிராமணர் அல்லாதார் கட்சியின் ஆளுமை இருந்துவந்தது. நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த அக்கட்சி அட்டைவீடு போலச் சரிந்துபோனது எதனால்? பிராமணர் அல்லாதார் மத்தியிலேயே இக்கட்சியின் செல்வாக்கு கெட்டது எதனால்? இந்த வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என நான் கருதுகிறேன்.

 

neethikatchi



1. பிராமணர் பிரிவுக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன என்பதை இவர்கள் உணரவில்லை. பிராமணர்களுக்கு எதிராகத் தீவிரமாக அவர்கள் பிரச்சாரம் செய்தபோதும், இவர்களுக்கு இடையிலுள்ள வேறுபாடுகள் கொள்கை வழிப்பட்டவை என்று இவர்கள் கூறமுடியுமா? பிராமணர் தன்மை அவர்களிடமே எவ்வளவு இருந்தது? அவர்கள் "நவாப்'களாக இருந்தார்கள்.

2. இரண்டாம் தர பிராமணர்களாக தங்களை எண்ணிக்கொண்டார்கள். பிராமணியத்தை விட்டொழிப்பதற்கு பதிலாக, எட்டத் தகுந்த இலக்காக கருதி அதன் ஆத்மாவை இவர்கள் இறுகப் பற்றியிருந்தார்கள். பிராமணர்களுக்கு எதிரான அவர்களது கோபம் எல்லாம் தங்களுக்கு அவர்கள் இரண்டாந்தரப் பட்டம் தருகிறார்கள் என்பதே. 

 

neethikatchi



நீதிக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள் 

1. ஒரு கட்சியைச் சேர்ந்தார்கள், இன்னொரு கட்சியை எதிர்க்கச் சொல்லும்போது இவ்விரு கட்சிகளுக்கிடையே உள்ள கொள்கைரீதியான வேறுபாடுகள் என்ன என்று அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அந்தக் கட்சி எப்படி வேரூன்றும்? எனவே, பிராமணிய வகுப்பினருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலுள்ள கொள்கை வேற்றுமைகளை ஒழுங்குற எடுத்துக் கூறாததே அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்.

2. கட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டாவது காரணம் அதனுடைய வேலைத் திட்டம் மிகக் குறுகலானதாக இருந்தது ஆகும். இக்கட்சியின் எதிரிகள் "வேலை தேடிகள்' என்று இக்கட்சியை வர்ணித்தனர். இந்தச் சொல்லைத்தான் "இந்து' பத்திரிகை அடிக்கடி பயன்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அடுத்த கட்சியினரும் இதே வகைப்பட்டவர்தானே. பிராமணரல்லாதார் கட்சியின் வேலைத் திட்டத் திலுள்ள ஒரு குறை என்னவென்றால், அவர்கள் தமது இளைஞர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் கிட்டவேண்டும் என்று கூறுவதே, இது மிகவும் நியாயமானதுதான். பிராமணரல்லாத இளைஞர்கள்- இவர்களுக்கு வேலை கிடைப்பதற்காக கட்சி 30 வருட காலம் போராடியிருக்கிறது. தமக்கு வேலையும், ஊதியமும் கிடைத்த பின்னர் தமது கட்சியை, நினைத்துப் பார்த்தார்களா? கடந்த இருபது வருடங்களாக பதவியிலிருந்த கட்சியை கிராமங்களில் வசிக்கும் 90 சதவீத மக்களை மறந்துவிட்டனர். இவர்கள் வசதி சிறிதுமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு கடன்காரர்களின் பிடியில் சிக்கி அல்லல்படுகின்றனர்."இந்தக் காலகட்டத்தில் இயற்றப் பட்ட சட்டங்களை நான் பரிசீலித்தேன். நிலச்சீர்த்திருத்தம் என்ற ஒரேயொரு நடவடிக்கை தவிர, குத்தகைதாரர்கள் விவசாயிகள் பற்றி இவர்கள் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. அதாவது, ""காங்கிரஸ் பேர்வழிகள் இவர்களது ஆடைகளையே திருடிச் சென்று விட்டனர்'' என்றுதான் இது காட்டுகிறது.

 

neethikatchi



நடந்துள்ள சம்பவங்கள் என்னைப் பெரிதும் வருத்துகின்றன. ஒரு கட்சி மட்டும்தான் அவர்களைக் காப்பாற்றும் என்று மட்டும் நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். ஒரு கட்சிக்கு நல்ல தலைவர் வேண்டும். ஒரு கட்சிக்கு நல்ல அமைப்பு வேண்டும், ஒரு கட்சிக்கு அரசியல் மேடை வேண்டும்.''"தலைவர்களை நாம் நன்றாகவே விமர்சிக்கலாம். காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்வோம். மகாத்மா காந்தியை மற்றெந்த நாடு தமது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும்? அவருக்கு தொலைநோக்கோ, விஷய ஞானமோ, ஆய்வுத் திறனோ இல்லை. தனது வாழ்க்கை முழுதும் பொது வாழ்வில் தோல்வியே கண்டவர் அவர். இந்தியா வெற்றியடைய இருந்த தருணங்களில் காந்தியால் எதுவும் நன்மை விளைந்ததாகக் கூறமுடியாது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஜின்னா பாகிஸ்தான் பிரச்சனையை எழுப்பியபோது அதை ஒரு பாவம் என்று கூறி அதற்குச் செவிமடுக்க மறுத்தார். இறுதியில் பிரச்சனை பெரிதாக வளர்ந்தது. திரு. காந்தி திகிலடைந்தார். இப்போது குட்டிக்கரணம் போட்டு அதனுடன் மல்லாடி வருகிறார். எனினும் அவர் இன்னும் தேசத் தலைவராக இருந்துவருகிறார். ஏனென்றால், தனது தலைவர்களை காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்பதில்லை.''

"ஜின்னாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் ஒரு எதேச்சதிகாரத் தலைவர். முஸ்லீம் லீக் என்பது அவரது தனிச் சொத்து. ஆனால் முஸ்லீம்கள் அவர் மீது நியாயமான நம்பிக்கை வைத்துள்ளனர்.'' காந்தியின் மீது எத்தகையதொரு குற்றச்சாட்டு செய்யப்பட்டாலும் கட்சி அமைப்பை அது சீர்குலைக்கும் என்பதால் ஜனநாயகத்துக்கு முரணான பல விஷயங்களை காங்கிரஸ் சகித்துக் கொள்கிறது. எனவே, பிராமணரல்லாதோருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ""ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. எனவே தாமதமின்றி பாடம் கற்றுக் கொள்ளுங்கள்'' என்பதுதான். (பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் -பகுதி 37, பக் 405-408, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை).

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.