Skip to main content

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்! 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Karur Temple festival

 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது.

 

முன்னதாக ஆடி 18 அன்று இரவு மகாதானபுரம் காவிரி ஆற்றில் பூசாரி கத்தி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆடி 19 காலை சுவாமி மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்களுடன் வீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தார். பின்னர் சுவாமி மகாலட்சுமிக்கு பரம்பரை பூசாரி ஆணி கால் அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்பு கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டு கருடன் வட்டமிட்டதை தொடர்ந்து ஏழு பூசாரிகளும் ஒன்றாக கோவிலை வலம் வந்தனர். அதன்பிறகு பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

 

சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா வெளிமாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

Next Story

“தமிழ்நாட்டு மக்கள் நலனைக் காக்கும் அரசு மத்தியில் அமையவேண்டும்” - அருண் நேரு தீவிர பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Arun Nehru campaigned hard in Karur

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  அருண் நேரு கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செல்லும் இடமெல்லாம் அதிர்வேட்டு முழங்க சால்வை அணிவித்து உற்சாகமாக  பொதுமக்கள் வரவேற்றனர். மருதூர் பேரூராட்சி பகுதி கணேசபுரத்தில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து வைகைநல்லூர் பஞ்சாயத்து, தாளியாம்பட்டி, வை.புதூர், பாப்பக்காபட்டி பஞ்சாயத்து மலையாண்டிபட்டி, வாழைக்கிணம், தொண்ட மாங்கிணம், நாடக்காப்பட்டி, குழந்தை பட்டி, சுக்காம்பட்டி, முதலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளர்களைச் சந்தித்து  உதயசூரியனுக்கு  வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசியதாவது, “உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்பதை பெருமையாக எண்ணுகிறேன். மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்கிற பாஜக அரசு, தமிழ்நாட்டு மக்கள்  நலனுக்காக எதையும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் செய்த சாதனைகளை சொல்லுகிறார். ஆனால்  பாஜக அரசு எதையும் செய்யவில்லை என்றாலும் நாம் அனுமதி கோரும் நல்ல  திட்டங்களைத் தொடர்ந்து தடுத்து வந்ததோடு, நாம் செலுத்துகிற வரிப்பணத்தில் நமக்குத் தர வேண்டிய நிதியைக் கூடத் தராமல் பாரபட்சம் செய்கிற ஒரு அரசாக பாஜக அரசு உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாடு முன்னேறி விடும் என்பதுதான். இதையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இத்தனை முட்டு கட்டைகளையும் தாண்டி, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை ஜாதி, மதம் பாராமல் எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதி அரசியலை, திராவிட மாடல்  அரசியலை  முன்னெடுத்து நலத்திட்டங்களை உங்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள். முட்டுக்கட்டை போடுகிற பாஜக அரசுக்கு பதிலாக மத்தியில் நமக்கு சாதகமான அரசு அமைந்தால் நாம் இன்னும் எவ்வளவு வேகமாக  மக்கள் நலத் திட்டங்களை  தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போது தான் தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகக் கொண்டு வர முடியும்.  அப்போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய பாஜக தமிழ்நாட்டிற்கு என்ன செய்தோம் என்பதை சொல்ல முடியாமல் மக்களை திசை திருப்பி வாக்கு சேகரிக்க நினைக்கிறார்கள். இதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே நமக்கு சாதகமான இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு மத்தியில் அமைய வேண்டும். அதற்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். தற்போது சில தினங்களாகவே ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையில் வருகிற செய்தி எல்லாம் நீங்கள் அறிவீர்கள். என்ன அந்தச் செய்தி என்றால் தென் மாநிலங்கள் மட்டுமல்ல, வட மாநில ஊடகங்கள் கூட அதைத்தான் சொல்கின்றன. எல்லாம் என்ன சொல்கிறார்கள்? தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்பதுதான் அந்த செய்தி. அப்போது தமிழ்நாட்டின் பங்கு அதிகமாக இருந்தால்தான் நாம் நமக்கு சாதகமான மத்திய அரசிடம் இருந்து நல்ல பல வளர்ச்சி திட்டங்களைப் பெற முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காவிரியில் செக் டேம் கட்ட அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால்  அனுமதி தராமல் கிடப்பில் போட்டு விட்டார்கள். இப்படி முட்டுக்கட்டை போடும் பாஜகவிற்குப் பதிலாக நமக்கு சாதகமான இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தால், உங்களுடைய குடிநீர் பிரச்சனைகளைக் கட்டாயம் தீர்க்கப் பாடுபடுவேன். முட்டுக்கட்டை போட்டு மக்கள் நலத் திட்டங்களைத் தடுப்பதற்கு  ஒரு ஆட்சி தேவையில்லை. எனவே மக்களுக்கு கொடுக்கும் அரசை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட  நீங்கள் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளரான எனக்கு வருகிற 19ஆம் தேதி வாக்கு எந்திரத்தில் முதல் பட்டனாக உள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளைப் பதிவு செய்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என உங்கள் வீட்டுப் பிள்ளையாக பணிவோடு  கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

வாக்கு சேகரிப்பின் போது குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ராமர், தொகுதி பொறுப்பாளர் பரணி கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரகூர்  கதிரவன், மேற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சப்பட்டி கரிகாலன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், இரும்பூதிப்பட்டி வெற்றிவேல், குளித்தலை நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், மலையாண்டிபட்டி சுப்பு உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.