Skip to main content

ஔடத சித்தர் மலையில் வீற்றிருக்கும் கல்யாண பசுபதீஸ்வரர்!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Lord sivan temple - Audatha siddhar Malai

இயற்கையோடு சேர்ந்து இறைவன் செய்யும் அற்புதங்கள் அருகிலிருந்தாலும் நம் கண்களுக்குப் புலனாவதில்லை. யாராவது சொன்னால்தான் தெரியவருகிறது.

எங்கு நின்றாலும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைக்காற்று நம்மை வருடி சுகானுபவத்தைத் தருகிறது. சிவபுராணத்தைப் பாடியபடி பத்து பேர் கொண்ட குழுக்களாகச் செல்லும் பக்தர்களின் அதிசயக் காட்சி! பிற சொற்களைப் பேசாமல், "ஓம் நமசிவாய' என்று தொடர்ந்து உச்சரித்தவாறே நகர்ந்து செல்லும் பக்தர்கள் கூட்டம் ஒரு பக்கத்தில்..! இவற்றையெல்லாம் காணவேண்டுமென்றால் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமலையருகே செல்லவேண்டும். இதற்கு ஔடத சித்தர் மலை என்ற பெயரும் உண்டு.

மலையும் மலைசார்ந்த இடமும் முருகப் பெருமானுக்குரிய குறிஞ்சி நிலப்பகுதியாகக் கூறப்படும் நிலையில், வயலும் வயல்சார்ந்த இடமும் சேர்ந்த மருதமும், குறிஞ்சி நில பாகமும் சேர்ந்து அமைந்து, சிவகுடும்பத்தை மனம்குளிர தரிசித்துச் செல்லும்படி வித்தியாசமான தலமாக விளங்குகிறது இது. சுமார் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுள்ள இப்பகுதி, புராதன வரலாற்றுக் குறிப்புகளின் படி அரசன் கழனி என்று அழைக்கப்படுகிறது.

அரசன் வழங்கிய நிலப்பகுதி

ஒரு நாட்டின் சிறுபகுதியாகவுள்ள மாகாணத்தை ஆட்சி செய்யும்போது, அங்குள்ள அறநிலையங்கள், கோவில்கள், மடாலயங்கள், அன்னதான சத்திரங்கள், திருக்குளங்கள், வைத்தியசாலைகள், கல்விச்சாலைகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கு அரசன் தேவையான நிதியாதாரங்களை வழங்கவேண்டும். இங்கே மூன்றாம் குலோத்துங்க மன்னன் பரம்பரையில் வந்த குறுநில மன்னன், தன் ஆளுகைக்கு உட்பட்ட கிராமப்பகுதி மக்கள் நிதியாதாரம் பெறவும், ஆலயங்களைப் பராமரிப்பதற்கும் நன்செய் நிலங்களை தானமாகக் கொடுத்து விவசாயத்தைப் பெருக்குமாறு கூறினான்.

இதற்காகப் பனை ஓலையில் அவர்களுக்கு நிலவுரிமைச் சட்டம் இயற்றிப் பட்டயமும் எழுதிக் கொடுத்தான். பழங்காலத்தில் நெல்விளையும் பூமி "கழனி' என்ற சொல்லால் பேசப்பட்டது. அரசன் தானமாக வழங்கிய நிலப்பகுதி "அரசன் கழனி' என வழங்கப்பட்டு ஊரின் பெயராக நிலைத்தது.

மலையில் அருளும் மகேஸ்வரன்

பாரத தேசத்தில் பல்லாயிரக்கணக்கில் சிவலிங்கத் திருமேனிகள் தேவதச்சன் மயனால் செய்யப்பட்டு ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கின்றன என்றும், கலியுகத்தில் லிங்கத் திருமேனிகளே செய்தல் வேண்டாம் என்றும் மகான் ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார்.

அவரது திருவாக்கில் வந்த லிங்க எண்ணிக்கைகளுள் ஒன்றே மலையுச்சியில் உள்ளதாக இங்குள்ள பக்தர்களின் கர்ணபரம்பரைச் செய்தி. பல்லாண்டு காலம் சிவாலய வழிபாடு நடைபெற்றதற்கு அடையாளமாகக் கற்றளிகளும், மக்கள் பயன்படுத்திய ஆட்டுக்கல், கற்பாண்டங்கள், திருக்குளப் பகுதியில் சிற்பங்களும் காணக் கிடைக்கின்றன. சிதிலமடைந்த மகாமண்டபம், அர்த்தமண்டபத் தூண்களும் இத்தலத்தின் பழமையை உணர்த்தும் சின்னங்களாகத் தெரிகின்றன. தொண்டை மண்டலத்து மன்னன் குலோத்துங்கனின் இரண்டாவது வம்சாவளியில் வந்தவனும், பல்லவர் காலத்திய குறுநில மன்னர்களும் ஆட்சிபுரிந்தபோது, இங்கே படைகளோடு தங்கி பாதுகாப்பு அரண்களை ஏற்படுத்திய போது, சிவாலயம் அமைத்து வழிபாடு நடத்தியதை அறியமுடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருநாளில் இங்குள்ள கிராம மக்கள் மலையிலும், அருகிலுள்ள சிவன் சந்நிதியிலும் அகண்ட தீபமேற்றி வழிபட்டுள்ளனர். மகிழ்ச்சி தரும் மகேசன் இறைவனது திருநாமம் கல்யாண பசுபதீஸ்வரர். மூன்றடி உயரத்தில் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார். "கல்யாண' என்ற சொல்லுக்கு திருமணம், மகிழ்ச்சி என்று பொருள். "சொற்றுணை வேதியன்' என்று ஞானசம்பந்தர் பாடியபடி துதித்தால், நல்ல வாழ்க்கைத் துணையைத் தருவார் என்பது நம்பிக்கை.

தேவாரத் திருப்பதிகங்களில் பாடப்பட்ட அமைப்புகள் இங்கே காணப்படுவதால், நேரில் காணும் பக்தர்களுக்கே இங்குள்ள அற்புதங்கள் புரியவரும். சிவபக்தர்களால் எழுதப்பட்ட ஐந்தரை கோடி சிவநாமம் ஆதாரபீடத்தில் வைத்து பிரதிட்டை செய்யப்பட்ட சிவலிங்கமே மலையில் காட்சி தருகிறது. அதிலிருந்து வரும் மின்காந்த அலைகள் கிரிவலப்பாதை முழுவதும் பரவுகிறது. அகத்திய முனிவரால் துதிக்கப்பட்ட சிவலிங்கம் என்பதால் ஆற்றல் மிகுந்ததாகக் கருதப்படுகிறது.

சிவன் சந்நிதியில் நந்தி தேவர் சிவபெருமானை நேரில் கண்டவாறு எப்போதும் சிவன் துதியைப் பாடிக் கொண்டிருக்கிறார். பிரதோஷ காலத்தில் பக்தகோடிகள் இங்கே கூடி திருவலம் வருவர்.

அம்பிகையின் திருப்பார்வை

பசுபதீஸ்வரர் அருகே தென்முகமாய் காட்சி தரும் பெரியநாயகி மூன்றடி உயரத்தில் அபய, வரத முத்திரையோடு அருள் பாலிக்கிறாள். பௌர்ணமியன்று தேவியின்முன் மூன்று நெய்தீபங்கள் ஏற்றி சக்தியின் துதியைப் படித்துப் பிரார்த்தனை செய்திட, கணவன் - மனைவி ஒற்றுமை, வாழ்வில் எதிர்பார்க்கும் இனிய நிகழ்வுகள் நடந்தேறும் என்பது நம்பிக்கை.

திருச்சுற்று வரும்போது அகத்தியர் காட்சியளிக்கிறார். அருகே அமிர்த புஷ்கரணி கண்ணாடித் தரைபோல் உள்ளது. கிழக்கில் வனதுர்க்காதேவியும் முகப்பில் பாலகணபதி, பாலமுருகனும் உள்ளனர். தென்முகக் கடவுளான மேதா தட்சிணாமூர்த்தி அமிர்த நீரைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். ஈசனது கோஷ்ட பாகத்தின் பின்புறம் லிங்கோத்பவ மூர்த்தியும் வடபாகத்தில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கையும் உள்ளனர். நான்கு பட்டையுடன் இருநிலை கொண்ட வேதவிமானம் சுவாமிக்கு அமைந்துள்ளது.

வளரி எடுத்தல் விழா

அமிர்த புஷ்கரணியின் கிழக்குக் கரையில் கங்கைதேவி கோவில் அமைந்திருக்கிறது. ஆடிமாத்தில் மூன்றாவது வாரம் இங்கே பரம்பரையாக வாழ்ந்துவரும் முத்திரை சமுதாயத்தினர் கங்கை திரட்டும் வைபவத்தை நடத்தி, அத்துடன் வளரி எடுத்துக் கொண்டு ஊர்வலம் வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள். இவர்கள் இத்தலத்தில் சிவாலய பாரமரிப்பிலுள்ள பாளையக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தை மாத பூசத்திருநாளன்று மூன்று ஏக்கர் பரப்பளவுள்ள திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

கிரிவலம் எனும் இறைவலம்

பௌர்ணமி நாள் ஒவ்வொரு மாதமும் வருகையில், பக்திப் பரவம்தான் இங்கே! மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வாசலில் விநாயகரை வழிபட்டு, பிறகு ஊரிலுள்ள சிறு கிராம தெய்வங்களை வணங்கி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு மலையைச் சுற்றி வருவார்கள்.

வலம் வரும்போது ஸ்ரீபெரியாண்டவர் திருக்கூட்டம் என்னும் பக்தர்கள் குழு, கயிலாய வாத்தியம் என்னும் மங்கள வாத்தியத்துடன் தேவாரம், திருமுறைப் பாடல்களையும், சிவசக்தி நாம சங்கீர்த்தனமும் பாடியபடியே வருவார்கள். மலைவல நிறைவில் தீப ஆராதனை நடைபெற்று பெரியாண்டவர் திருக்கூட்டத்தின் சார்பில் அன்னதான சேவை நடைபெறுகிறது.

பெரியாண்டவரைக் குலதெய்வமாக உடையவர்கள் இத்தலத்தில் தங்கள் வருடாந்திர பிரார்த்தனைகளைச் செய்கின்றனர். ஒரு மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று திருவாசக முற்றோதலும், அட்சய பாத்திரம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பக்தர்கள் வழிபாட்டிற்காக காலை 8.00 மணிமுதல் 11.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. தொழில் மேன்மை, குடும்ப நலம், திருமணத் தடைநீக்கம் ஆகிய பலன் வேண்டி பக்தர்கள் இத்தலம் வருகிறார்கள். தல விருட்சமாக நாகலிங்கமும், வில்வமரமும் உள்ளன. ரட்சகராக நாகராஜர் வீற்றுள்ளார்.

அரசன் கழனி சிவாலயம் மற்றும் மலையைக் காண, சென்னை - தாம்பரத்திலிருந்து காரணை செல்லும் 105 எண் பேருந்து, சைதாப்பேட்டையிலிருந்து 51பி ஒட்டியம்பாக்கம் நகரப் பேருந்தில் போகலாம். மேடவாக்கம் - சிறுசேரி சிப்காட் வழியில் உள்ளது. தாம்பரம் ரயிலடியிலிருந்து 12 கிலோ மீட்டரில் இத்தலம் இருக்கிறது.

- கே. குமார சிவாச்சாரியார்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.