Skip to main content

கோடைத் திருவிழா கொண்டாட்டங்கள்; 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேரோட்டம்

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

Chariot festival held in Pudukottai after 12 years

 

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை மாணவர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் கிராமங்களில் கோயில் திருவிழாக் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லை. கலை நிகழ்ச்சிகள், பால் குடம், காவடி, தேரோட்டம், தீர்த்தம் (மஞ்சள் நீரூற்று), தெப்பம், ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கை, கிடாக்கறி விருந்து எனக் கிராமங்கள் விழாக் கோலங்களில் ஜொலிக்கிறது. பகலில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் இருந்தாலும் இரவில் திருவிழா கொண்டாட்டங்களால் வெயிலை மறந்து போகிறார்கள். அதிலும் பல வருடங்களாக நடக்காத திருவிழாக்கள் இப்போது நடப்பதில் அந்த கிராம மக்களும் இளைஞர்களும் பேரானந்தமாக உள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராம காவல் தெய்வமான முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. கேட்ட வரங்களைக் கேட்டவுடன் கொடுக்கும் அம்மனாக பெயர் பெற்றதால் அரசியல் பிரபலங்கள் கூட அடிக்கடி வந்து செல்லும் தலமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 12 ஆண்டுகளுக்குப் பிறகு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. திருவிழா நாட்களில் அம்மன் அலங்கார ஆராதனைகளுடன் மலர் அலங்கார வாகனங்களில் வீதி உலாவும், வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் பால் குடம் எடுத்து தரிசனம் செய்தனர்.

 

Chariot festival held in Pudukottai after 12 years

 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடந்தது. தொடர்ந்து 22 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு காய், கனி, மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீற்றிருக்க வாண வேடிக்கைகளுடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை நடந்த தீர்த்த திருவிழாவில் மாமன் மச்சான்கள் மஞ்சள் தண்ணீரைத் தெளித்து உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் நிகழ்வாக இருக்க பெண்கள் மஞ்சள் நீர் குடங்களுடன் ஊர்வலமாக வந்து தீர்த்த ஊரணியில் அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி குளிர்வித்தனர். 24 ஆம் தேதி புதன் கிழமை இரவு தெப்பக் குளத்தில் மின்விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பச்சைப் பட்டுடுத்தி அம்மன் வீற்றிருக்க இளைஞர்கள் தண்ணீரில் இறங்கி இழுத்துச் செல்ல தெப்பத் திருவிழாவும் நடந்தது.

 

கோடைக் காலத் திருவிழாக்கள் குறித்து கிராமப் பெரியவர்கள் கூறும்போது, தமிழர்களின் எந்த ஒரு விழாக்களும் அர்த்தமுள்ளதாக இருக்கும். கோடை தொடங்கும் போது விவசாயம் இருக்காது. விவசாயிகளுக்கு நேரம் போகாது. வெயில் அதிகமாக இருப்பதால் இரவில் வெக்கை அதிகமாக இருக்கும் வீட்டில் தூங்க முடியாது. அதனால் வேனல் காலத்தில் திருவிழாக்களை நடத்தி கலைநிகழ்ச்சிகள் வைத்து மகிழ்ந்தனர். அம்மனுக்காக பொங்கல் வைத்தாலும் உறவுகளுக்கு விருந்து வைக்க கிடா வெட்டி உணவளித்து உபசரித்தனர். வேனல் கால நோய்களில் இருந்த தற்காத்துக் கொள்ள தீர்த்தம் (மஞ்சள் நீரூற்று) திருவிழாக்களை நடத்தி மாமன் மச்சான் உறவுகள் மாறி மாறி மஞ்சள் தண்ணீர் ஊற்றிக் கொள்வதால் கிருமி அழிந்து நோய்களில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டனர். இப்படி நம் முன்னோர்களின் விழாக்கள் அர்த்தங்கள் நிறைந்ததாகவே உள்ளது என்றனர்.

 

 

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.