Skip to main content

"இந்த கோயிலுக்கு வந்ததால் ‘பீஸ்ட்’ பட வாய்ப்பு கிடைத்தது" - சுஜாதா பாபு பகிரும் சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

"I came to this temple....I got an opportunity to film Beast"- Sujata Babu shares interesting facts!

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான சுஜாதா நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது "செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராம வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூன்று தினங்கள் விஷேசமாகக் கொண்டாடுகிறது. வாரந்தோறும் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பக்தர்களும் வருவார்கள். இன்னும் விஷேசமான நாட்கள் என்றால், கார்த்திகைத் திருநாள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம்தான் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி, ஸ்ரீ ராம நவமி ஆகிய நாட்கள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

 

அந்த நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது குட முழுக்கு பணிகள் நடைபெற்று வருவதால் கூட்டம் குறைவாகவே உள்ளது. நாம் ஒரு கோயிலுக்கு செல்கிறோம்; ஒரு சுவாமியை நமஸ்காரம் செய்கிறோம் என்றால், அது சாதாரண விஷயம் கிடையாது. எவ்வளவோ மக்கள் எவ்வளவோ நாட்கள் திரும்பத் திரும்ப அந்தக் கோயிலுக்கு சென்று தனது மன பாரங்களை இறக்கி வைப்பார்கள். நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். உலகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். அந்த பிரார்த்தனைகள் திரும்பத் திரும்ப வரும்போது, இந்த இடத்தில் ஒரு நல்ல பாசிடிவ் வைப்ஸ் கிடைக்கும். 

 

அடிக்கடி நான் இக்கோயிலுக்கு வருவது மன அமைதியைத் தருகிறது. பொதுவாக, இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவோம். நாம் அவர்கிட்ட கூறினால் போதும், நமக்கு என்ன வேலை செய்ய வேண்டுமோ, அதை செய்து முடிப்பார். நாம் ஆஞ்சநேயர் என்று எழுதுவதற்கு பதில், ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவிக்கலாம். துளசி மாலையையும் போடலாம். சனிக்கிழமை அன்று துளசி மாலை போடுவது, வெற்றிலை மாலை போடுவது இங்கு ரொம்ப விஷேசம். அதேபோல், வெண்ணை காப்பு செய்வார்கள். எதுவாக இருந்தாலும் நம் மனது ஒன்றி இக்கோயிலில் வழிப்பட்டோம் என்றால் கண்டிப்பாக நல்லது நடக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. 

 

அதேபோல், கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களும் நன்றாக இருக்கும்.  அதேபோல், இக்கோயிலில் தேங்காய் கட்டிவிட்டு செல்வார்கள். இந்த தேங்காய் கட்டுவது எதற்கு என்றால் இளநீர் முதலில் எடை அதிகமாக இருக்கும்; அது காய்ந்த பிறகு எடை குறைவாக இருக்கும். காற்று அல்லது தண்ணீரில் அடித்துச் சென்றாலும், அது எந்த இடத்திற்கு போகிறதோ, அது வளர ஆரம்பிக்கும். நமது வாழ்க்கையிலும் அந்த வளர்ச்சி வர வேண்டும் என்பதற்காக, இந்த மட்டைத் தேங்காய்யைக் கட்டுகிறார்கள். பின்பு, 45 நாட்கள் கழித்து நமக்கு உண்டான பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம். கடவுள் மேல் நமது பாரத்தைப் போட்டுவிட்டு எப்படியாவது இந்த வேலை நடக்க வேண்டும் என்று நினைக்கும் போது அந்த பாசிட்டிவ் வைப்ஸ் எங்கிருந்தாலும், நல்ல காரியத்தைக் கண்டிப்பாக நடத்திக் கொடுத்து விடுவார்கள். 

 

அதற்காகத்தான் இந்த மட்டை தேங்காயைக் கட்டி வழிபாடு செய்கிறார்கள். 45 நாட்களுக்குப் பிறகு அந்த மட்டை தேங்காயை உடைத்து ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று சுவீட் செய்து சாப்பிட்டோமேயானால் அந்த வேலையும் நடக்கும். நமது மனசும் ரொம்ப திருப்தியாக இருக்கும். அதனால், நான் அடிக்கடி வந்து செல்லும் கோயில் புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில். கார்த்திகை மாதம் இக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவிருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், ஆஞ்சநேயரைப் பார்க்க முடியவில்லை. 

 

குடமுழுக்கு முடிந்த பிறகு நான் இக்கோயிலுக்கு வருவேன். சனிக்கிழமை கோயிலுக்கு வரும்போது, அர்ச்சகர் தண்ணீரை எடுத்து நமது முகத்தில் தெளிப்பார். அந்த தண்ணீர் தெளிக்கும்போது, பார்த்தால் நமது மனதில் இருக்கும் பிரச்சனைகள், நமது மனதில் இருக்கும் சந்தேகங்கள், நமது மனதில் இருக்கும் பயம் எல்லாமே உடனடியாக விடுபட்டுவிடும். 

 

நான் சினிமாவில் நடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, எந்த மாதிரியான வாய்ப்புகள் நமக்கு கிடைக்கும்? நாம் வெளியே சொல்ல இன்னும் ஆரம்பிக்கவில்லையே, இப்போது செய்தி வாசிப்பாளராகத்தானே  இருக்கிறோம். யார்கிட்ட போய் சொல்வது? எப்படி சினிமா துறைக்குள் செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பின்னர், இக்கோயிலுக்கு வந்தேன். பிரார்த்தனை செய்தேன். கோயிலுக்கு வந்துவிட்டு வீட்டுக்குச் சென்ற இரண்டாவது நாளே, எனக்கு சன் பிக்சர் நிறுவனத்தில் இருந்து தொலைபேசியின் மூலம் அழைப்பு வந்தது. அதற்குப் பிறகுதான்  ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தேன்". எனக் கூறினார். 


 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.