Skip to main content

மரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள்! - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021
uyiradal release

 

கவிஞர் சாக்லா எழுதிய உயிராடல் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 15 ஆம் நாளன்று வத்தலக்குண்டு அஸ்மா மஹாலில் நடைபெற்றது. ஓவியா பதிப்பகத்தின் மூலம் வெளியான கவிதை நூலை திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி வெளியிட, கவிஞர் சாக்லாவின் தாயார் நூலை பெற்றுக்கொண்டார். கவிஞர் வதிலைபிரபா வரவேற்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து பேராசிரியர் ஹாஜா கனி, வழக்கறிஞர் அப்ரார் அகமது, முனைவர் சக்தி ஜோதி, எம்.யாக்கூப், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜான்சி ராணி ஆகியோர் வாழ்த்துரைகளையும், சிறப்புரைகளையும் ஆற்றினார்.

 

நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியாக, வரலாற்று ஆய்வாளர் தொ. பரமசிவம், கவிஞர் இளவேனில், தோழர் கருப்பு கருணா, பேராசிரியர் ஹாஜா கனி அவர்களின் தந்தையார் எஸ்.என். ஜெய்னுல் ஆபிதீன், மருந்தாளர் வத்தலக்குண்டு முகமது இல்யாஸ் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

 

uyiradal book cover

 

கவிஞர் யுகபாரதி பேசுகையில், "சாக்லாவின் கவிதைகள் வாழ்க்கையின் புரிதலை தெளிவாக மரணத்தின் புள்ளியிலிருந்து விளங்க வைக்கிறது. ஒவ்வொரு கவிதைக்குப்பின்னும் இருக்கும் ஆழமான அர்த்தத்தை அனைவரும் விளங்கிக் கொள்ளவேண்டும்" என்றார். தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஹாஜா கனி, "சாக்லாவின் உயிராடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தும் மரணத்தின் மறுவிசாரணையாகவே இருக்கிறது. கவிதைகள் அனைத்தும் அவரினுள் ஒளிந்திருக்கும் ஆன்மநேயத்தை வெளிப்படுத்துகின்றன. இது உயிராடல் என்பதைவிட உயிரோடல் என்பதே உண்மை" என்றார்.

 

"மரணத்தின் வழியில் ஒரு பூ மலர்வதை காணச்சொல்லி வாசகர்களை வேறொரு பாதையில் பயணிக்க வைக்கிறார் சாக்லா" என்று வழக்கறிஞர் அப்ரார் அகமதின் பேச்சு அமைந்தது. ஒவ்வொரு கவிதையின் கருப்பொருள் குறித்தும் மிகச்சிறந்த முறையில் கவிஞர் சக்திஜோதி ஆய்வுரையாற்றினார். யாக்கூப் மற்றும் ஜான்சி ராணி வாழ்த்துரைகளை வழங்கினர். இறுதியாக கவிஞர் சாக்லா ஏற்புரையாற்றினார். நிகழ்வை கார்த்திகா கண்ணன் முன்னின்று தொகுத்து வழங்கினார். துளிர் இலக்கிய அமைப்பின் அமைப்பாளர் யூசுப் அன்சாரி, பட்டிமன்ற பேச்சாளர் சுப. மாரிமுத்து, எழுத்தாளர் ஆல்பட் மேலும், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

உயிராடல் கவிதை நூல் தற்போது விற்பனைக்காக உள்ளது. வாசகர்கள் உயிராடலுடன் உறவாடுங்கள். தொடர்பு எண் : 96298 18810

 

 

Next Story

"கொடுமையிலும் கொடுமை" - கொதித்தெழுந்த திரைப் பிரபலங்கள்

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

seenuramasamy, karthick subbaraj, yuga bharathi about nanguneri issue

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதி முனியாண்டி மற்றும் அம்பிகாபதி. இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை ஒரு வார காலம் பள்ளிக்கு போகாமலே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அந்த தொந்தரவு செய்த மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2  மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்களைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில், "கொடூரமான வெட்கக்கேடான பரிதாபகரமான சாதி வெறியர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இதனிடையே சீனு ராமசாமி, "நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை உடன்படிக்கும்  பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வெறிச் செயல் கொடுமையிலும் கொடுமை. காயம்பட்ட மாணவர்களுக்கு நீதிதான் சமூகநீதி. மாணவச் செல்வங்கள் உடல்நலம் தேறி விரைந்து இல்லம் வரவேண்டுகிறேன்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் பாடலாசிரியர் யுகபாரதி, "சாதீய சமூகத்தின் கொஞ்சமும் மாறாத 'படி'நிலைகள், கோபத்தையும் கண்ணீரையும் சேர்த்தே கேட்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிரந்தர தீர்வும் இந்த மண்ணில் எப்போதுதான் கிடைக்குமோ?" எனத் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

Next Story

யுகபாரதி வரிகளில் கவனம் ஈர்க்கும் 'ஐஸ்வர்யா முருகன்' பட பாடல்

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

iswarya murugan movie third song released

 

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கியதன் மூலம் திரையுலகை திரும்பிப் பார்க்கவைத்த இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம், தற்போது ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தை இயக்கிவருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கருப்பன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண் பன்னீர்செல்வம், வித்யா, ஹரிஷ் லல்வானி, ஸ்ரீ சாய் சங்கீத் உள்ளிட்ட பல புதுமுக நடிகர்களை வைத்து ‘ஐஸ்வர்யா முருகன்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை மாஸ்டர் பீஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே. வினோத் ஆகியோர் தயாரிக்க, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். காதல் திருமணத்திற்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..’ என்ற படத்தின் மூன்றாவது பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. யுகபாரதி வரிகளில், கிராமிய பாடகர் முத்துசிற்பி குரலில் வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது.