Skip to main content

மதம் மாறிய திருநாவுக்கரசருக்கு இறைவன் அளித்த விநோத பரிசு!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், சமண சமயத்திற்கு மாறிய திருநாவுக்கரசர் மீண்டும் சைவ சமயத்திற்குத் திரும்பிவந்தது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவ தன்று இவ்வுலகத் தியற்கை' என்றார்கள். கணவன் இருக்கும்போதே இன்னொருவருடன் உடலுறவு கொள்வது என்பது நாளேடுகளில் இன்றைக்கு தலைப்புச் செய்திகளாகிவிட்டன. அண்ணனை தம்பி கொல்வதும் தம்பியை அண்ணன் வெட்டிச் சாய்ப்பதும் அன்றாடச் சம்பவங்கள் ஆகிவிட்டன. இப்போதுவரும் பத்திரிகைகளைப் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது, கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கை இனி வசமாகாதா என்று யோசிக்கும் அளவிற்கு இந்த மனிதச் சமூகத்தின் நிலை உள்ளது. அன்றைக்கு நம்முடைய சமயகாலத்தில் ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். 

 

திருநாவுக்கரசரர் என்ற நாயன்மாருக்கு ஒரு தமக்கை இருந்தார். அவர் பெயர் திலகவதி. திருநாவுக்கரசர் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறிவிடுகிறார். சைவத்திற்கும் சமணத்திற்கும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில் அவர் சமணத்தில் இணைந்ததை நினைத்து அவரது சகோதரி திலகவதி கவலைப்படுகிறார். என் தம்பி சமண சமயத்தில் சேர்ந்துவிட்டான். நான் சோர்ந்துவிட்டேன். என்னுடைய தம்பியை விடுதலை பெற்றுத்தா என்று கோவிலில் பூக்களால் தினசரி அர்ச்சனை செய்து இறைவனை வேண்டுகிறாள். திலகவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுவதற்கு முன்னரே மணமுடிக்க இருந்தவன் இறந்துவிடுகிறான். எனக்கென்று பார்த்த மாப்பிள்ளையைக் காலம் கவர்ந்து சென்ற பிறகு இனி எனக்கு கல்யாணமே வேண்டாம் என திலகவதி முடிவெடுத்துவிடுகிறார். திலகவதியும் அவனும் ஒருவருக்கொருவர் சந்தித்ததோ பழகியதோ இல்லை. ஆனால், தனக்கு கணவனாக வரவேண்டியவன் கல்லறைக் குயிலாகினான் என்பதை அறிந்து தனக்கு திருமணமே வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். இப்படி குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என உதறி எறிந்துவிட்ட திலகவதி, தற்போது சகோதரனும் இல்லையா என்று அழுக ஆரம்பித்துவிடுகிறாள். அவளின் தொடர் பிரார்த்தனையின் விளைவாக, சமண சமயத்தை உதறிவிட்டு மீண்டும் சைவ சமயத்திற்கு வந்துவிடுகிறார் திருநாவுக்கரசர். அவரின் இந்தச் செயல் சமண சமயத்தை சேர்ந்தவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைய பல்லவ மன்னர்கள் அனைவரும் சமண சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் திருநாவுக்கரசருக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தனர். அந்த எல்லா நெருக்கடிகளையும் துணிச்சலுடன் அவர் எதிர்கொண்டார்.

 

திலகவதியின் பிரார்த்தனைதான் அவரை மீண்டும் சைவ சமயத்திற்கு கொண்டுவந்தது. திலகவதியின் குரலைக் கேட்ட இறைவன், உனக்கு என்ன வேண்டும் எனக் கேட்கிறார். எனக்கு என் தம்பி வேண்டும் என்று அவர் கூற, உன் தம்பி நிச்சயம் வருவான் என்று கூறிய இறைவன், திருநாவுக்கரசர் திரும்பி வரவேண்டும் என்பதற்காக அவருக்கு சூலை நோய் என்ற நோயை பரிசாகக் கொடுத்தான்.  திருநாவுக்கரசருக்கு நோய் வந்த பிறகு சமணர்கள் தங்களிடம் உள்ள அனைத்து மருந்துகளையும் கொடுத்துப் பார்த்தார்கள். சமணர்கள் படித்த எந்த வித்தையும் பலிக்கவில்லை. அவர்கள் எடுத்த எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை. எந்த மருந்தும் பலனளிக்காததால் தன்னுடைய உயிரைக் குடித்துக்கொண்டிருக்கிற இந்த நோயிலிருந்து விடுபட சைவ மதத்திற்கு மாறினார் திருநாவுக்கரசர். தம்பியே உலகம் என்று கருதிய ஒரு தமக்கை, தன்னுடைய தம்பியை காப்பாற்றுவதற்காக தவம் செய்து உருகினாள். 

 

திருநாவுக்கரசர் எப்படி அப்பர் ஆனார்? அவருடைய தேவாரத்திற்கு எப்படி மரியாதை வந்தது? சமய உலகத்தில் மிகப்பெரிய புகழ் அவருக்கு எப்படி வந்தது? கட்சி மாறுவதைப்போல சமயம் மாறிய ஒருவர் எப்படி அடியார் ஆனார்? இவை அனைத்திற்கும் பின்புலமாக இருந்தது ஒரு அக்கா. இதை  பெரியபுராணத்தில் 'தம்பியர் மீது வைத்த தயவினாலே' என்று சேக்கிழார் பதிவு செய்துள்ளார். யார் மீதாவது தயவு காட்ட வேண்டும் என்ற எண்ணம் இன்றைக்கு அரிதாகிவிட்ட சூழலில், தம்பியின் மீது தமக்கை வைத்த தயவினால் தம்பி தலைநிமிர்ந்தான் என்ற செய்தியை படிக்கிறபோது வியப்பாக உள்ளது.

 


 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.