Skip to main content

"குழந்தாய் உன் தந்தைக்கு வணக்கம் சொல்லு" - துஷ்யந்தனை அதிரவைத்த சகுந்தலை!

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டதின் நான்காம் பகுதி பின்வருமாறு...

 

கடந்த பகுதி...
 

பல ஆண்டுகள் கழித்து தன் மகளை சந்தித்த விஸ்வாமித்திரர், அவளை கணவன் துஷ்யந்தனோடு சேர்த்து வைப்பதற்காக துஷ்யந்தன் ராஜ்யத்திற்கு அழைத்துச் சென்றது பற்றி கடந்த பகுதியில் கூறியிருந்தேன். மிகப்பெரிய அரண்மனையில் ரிஷிகளும் மந்திரிகளும் வரிசையாக அமர்ந்து இருக்க, சிம்மாசனத்தில் துஷ்யந்தன் அமர்ந்திருந்தான். விஸ்வாமித்திரர் உள்ளே நுழைந்ததும் வசிஷ்டரைத் தவிர அனைவரும் எழுந்து நின்றனர். விஸ்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காது. துஷ்யந்தா உன்னைத்தான் பார்க்க வந்தேன் என்று கம்பீரமான குரலில் சொன்னார் விஸ்வாமித்திரர். இது சகுந்தலை, இது அவளுடைய மகன் பரதன்... இருவரையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். பதிலுக்கு, ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என துஷ்யந்தன் கேட்கிறான். 

 

பின், சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டே அம்மா நீ யாரு, அந்தக் குழந்தை யாரு என சகுந்தலையிடம் கேட்கிறான் துஷ்யந்தன். நான்தான் உன் காதலி... இது உனக்குப் பிறந்த குழந்தை என்றெல்லாம் சகுந்தலை சொல்லாமல் அற்புதமான ஒரு பதிலைக் கூறுவாள். குழந்தாய் தந்தைக்கு ஒரு வணக்கம் சொல்லு என சகுந்தலை பரதனிடம் கூற, அவனும் வணக்கம் சொல்லுவான். உடனே துஷ்யந்தன், நீங்கள் தவறான இடத்திற்கு வந்துள்ளீர்கள் என்பான். ரிஷி ஒருவர் கொடுத்த சாபத்தால் அவனுக்குப் பழைய விஷயங்கள் அனைத்தும் மறந்துவிட்டதால் இவர்களை யாரென்று அவனுக்குத் தெரியவில்லை. என் மகளை ஏற்றுக்கொள் என்று விஸ்வாமித்திரர் கூற, அதற்கு துஷ்யந்தன் மறுக்க என இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுவிடுகிறது. ஒருகட்டத்தில் என் தலையை வேண்டுமானாலும் உன் பாதத்தில் வைக்கிறேன், என் மகளை ஏற்றுக்கொள் என்கிறார். யாருக்கும் தலை வணங்காத விஸ்வாமித்திரர், தன் தலையை துஷ்யந்தன்பாதத்தில் வைக்கிறேன் என்று சொல்லியதும் வசிஷ்டர் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. 

 

இப்படி இருக்கையில், துஷ்யந்தனுக்குச் சாபம்விட்ட அந்த ரிஷி அந்த சாபத்தை விலக்கிக்கொள்கிறார். அவர் சாபத்தை விலக்கியதும் துஷ்யந்தனுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்துவிடும். சகுந்தலை என்று கத்திக்கொண்டே ஓடிவந்து தன் மனைவியை கட்டிப்பிடித்து அழுது, அவளை அழைத்துக்கொண்டு சென்று தன்னுடைய சிம்மாசனத்தில் அமரவைப்பான். துஷ்யந்தனுடைய அப்பா, சகுந்தலையை மருமகளாக ஏற்றுக்கொண்டு, தன்னுடைய பேரனுக்கு பரதன் எனப் பெயர் சூட்டி, இந்த நாட்டை ஆள்வதற்கும் பரம்பரையை விருத்தி செய்வதற்கும் உன்னையே நியமிக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு பட்டமும் சூட்டிவிடுவார். இந்த இடம்தான் மகாபாரதக் கதையின் ஆணிவேர். அதற்குப் பிறகு பல தலைமுறைகள் உருவாகி மகாபாரதம் கதை நீண்டுகொண்டே செல்லும். மகாபாரதக் கதைக்கு விருட்சமாக இருந்ததே சகுந்தலையின் மகன் பரதன்தான்.

 

 

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.