Skip to main content

தடைகளை வெட்டி வெட்டி முன்னேறிய காலம்... - எழுத்தாளர் பாலகுமாரன் கட்டுரை

Published on 16/05/2018 | Edited on 16/05/2018

எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று காலமானார். அவரின் இறுதிச் சடங்கு இன்று நடந்தது. 'ஓம்' இதழுக்காக பாலகுமாரன் எழுதிய 'கடவுளைத் தேடி' தொடரின் ஒரு பகுதி...    

 

writer balakumaran


வேறு வேலை, வேறு இடம், தனி ரூம். பித்துக்குளி நண்பர்கள் இருந்தார்கள். காசு வைத்துவிட்டு பின்பக்கம் போய் திரும்பினால் காணாமல் போய்விடும். பூட்டு போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். ஐம்பது வயது ஆள், பூட்டப் படாத என் பெட்டியைத் திறந்து ஏழு ரூபாய் எடுத்ததை கண்ணால் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு சொந்த வீடு இருந்தது. சொத்தும் இருந்தது. ஆனாலும் அடுத்தவர் காசைத் திருடும் புத்தியும் இருந்தது. 'அவன் காசுதானே திருடினான். நீ திருடியது என்ன?' என்று கேள்வி கேட்டுக்கொண்டேன். உடம்பு நடுங்கியது.

நாடி சுத்தி, தியானம் என்ற விஷயங்கள் கரையேற்றும் என்று நம்பி அதில் ஈடுபட்டேன். நாடி சுத்தி செய்ய முடிந்தது. காமமும் இருந்தது. காமம் அமைதியாகவும் நின்றது. ஆரவாரமும் செய்தது. மிகப்பெரிய போராட்டமான காலம் அது. என்னென்னவோ சொல்லித் தரப்பட்டது. "ஈரக்கோமணம் கட்டிக்கோ' என்று சொன்னார்கள். "குளிச்சிட்டு படு நல்லாயிருக்கும்' என்றார்கள். "அடிக்கடி மொட்டை அடிச்சுக்கோ. நல்லா தலைக்குக் குளி. மூளை சூடு குறைஞ்சா உடம்பு சூடு குறையும். மொட்டை அடிச்சுண்டா அந்த நிலையே அந்த முகமே உன்னை பெண்கள் பக்கம் போகவைக்காது. க்ராப்பும், தடிமனான உடம்பும், கொழுத்த கன்னமும்தானே ஆடவைக்கிறது. சோற்றைக் குறை. கேன்டீன்ல எடுத்தவுடனே மோர் சாதத்திற்கு போய்டு. எதற்கு பருப்புக் குழம்பு. அத்தனையும் சத்து. சத்துதான் எதிரி. உயிர்வாழ சாப்பிடு போதும்.'

 

 


டிராக்டர் கம்பெனி கேன்டீனில் வெறும் மோர் சாதமும், தொட்டுக்கொள்ள காயுமாய் உணவை முடித்தவன் நான் ஒருவனே. இரவு வெறும் வாழைப்பழம் மட்டுமே உணவு என்று வைத்திருந்தேன். ஆனாலும் இவையெல்லாம் சாதாரண உணவுகளைவிட மிகப்பெரிய சத்துக்கள் கொண்டவை என்பது பின்னால் தெரியவந்தது. காலையில் பொங்கல், மத்தியானம் தயிர்சாதம், இரவு வாழைப்பழம். ஈரக்கோமணம். எருமை மாடு மாதிரி உடம்பு இருந்தது. தடைகளை வெட்டி வெட்டி முன்னேறிய காலம் இது. "சண்டை போடாமல், காமம்- அது என்ன? விசாரித்து அறி' என்பது என்னுள் விதைக்கப்பட்டது.

"செயலில் ஈடுபடும்போதே அதைப் பற்றி விசாரி. உன்னுள் என்ன இருக்கிறது. அது பிஸ்கெட்டா? அரைமணி நேரம் கிடைத்தால் சாப்பிடலாம். அரை மணி ஆகிவிட்டதா. இன்னொரு அரைமணி தள்ளிப்போடு. சர்க்கரைப் பாகில் தோய்த்த பாதுஷாவா. நாளைக்கு சாப்பிடு. தள்ளிப்போடு. ஒத்தி வை. காமத்தை, துக்கத்தை, கோபத்தை, பசியை, எல்லாவற்றையும் விலக்கி நிறுத்து. நிதானமாக அனுபவி. கோபத்தை நிதானமாக வெளிப்படுத்து. ருசியை நிதானமாக அனுபவி. துக்கத்தை தள்ளி வை.' இருபத்தியோரு வயது. ஐநூற்று அறுபது ரூபாய் சம்பளம். பத்து கிலோமீட்டர் சைக்கிள் பயணம். அவ்வப்போது கடற்கரை அலையில் இடையறாத மந்திரஜபம், நாடி சுத்தி, பிராணயாமம், தியானம், மகரிஷி மகேஷ் யோகி சங்கத்தில் கற்றுக்கொண்டது என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளுக் குள் நிரம்பிக்கிடந்தன. ""பி.காம் பஸ்ட் க்ளாஸ் முடிச்சுட்டேன். எம்.காம் சேந்திருக்கேன்.'' ""எம்.பி.பி.எஸ் முடிச்சுட்
டேன். எம்.எஸ். பண்றேன்.''

""பி.இ முடிச்சுட்டேன். பிலாயில ஒர்க் பண்றேன்.  ஹிந்தியில கவிதை கூட எழுதறேன். ஹிந்தி ரொம்ப ஈஸியா. எதுக்கு கத்துக்க மாட்டேன்றீங்க? அவன் பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர். இண்டியன் ஏர்லைன்ஸ்ல ட்ராபிக் மேனேஜர்.''

"அப்படின்னா?''

"பெட்ரோல் எடை இவ்வளவு, அப்போது பயணிகள் எடை எத்தனை, அப்போது பயணிகள் எடுத்துப் போகின்ற உடமைகள் எத்தனை, மீதி ஏற்றப்படுகின்ற பார்சல்கள் எத்தனை என்று கணக்கிட்டு விமானத்தில் ஏற்றவேண்டும். இதுவரை மற்றவைகளை தவிர்க்கமுடியாது. ஏற்றுகின்ற பார்சல்களை எடை போட்டு கூடுதலாகவோ குறைவாகவோ சேர்க்கவேண்டும். நான் சொன்னால்தான் விமானம் புறப்படும். என் கையெழுத்து இருந்தால்தான் பைலட் விமானத்தை சுழலவைப்பார்.''

""என்ன சம்பளம்?''

""இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய். மாதத்திற்கு இரண்டு முறை விமானப் பயணம் இலவசம். அதைத் தவிர ஆன் டூட்டியாக சிலசமயம் இங்கும் அங்கும் போகவேண்டியிருக்கிறது. பார்ப்பதற்கு பைலட் உடைபோல இருக்கும். ஆனால் நான் பைலட் அல்ல. ட்ராபிக் மேனேஜர்.''

பி.ஏ. படித்தவன் ஆகிருதியாய், அழகாய் எதிரே நின்றபோது இன்னும் நான் ஜெயிக்கவில்லையோ என்ற ஏக்கம் வந்தது. ஆனால் அவனுக்கும் தமிழ்க்கவிதையில் ஈடுபாடு இருந்தது. 

"பாலா, உன் கவிதை சூப்பர்டா."

"எந்தக் கவிதை?"

"கவிழ்ந்த இருட்டில் மறைந்து கிடந்த உயரத் தென்னை நெற்றொன்று, 
வீசிய காற்றில் பிடிப்பைத் தளர்த்தி மண்ணில் விழுந்தது சொத் தென்று, 
இருளில் கையை உயர்த்தித் தடவி நெற்றைத் தேடிய ஐயங்கார், 
திரும்பக் காயுடன் என்னை குனிந்து கேட்டார், தூங்கலையா? 
பதிலாய் மெல்லிய சிரிப்பைக் கொடுப்பினும் மனசோ சொல்லும் வெகு உரக்க 
நெற்றுத் தென்னை கழன்றதற்கே தூக்கம் போச்சே உங்களுக்கு 
நெஞ்சே கழன்று வீழ்ந்து கிடக்க தூக்கம் எங்கே சொல்லுங்கோ' 

சாவடிச்சடா படவா. லவ் பண்றயா?"

"இல்லடா. லவ் பண்றமாதிரி நினைச்சுக்கறேன்.''

"வேணாம். லவ் பண்ணாத. கவுத்துர்றாளுங்க. பேசாத அப்பா- அம்மா சொல்ற பொண்ண கல்யாணம் செய்துக்கோ. எனக்கு பாத்துண்டு இருக்கா. நான் மூணு பேர செலக்ட் பண்ணி வைச்சிருக்கேன். எந்த இடத்தில வசதியா இருக்கோ, எந்த இடத்தில சௌகரியமா நம்மள நடத்துவாளோ அந்த இடத்தில பொண்ணு பாத்துக் கொடுன்னு சொல்லியிருக்கேன்."

இரண்டாயிரத்து அறுநூறு சம்பளக்காரன் சொல்லலாம். நான் சொல்ல முடியுமா? உடன் சகோதரியே பிறக்காது, இன்னும் இரண்டு தம்பிகள் இருப்பவன் சொல்லலாம். நான் சொல்ல இயலுமா? டிராக்டர் கம்பெனியிலும் வேலைப்பளு அதிகம். பயண நேரமும் அதிகம். பஸ்ஸில் ஏறி பயணப்பட்டால் சிலசமயம் ஒன்றரை மணி நேரம்கூட ஆகும். சைக்கிளில் முக்கால் மணி நேரத்தில் போய்விடலாம். ஆனால் முதுகு வலிக்கும். அயர்ச்சியாக இருக்கும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவு என்பது தவிர, கொஞ்சம் கூடுதலான சம்பளம் என்பது தவிர, சிம்சன் கம்பெனியின் குமாஸ்தா என்கிற 
அலட்டல் தவிர வேறொன்றும் அங்கு சுவையாக இல்லை. இதற்கு அந்த கம்பெனி காரணம் இல்லை. என்னுடைய புத்தி. உட்கார்ந்து ஒரு இடத்தில் வேலை செய்கின்ற புத்தியைக் கொண்டிருக்கவில்லை. நிழலாய் ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து, காலையில் மோரும் பிற்பகல் ஜுசும் இரண்டு வேளை டீயும் குடித்து, சொன்னதைச் செய்கின்ற வேலை. எந்த புத்திக்கூர்மையும் தேவைப்படவில்லை. எழுந்திரு, உட்கார், இதைச் செய், அதைச் செய், இங்கு வா, அங்கு போ என்ற கட்டளைகளை நான் நிறைவேற்றிக்கொண்டிருந்தேன்.

 

 

இது ஒரு மக்குத்தனமான வாழ்க்கை. புத்தி அந்த அலுவலகத்தில் ஈடுபடவேயில்லை.  அலுவலகத்தில் ஈடுபடாது எழுதியோ, பாடியோ, ஆடியோ சம்பாதிக்கின்ற ஒரு விஷயத்தை என் வீடு ஆதரிக்கவில்லை. "மூன்றுவேளை மோர் சாதத்திற்கு கவலையில்லாத இருக்கணும். வேலை செய்தா டிராக்டர் கம்பெனி வேலை செய்யணும். சொல்லிப்பாரு. அதை விட்டுட்டு நான் கதை எழுதிண்டு இருக்கேன். கவிதை எழுதிண்டு இருக்கேன்னு சொல்றது மரியாதையாவா இருக்கு? எப்ப பாட்டு கத்துண்டு, எப்ப நீ கச்சேரி பண்ணி...'  

எனக்கு மைக் பிடித்து சினிமா பாட்டு பாடும் ஆசை இருந்தது. ஆனால் அதில் காசு வராது. கொஞ்ச ரூபாய் காசுக்காக வாழ்க்கையை அலுவலகத்தில் அடமானம் வைத்த பல பேர்களில் நானும் ஒருவன். ஆனால் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஒருமனதாக டிராக்டர் கம்பெனியில் வேலைசெய்ய முடியவில்லை. நன்றாக வேலை செய்கின்ற திறன் மட்டும் ஒரு கம்பெனியில் மரியாதையைக் கொடுத்து விடாது. இணக்கமாக, அனுசரணையாக, நேரம் தெரிந்து பேசவேண்டும். இதை சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் ஜால்ரா அடிக்க வேண்டும்.

""என்ன சார் இருமறேள். நல்லாயில்லயே.''

சட்டென்று மேனேஜர் நெற்றியில் கைவைத்து, ""சுடறது சார். ஜுரம் இருக்கு.''

""தெரியலையேடா.''
""எனக்குத் தெரியறது. உள்ளுக்குள்ள இருக்கு. காத்தால என்ன சாப்டேள். ஒரு அனாசின் 
போட்டுக்கோங்கோ.''

இந்த மாதிரி விஷயங்களெல்லாம் கைப்பையில் தயாராக இருக்க வேண்டும்.

இப்படி பலநூறு வித்தைகள் இருக்கின்றன. இது தெரியாதுபோனால் வாழ்க்கையில் எங்கிருந்தாலும் ஜெயிக்கமுடியாது. இது சரியா, தவறா? அதுவல்ல பிரச்சினை. இதை உன்னால் முழுமனதாகச் செய்யமுடியுமா முடியாதா. அதுதான் பிரச்சினை. முழுமனதாகச் செய்தால் உன் மனோநிலை எப்படி இருக்கும். செய்யாது போனால் எப்படி இருக்கும்.

 

 


""என்னடா இது. அவன் வறான் போறான். குட் மார்னிங்கறான். ஒரு ஓரமா நிக்கிறான். ஜோக் அடிச்சாலும் சிரிக்க மாட்டேங்கறான்.''

""அவன் பெரிய இன்டலெக்சுவல் சார். கதை எழுதறானோன்னோ. ஆனந்தவிகடனிலும், குமுதத்திலும் வருதோன்னோ. அதனால ஒரு கித்தாப்பாதான் இருக்கான்.''

""கதை எழுதறானா? இங்க ஆஃபிஸில் வேலை செய்துண்டு என்ன கதை எழுதறது.''

""சொல்லிப் பாத்துட்டேன். இங்க ஆஃபிஸ்ல வேலை செய்யறதுல அவ்வளவு இஷ்டமில்ல. உங்களுக்கு அவனைப் பிடிக்கலைன்னா வேற டிபார்ட்மென்டுக்கு மாத்திடுங்கோ. நம்ம டிபார்மென்டுல வேலை செய்ய காத்துண்டு இருக்கா.''

குழி பறிப்பவர்கள் என்று இவர்களுக்குப் பெயர். நேரிடையாக கோபப்பட்டு எகிறுகிறவர்களைவிட மிக மோசமானவர்கள்.

""உன்னபத்தி அவ்வளவு நல்ல அபிப்ராயம் அவருக்கு இல்லப்பா. வேற யாரும் உனக்கு சொல்லமாட்டா. நான் சொல்றேன். நான் எத்தனையோ தடவை சப்போர்ட் பண்ணிப் பாத்துட்டேன். அவர் முரட்டுப்பிடிவாதமா இருக்கார்.'' நம்மிடம் வேறுவிதமாகப் பேசுவார்கள்.

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். மதி வேண்டும். நின் கருணை நிதி வேண்டும். நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்.'
எது நோய்? அடுத்தவரை வஞ்சிப்பதும், இடையறாது அதற்கு யோசிப்பதும்தான் மிகப்பெரிய நோய்.

  kandakottam



இவர்களிடத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நான் சென்னையில் கந்தசாமி கோவில் என்று புகழப்படும் கந்தக்கோட்டத்திற்கு செவ்வாய்க்கிழமையில் போனேன். எதிரிகளை நான் பொறுத்துக்கொள்வேன். துரோகிகளைத்தான் என்னால் அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஆபாசத்தைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முருகர் உபாசனையில் ஒரு உக்ரம் உண்டு. "தனத்தன தனத்தன, திமித்தமி திமித்தமி, டகுக் குடுக்டுடுடொன் தனபேரி' என்று மந்திர உச்சாடனங்கள் கலந்த பாடல்கள் உண்டு. இதற்குப் பலன் இருந்தது. முருகர் காரணமா? என் மன ஒருமையா? அல்லது வேறு ஏதேனுமா? துரோகிகள் அடிபட்டார்கள். அவர்கள் துரோகத்திலேயே அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

கந்தக்கோட்டம் கோவிலின் உள்ளே நான்கு பக்கமும் கட்டடங்கள் இருக்க, அதன் குளத்துப் படியில் அமர்ந்து வெறுமே தண்ணீரை வேடிக்கை பார்க்கும்போது, அலுவலகத்தில் செய்யவேண்டியதும் செய்யக் கூடாததும் எனக்குப் புரிந்தன. பதட்டமாக ஈடுபடாத கடவுள் வழிபாடும் என்னை அமைதியாக்கிற்று. அந்த அமைதி அலுவலகத்தில் அதிகம் உதவிபுரிந்தது.

விதம்விதமாக சம்பாதிக்கலாம். அதன் விளைவென்ன? முதலில் ஏற்படுவது பயம். யார் எப்போது காட்டிக்கொடுக்கப் போகிறார்கள்- எவரால் என்னவிதமான தொந்தரவு வரும் என்கிற பயம்.எனவே, எந்தவித குறுக்குவழியும் இல்லாத நேரான ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் வாழ்வில் பயமில்லாது இருக்கலாம். வாழ்வில் பயமில்லாதபோதுதான் எழுத்துப் பணி சிறப்பாக இருக்கும். நீ சம்பாதிக்கிற ஆளா? அல்லது எழுத்தாளனா? எப்படியாவது ஏதாவது சம்பாதிக்க ஆசைப்படுகிறாயா? அல்லது இருப்பது போதும் என்கிற மனப்பான்மையா? நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். நான் எழுத்தாளன் என்று தெள்ளத் தெளிவாக முடிவுசெய்துகொண்டேன். மூன்றுவேளை மோர் சாதத்திற்கு சம்பாதி என்று சொன்னார்களே. இந்த டிராக்டர் கம்பெனி மூன்று வேளை மோர் சாதத்திற்கு. என் வளர்ச்சிக்கு, என் அடையாளத்திற்கு, என் சிறப்பிற்கு நான் எழுத்தாளனாக மாறுவதே மிக முக்கியம் என்ற தெளிவு வந்துவிட்டது.

லட்சியத்தில் அடையும் வெற்றிதான் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலாக இருக்கமுடியும். நான் எழுதுவதை விடவேயில்லை. எழுதுவதற்கு இடைஞ்சலாக இருக்கும் எதையும் அனுமதிக்கவே இல்லை. கடும் உழைப்பு என்பதற்கு நான் உதாரணமாகத் திகழ்ந்தேன். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரமே தூங்கினேன். மற்ற நேரங்களில் படித்தேன். எழுதினேன். இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றேன். எப்பொழுதெல்லாம் தனிமை கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நான் ஒட்டுமொத்தமாக வாழ்வு என்பது பற்றியும், மரணத்திற்கு அப்பால் உள்ள வாழ்வு பற்றியும், யார் இதை நிகழ்த்துகிறார்கள் என்கிற கேள்வியோடும் அலைந்தேன்...




 

Next Story

சாம்பிராணினா சும்மா இல்ல! 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை!

Published on 28/09/2020 | Edited on 06/11/2020
srimathi sambrani jk muthu

ஆரம்பம்...

 

"ஒரு நாள் எங்க வாத்தியார் ஒருத்தர் கூப்பிட்டுக் கேட்டார், 'தம்பி டேய்... நீ பிசினஸ் பண்றியாடா?'ன்னு. அப்போதான் தோனுச்சு, 'ஓஹோ... நாம பண்றதுக்கு பேர்தான் பிசினஸ்ஸா'ன்னு" என்று சொல்லி மனம் விட்டு சிரிக்கிறார் ஜே.கே.முத்து. பிசினஸ் என்ற வார்த்தை தெரியும் முன்பே, தான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொழில் செய்யத் தொடங்கி, இன்று தனது தயாரிப்பை  இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். வடஇந்தியாவில் இவரது ப்ராண்ட்தான் முன்னணியில் இருக்கிறது. இவரது பகுதியில் உள்ள சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களையும் தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுத்துவதன் மூலமாக அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள்.

 

srimathy stall

 

 

அப்படி என்ன தயாரிக்கிறார்கள்? சாம்பிராணி! நாம் சாதாரணமாக நினைக்கும் சாம்பிராணியின் உலக அளவிலான வர்த்தகம் மிகப்பெரியது. அதில் பெரும் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கெல்லாம் 'டஃப்' கொடுக்கிறார்கள் இரண்டு தமிழர்கள். ஜே.கே.முத்து  - சம்பத்குமார் ஆகிய இரு மதுரை நண்பர்கள்தான் தங்களது 'கமலம் க்ரூப் - டோன் டீலிங்ஸ் ப்ரைவேட் லிமிட்டட்' நிறுவனத்தின் தயாரிப்பான 'ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள்' மூலம் தமிழகம் மட்டுமல்லாமல் வடஇந்தியாவையும் மணக்கச் செய்கிறார்கள். இவர்களது தயாரிப்புகளுக்கு வடஇந்தியாவில் நல்ல வரவேற்பு. பல மாநிலங்களின் முக்கிய பிரமுகர்கள் இவர்களை அழைத்துப் பேசிப் பாராட்டி இருக்கிறார்களாம். “நாங்க எங்களோட வெப்சைட்ல நேரடியா எங்க மொபைல் நம்பரை கொடுத்திருப்பதால, எங்க கஸ்டமர்ஸ் அடிக்கடி கூப்பிட்டு பேசுவாங்க, பாராட்டுவாங்க. ஒரு முறை சீரடி சாய்பாபா கோவிலின் தலைமை அர்ச்சகரே நேரடியா எனக்கு ஃபோன் பண்ணி, உங்க தயாரிப்பு ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினார். எம்.பி., எம்.எல்.ஏ, பெரிய அதிகாரிகள் இப்படி பலர் பேசிருக்காங்க. இப்படி வந்த ஃபோன்களில் என்னால் இன்னும் நம்ப முடியாத அளவுக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி தந்த விசயம், சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி எங்க தயாரிப்புகளை ரொம்ப விரும்பிக் கேட்டு வாங்குவாங்கன்னு எங்க டீலர் சொன்னது. அவர் சொல்லும்போது, முதலில் அஞ்சலின்னா யாருன்னு தெரியாம, சரி சரின்னு பேசிட்டு இருந்தேன். அவர்தான் ‘சச்சின் மனைவிய்யா’ என்று குறிப்பிட்டு சொன்னார். எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது" என்கிறார்கள் நண்பர்கள்.

 

jkmuthu sampath old pic

ஜே.கே.முத்து  - சம்பத்குமார் (அப்போது)

 

jk muthu sampathkumar

ஜே.கே.முத்து  - சம்பத்குமார் (இப்போது)

 

இப்படி, தங்கள் தரத்தாலும் சரியான வியாபார வியூகத்தாலும் வெற்றியைப் பெற்று, பலருக்கு வேலைவாய்ப்பையும் அளித்து, தங்கள் பயணத்தின் 23 ஆண்டுகளை கடந்திருக்கிறார்கள் இவர்கள். இந்த பிசினஸ் பயணத்தை தனது பதினாறாம் வயதிலேயே, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, 1990ஆம் ஆண்டில் தொடங்கிவிட்டார் முத்து. 'டோன் மியூஸிக்கல்ஸ்' என்ற பெயரில் ஆடியோ கேசட் விற்பனை செய்திருக்கிறார். அப்போதுதான் இவரது ஆசிரியர் ஒருவர் இவரிடம் 'நீ பிசினஸ் பண்றியா தம்பி?' என்று கேட்க, 'பிசினஸ்' என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது. இவரது ஆர்வத்தாலும், அவர் நடத்தி வந்த ஆடியோ கேசட் வியாபாரத்தாலும் ஈர்க்கப்பட்ட இவரது நண்பர் சம்பத்குமார், 1992ஆம் வருடம் இவருடன் இணைகிறார். இருவரும் இணைந்து, 'டோன் ட்ரானிக்ஸ்' என்ற எலக்ட்ரானிக்ஸ் விற்பனை நிறுவனத்தை தொடங்குகின்றனர். பொருட்களை வாங்கி விற்கும் ஏஜென்சியாக பல வியாபாரங்களை செய்து 2000ஆம் ஆண்டில் ஒரு கட்டத்தில் சாம்பிராணி வியாபாரத்தில் இறங்குகின்றனர். தரமான சாம்பிராணியை நாமே தயாரித்து விற்கலாம் என்ற எண்ணம் ஏற்பட, உருவானதுதான் 'ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள்' என்ற ப்ராண்ட்.

 

"நம்ம வீட்டுக்கு ஒரு பொருளை செஞ்சா எப்படி செய்வோமோ அப்படி செஞ்சு தரணும்னுதான் இந்தத் தயாரிப்பை தொடங்கினோம். அப்படி தரமா செஞ்சா வரவேற்பு இருக்கும்னு நம்புனோம். அதே மாதிரி இருந்தது. ஆரம்பத்துல ரொம்ப கடினமா இருந்தது. தொடர் முயற்சிகள் மற்றும் மெல்ல வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொண்டது மூலமா இப்போ ஸ்ரீமதி மட்டுமல்லாமல் பாஞ்சஜன்யா, வாசம் உள்ளிட்ட பிராண்ட்களில் எங்கள் தயாரிப்புகள் வருகின்றன. வடஇந்தியாவில் பல மாநிலங்களில் எங்க சாம்பிராணி, ஊதுபத்திதான் நம்பர் 1" என்று பெருமையுடனும் பக்குவத்துடனும் தங்கள் பயணத்தை பகிர்கிறார் ஜே.கே.முத்து.

 

ஒவ்வொரு நாளும் இவர்களது நிறுவனத்தில் பணிபுரிவோர், தயாரிப்புப் பணிகளில் ஈடுபடும் முன் ஒரு உறுதிமொழியை ஏற்கின்றனர். "நம்ம வீட்டுல மனைவியோ அம்மாவோ சமைக்கும்போது சுவை முன்ன பின்ன இருக்கலாம், ஆனால் தரம் குறையாது... வீட்ல சாப்பிட்டு ஒருத்தருக்கு உடம்பு கெட்டுப்போறது பொதுவா நடக்குறதில்ல. அதுக்குக் காரணம், அவுங்க ஆத்மார்த்தமா செய்றாங்க. இந்த கான்செப்ட்டை நாங்க எங்க நிறுவனத்தில் கொண்டு வரணும்னு நினைச்சோம். அதே ஆத்மார்த்தமான உணர்வு நம் தொழிலாளர்களுக்கும் வரணும்னுதான் இந்த உறுதிமொழியை ஏற்கிறோம். இதுக்கு பெரிய எஃபக்ட் இருக்கு..." என்கிறார் முத்து. "எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துவோர் ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் செழிப்பாக வாழ வேண்டுமென்று ஆத்மார்த்தமான வேண்டுதலுடன் நான் தயாரிக்கும் என்னிடமிருந்து வெளியாகும் ஒவ்வொரு பொருளும் தரமாகவும் தூய்மையாகவும் இருக்குமென்று உறுதி கூர்கிறேன்" - இதுதான் அவர்கள் ஏற்கும் உறுதிமொழி. வாடிக்கையாளர்கள் மீது இவ்வளவு அக்கறை என்றால், தொழிலாளர்கள் மீதும் அதே அக்கறை காட்டுகிறார்கள். கரோனா காரணமாக லாக்டௌன் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒன்றரை மாதம் விடுமுறை கொடுத்து ஊதியமும் வழங்கியுள்ளனர். அது தங்களுக்கு ஆத்மதிருப்தியளித்ததாகக் கூறுகிறார் முத்து.

 

 

 
சாம்பிராணி, பழைய விஷயம்தான். ஆனால் அதில் புதுமையை புகுத்தியிருக்கிறார்கள் இவர்கள். கப் சாம்பிராணி என்ற புதிய வகை சாம்பிராணியை பல ஆய்வுகளுக்கும், முயற்சிகளுக்கும் பிறகு கண்டுபிடித்திருக்கிறார்கள். மதுரையில் நடந்த கண்காட்சிகளில் மக்களுக்கு இலவசமாக விநியோகித்திருக்கிறார்கள். ஆனாலும் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பில்லையாம். இருந்தாலும் தொடர்ந்து முயன்றதில் வடஇந்தியாவிலும் ஏற்றுமதி சந்தையிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர்கள் கண்டுபிடித்த இந்த 'கப் சாம்பிராணி' வகையை பலரும் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் காப்புரிமைக்கு விண்ணப்பித்திருந்ததால், அப்படி தயாரிப்பவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி தடுத்திருக்கிறார்கள். பின் ஒரு கட்டத்தில் 'இந்தத் தொழிலை செய்பவர்கள் பெரும்பாலும் குடிசைத் தொழிலாகத்தான் செய்கிறார்கள். அவர்கள் தொழிலை தடுத்து நாம் என்ன சாதிக்கப்போகிறோம்?' என்ற கேள்வி தோன்ற, அந்த நடவடிக்கைகளை கைவிட்டிருக்கிறார்கள்.

 

    
இவர்களின் மனிதாபிமானத்தை பெருநிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டன. இதே வகை சாம்பிராணிகளை அவர்களும் தயாரித்து விற்கிறார்கள். ஆனால், முத்து - சம்பத் இருவரும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கிச் சென்றனர். அது, தங்கள் 'பிராண்டை' வலிமைப்படுத்துவது. எத்தனை கப் சாம்பிராணிகள் இருந்தாலும் 'ஸ்ரீமதி சாம்பிராணி', ’ஸ்ரீமதி அகர்பத்தி' வேண்டும் என்று மக்கள் கேட்டு வாங்குமாறு செய்யவேண்டும் என்று அதை நோக்கி உழைத்தனர். அதை சாதிக்கவும் செய்தனர். இவர்கள் அறிமுகம் செய்த கப் சாம்பிராணியால் இன்சென்ஸ் இண்டஸ்ட்ரி என்றழைக்கப்படும் ஊதுபத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருள்களின் மொத்த சந்தை மதிப்பில் சாம்பிராணியின் பங்கு அதிகரித்திருக்கிறது. வர்த்தக உலகில் இது மிகப்பெரிய தாக்கம். அவர்கள் செயல்படுத்திய யுக்திகள் எல்லாம் உலகத்தரமான மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படித்த, பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பிசினஸ் வல்லுனர்கள் செய்வது. புதிய தொழில்முனைவோருக்குப் பாடங்கள்... அப்படி என்ன யுக்திகள்? அடுத்த பகுதியில் பார்ப்போம்... 

கட்டுரையின் தொடர்ச்சி...

இந்தியாக்காரங்களே இப்படித்தான்னு சொன்னாங்க... கோபம் வந்தது! - 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை! #2 

 

 

 

Next Story

''என் தாத்தாவின் முதல் காதல்...'' - ஜெமினி - சாவித்திரி பேரன் சொன்ன சீக்ரெட் 

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி தம்பதியரின் பேரன் அபிநய் 'ராமானுஜர்' படம் மூலம் அறிமுகமாகி பின்னர் 'சென்னை 28 - 2' படத்தில் நடித்து தற்போது த்ரிஷா, சிம்ரனுடன் இணைந்து பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்து வரும் இவர் தன் தாத்தா ஜெமினி கணேசன் குறித்து நமக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசியபோது....

 

Abhinav

 

''நான் சினிமா துறைக்கு லேட்டாக வர காரணம் என்னவென்றால், எனக்கு ஆரம்பகாலங்களில் ஸ்போர்ட்ஸ் மீது அதீத ஆர்வம் இருந்தது. மேலும் நான் ஒரு தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரர். எனக்கு விளையாட்டு, பயிற்சி என ஏனைய விஷயங்களுக்கே நேரம் சரியாக இருந்ததால் அதிலேயே மூழ்கிவிட்டேன். பாய்ஸ் படம் வந்த சமயத்தில் பலரும் என்னை நடிக்க வலியுரித்தினர். இருந்தும் அப்போது எனக்கு ஆர்வம் வரவில்லை. மேலும் என்னை போலவே என் தாத்தா ஜெமினிக்கும் முதல் காதல் ஸ்போர்ட்ஸ் தான். நாங்கள் இருவரும் சினிமாவை பற்றி பேசியது கிடையாது, அவருடைய நடிப்பு விஷயங்கள் பற்றியும் பேசியது கிடையாது. அதிகபட்சமாக ஸ்போர்ட்ஸ் விஷயங்கள்தான் பேசுவோம். மற்ற சராசரி நடிகர்கள் போல நானும் முறையாக ஆடிஷன் எல்லாம் ஆட்டன்ட் செய்துதான் சினிமா வாய்ப்புகளை பெறுகிறேன். எனக்கு வீட்டிலும் பிரத்தியேக நடிப்பு பயிற்சி என்ற ஒன்றெல்லாம் என் தாத்தா மூலம் கிடைத்தது கிடையாது. அவரும் அதை விரும்பியது இல்லை. நானும் அவரிடம் அதையெல்லாம் எதிர்பார்த்தது இல்லை'' என்றார்.