Skip to main content

மாணவர்களைத் தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் கல்வி!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
Image

 

கடலூர் அருகே ஆன்லைனில் கல்வி கற்க வசதியில்லாததால் மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகவும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் கல்வி முறை என்பது மாணவர்கள் இடையே பாகுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் முறையானதாக இருக்காது என்றும் கல்வியாளர்களும் எதிர்கட்சியினரும் தொடர்ந்து எச்சரித்தும் கூட அரசு செவிமடுக்கவில்லை.

 

ஆன்லைன் கல்வியை முறைப்படுத்தும் நோக்கிலோ, மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கிலோ அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் கல்வி எதிர்பாராத பல்வேறு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்புப் பயிலும் விக்னேஷ் என்னும் மாணவன் இணையதளம் மூலமாக கல்வி கற்க உபகரணங்கள் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும், அரசு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்களை நடத்தி வருகின்றன. இதனால் ஆன்லைன் பாடங்களைக் கற்க, விக்னேஷ் தனது பெற்றோரிடம் செல்போன் ஒன்று வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செல்போன் வாங்கக்கூடிய அளவிற்கு பணம் இல்லை என்பதால் அவரது பெற்றோரால் வாங்கித்தர இயலவில்லை.

 

கடந்த ஜூன் 29 அன்று அவரது தந்தை விஜயகுமார் முந்திரிக்கொட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் செல்போன் வாங்கித் தருவதாகக்கூறி என்று சாந்தப்படுத்தி உள்ளார். இருந்தும் அன்று இரவு 8:30 மணி அளவில் விக்னேஷ் தன் அறையில் அம்மாவின் சேலையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இதனையறிந்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று, பின் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

ஏழை நடுத்தர குடும்ப பெற்றோர்கள் இப்போதுள்ள சூழ்நிலையில் விலை உயர்ந்த செல்போன்களையும் தொலைக்காட்சிகளையும் வாங்கி கொடுக்க முடியுமா அல்லது அரசாங்கமாவது மக்களுக்கு அந்த வசதிகளை வழங்கியுள்ளதா எதையுமே செய்யாமல் மாணவர்களை ஏற்றத்தாழ்வுடன் ஆன்லைன் கல்விக்கு தள்ளுவது சரியா என்பதை அரசு பரிசீலக்க வேண்டும். ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை.

 

மேலும் அரசு திமுக ஆட்சியின்போது விலையில்லாமல் வழங்குவதற்கு வாங்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்காமல் இன்னும் முடக்கி வைத்துள்ளது. அப்படி வழங்கப்படாமல் வைத்துள்ள இந்த தொலைக்காட்சி பெட்டிகளை தொலைக்காட்சி இல்லாத ஏழை, எளிய படிக்கும் மாணவ மாணவிகள் உள்ள குடும்பத்தினருக்கு வழங்க முன்வர வேண்டும். அதன் மூலம் அவர்கள் அரசு நடத்தும் கல்வியை சுலபமாக படிக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

Next Story

தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்கத் தடை

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Ban on sale of cotton candy across Tamil Nadu

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்திருந்தனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்கத் தடை விதிக்கப்பட்டது. அரசிடம் இருந்து முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவிச்சந்திரன் பிறப்பித்திருந்தார்.

அதே சமயம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் சார்பில் சென்னை மாவட்ட அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினர் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஞ்சுமிட்டாய் தயாரிக்கும் இடங்களில் சோதனை நடத்தி தரமில்லாத மற்றும் ரசாயனம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்திருந்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பிங்க், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிட வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ‘ரோடமைன் பி’ உள்ளிட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்திருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பேச்சுவார்த்தையின் நிலவரம் என்ன? - அமைச்சர் சிவசங்கர் பேட்டி

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
'The decision will be taken after discussion tomorrow'- Minister Sivashankar interview

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ''பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்க இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் அவர்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். 15வது ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், பணிபுரிகின்ற பணியாளர்களுடைய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுடைய அகவிலைப் படியை உயர்த்தி தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதில் நிதி கூடுதலாக செலவாகின்ற சில விஷயங்களை நிதித் துறையோடு கலந்தாலோசித்து, இதுகுறித்து விவாதித்து முடிவு எடுத்த பிறகு தான் அறிவிக்கப்படும் என்ற காரணத்தினால், நாளை ஒருநாள் நேரம் கேட்டிருக்கிறோம். நாளை மறுநாள் மறுபடியும் பேசிய பிறகு விவாதிக்கலாம் என்று சொல்லி இருக்கிறோம். எனவே அவர்களுடைய போராட்ட அறிவிப்பை கைவிடக் கோரி நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. நாளை மறுநாள் பேசி முடிவு எட்டப்படும்'' என்றார்.