Skip to main content

தென்னை இலையா? தென்னை ஓலையா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 17

Published on 16/08/2018 | Edited on 19/09/2018
soller uzhavu

 

 

“நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு இதுவரை அறிந்து வைத்திருக்கின்ற சொற்களே போதும், புதிது புதிதாய்ச் சொற்களை அறிந்துகொள்வதற்கு நாமென்ன புலவரா…? அவற்றால் என்ன பயன் இருக்கப் போகிறது?” என்று பலர்க்கும் தோன்றலாம். நம்முடைய அன்றாடப் பாடுகளுக்கு நாம் பேச்சில் பயன்படுத்துகின்ற சொற்களே போதுமென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இன்றைய நகர்ப்புறத்து அடுக்ககம்வாழ் குழந்தைகட்கு அரிசி மண்ணில் விளைகிறது என்னுமளவுக்குக்கூடத் தெரிந்திருக்கவில்லை என்பது அதிர்விக்கும் உண்மை. அரிசியும் பருப்பும் பொட்டணப் பொருள்கள் என்றே நினைக்கின்றன. இல்லாவிட்டால் அரிசி எந்தச் செடியில் விளைகிறது என்று கேட்கும் நிலையில் இருக்கின்றன.

 

அன்றாடச்சொற்கள் போதும் என்னுமளவில் வாழ்ந்த பெற்றோர் தத்தம் குழந்தைகட்குச் சொல்லறிவைப் புகட்டவேயில்லை என்பதுதான் காரணம். இந்தப் போக்கின் வீழ்ச்சியும் விளைவும் நம் குழந்தைகளிடம் வெளிப்படுகின்றன. உரிய சொற்களைத் தெரிந்துகொள்ளாமல்  அவர்கள் வளர்கின்றார்கள். குழந்தைகளின் இயல்பு பெரியவர்களை அப்படியே அடியொற்றுவதுதான். பெரியவர்கள் கூறும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக்கொள்வதுதான். அவர்களுக்குக் கிடைக்காத சொற்களை, அவர்களிடம் சொல்லப்படாத சொற்களை அவர்கள் எப்படிப் பெறுவார்கள் ?

 

நகரத்தில் தென்னை மரங்களை வளர்ப்போர் வீடுகளில் வளரும் குழந்தைகள் “தென்னை இலை” என்று சொல்கின்றன. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது ? தென்னைக்கு இலை இல்லை. ஓலைதான் உண்டு. தென்னை ஓலை என்று சொல்ல வேண்டும். தென்னைக்கும் பனைக்கும் இருப்பவை ஓலைகள். ஓலைக்கும் இலைக்கும் இடையே இருக்கும் வேறுபாடு ஓரெழுத்து மட்டும்தான் என்றா நினைக்கிறீர்கள் ? ஓராயிரம் வேறுபாடுகள் இருக்கின்றன. தென்னை ஓலையில் கிளி அமரும். இலையில் அமருமா ? இலைக்கும் ஓலைக்கும் நடுவில் மாறுபடும் இயல்புகள் இவை. அதனால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். அதற்குரிய பெயரைக்கொண்டு அழைக்க வேண்டும். மாற்றி அழைத்தால் அறியாமை வெளிப்படும்.

 

மாமரத்திலும் வாழை மரத்திலும் ஆல் அரசிலும் இருப்பவைதாம் இலைகள். தென்னையிலும் பனையிலும் இருப்பவை ஓலைகள். நெல், கேழ்வரகு போன்ற புல்வகைகளில் தண்டினை ஒட்டி வளர்பவை தாள்கள். கரும்புக்கும் சோளத்திற்கும் அவை தோகைகள். கற்றாழைக்கும் தாழைக்கும் மடல்கள். ஆமணக்கு, ஒடுவன் போன்ற செடிகளில் செழித்து வளர்பவை தழைகள். மாவிலை, வேப்பிலையை மாந்தழை, வேப்பந்தழை என்று பேச்சுத் தமிழில் மாற்றிக் கூறுவோரும் உள்ளனர். இலைக்கும் தழைக்கும் பெரிதாய் வேறுபாடில்லை என்று கொள்ளலாமே தவிர, இலைக்கும் ஓலைக்கும் தாளுக்கும் தோகைக்கும் இடையே தோற்றத்திலிருந்து இயல்புகள் வரை பலப்பல வேறுபாடுகள் இருக்கின்றன.

 

ஒரு தென்னை மரத்தின் முன்னால் நின்றபடி அதன் உறுப்புகளைக் கூறச்சொன்னால் கைக்கொள்ளாத அளவுக்குச் சொற்கள் வந்து விழ வேண்டும். தென்னைக்கு ஓலை. ஓலையின் உறுப்பாவது ஈர்க்கு. அவ்வீர்க்குகளைச் செதுக்கிச் சேர்த்தால் விளக்குமாறு கிடைக்கிறது. தென்னை பனை கமுகு ஆகியவற்றின் பூமூடிய மடல் பாளை. தென்னையின் பிஞ்சு குரும்பை, குரும்பை முற்றினால் இளநீர், இளநீர் முற்றினால் தேங்காய். காய்த் தொகுதி குலை, காய்த்தொகுதியை மூடிய பகுதி மட்டை. சிலர் தென்னை ஓலையின் முழுப்பகுதியையும் மட்டை என்பர். தென்னைக் குலையிடைப் பகுப்புறுப்பு பன்னாடை. தென்னம்பாளையைச் செதுக்கி வடிக்கும் பொருள் கள்ளு. எத்தனை சொற்கள்… எத்தனை சொற்கள்…! அடுக்ககத்தில் பிறந்து வளரும் நகரக் குழந்தைகளுக்கு இச்சொற்களை எப்போது கூறி உணர்த்தினீர்கள் ?

 

தென்னையின் காய்த்தொகுதி குலை என்று பார்த்தோம். தெங்கு, பழை, வாழை, கமுகு, காந்தள், ஈந்து ஆகியவற்றின் காய்த்தொகுதி குலை. இங்கே தெங்கு எனப்பட்டது தென்னைதான். ஈந்து என்பது ஈச்சை மரத்தைக் குறிக்கும். நெல்லும் தொகுப்பாக விளைகிறது அதை என்னென்று சொல்வது ? கதிர் என்று சொல்ல வேண்டும். நெல்லும் சோளமும் கதிர்களாய் விளைவன. புளியங்காய்களும் தொகையாக விளைகின்றன, அவற்றை என்ன என்று சொல்ல வேண்டும் ? கொத்து. மாவும் புளியும் கொத்தாய் விளைவன. இவற்றை ஒன்றுக்கொன்று மாற்றிக்கூறக் கூடாது.

 

ஒவ்வொரு விளைபொருளின் உள்ளே இருப்பதற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது. நெல்லுக்குள் இருப்பது அரிசி. அவரை துவரைக்குள் இருப்பது பருப்பு. வாழைக்குள் இருப்பது தசை. முருங்கைக்குள் இருப்பது சோறு.

 

இப்பொழுது விளங்குகிறதா ? அன்றாடப்பாட்டில் ஆயிரம் சொற்கள் வகை வகையாய் இருக்கின்றன. நாம் எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாகக் கூறிக்கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரிந்தவற்றில் பகுதியளவே நம் பிள்ளைகளும் தெரிந்து வைத்திருக்கின்றன. நிலைமை இப்படியே சென்றால் இத்தகைய எளிமையான பழகுதமிழ்ச் சொற்கள்கூட மறக்கப்பட்டுவிடும். அறியாத சொல் அருஞ்சொல்லாகிவிடும். அரிதாகும் ஒவ்வொன்றும் நம்மிடமிருந்து மெல்ல மெல்ல அகன்றுவிடும். அதற்கு இடம் தரலாமா ? நம் சொற்களை இழக்கலாமா ? நம் பிள்ளைகள் சொல்லாட்சியின்றித் தவிப்பது தகுமா ? சொல்லறிவு பெறல் புலவர்க்கே உரித்தான தொழிலா ? எண்ணிப் பாருங்கள்.

 

முந்தைய பகுதி:

 

தண்ணீரோடு தொடர்புடைய சொல். ‘மி’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும். அது என்ன??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 16

 

அடுத்த பகுதி:

“புலிப்பறழ்” என்ற சொல்லுக்கு பொருள் தெரியுமா??? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 18


 

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார். 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.