Skip to main content

சைவமும், வைணவமும் ஒன்று - களைகட்டிய ஆடி தபசு திருவிழா! 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

Aadi Thabasu festival

 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சைவமா, வைணவமா யார் பெரியவர் என்ற பிரச்சனை வந்ததாகவும், அதனை தடுத்தாட்கொள்ள ஆதிசிவனாகிய சிவபெருமான் தன் உடம்பில் ஒருபாதியை சங்கரனாகவும், மறுபாதி நாராயணராகவும் ஒரு சேரக் காட்சியளித்து, சைவமும், வைணவமும் ஒன்று என்று பக்தர்களை அமைதிப்படுத்தினார் என்றும் நம்பப்படுகிறது. 

 

அந்த அற்புதமான அரிய காட்சியை தனக்குக் காட்டியருள வேண்டும் என்று புன்னைவனத்தில் தவமிருந்த உமா தேவியரான பார்வதியம்மைக்குச் சிவபெருமான் காட்சியளித்தார். ஆடிமாத பௌர்ணமியுடன் கூடிய உத்திராட நட்சத்திரத்தில் சர்வேஸ்வரனின் இந்தக்காட்சி நடைபெற்றதால் ஆடித்தபசு என்றும் மங்காத சிறப்பானது.

 

இந்த அற்புத திருக்காட்சி புன்னையடி என அழைக்கப்படும் சங்கரன்கோவிலில் நடந்தாக நம்பப்படுகிறது. அதற்காக சங்கரநாராயணராக ஒரு சேர உருவெடுத்த சிவபெருமான் சங்கரநாராயணராகவும், பசுக்களுடன் தவமிருந்ததால் கோமதியம்பிகையாகி, சுவாமி சங்கரநாராயனர் கோவில் என பெரிய ஆலயமாக உருவெடுத்திருக்கிறது.

 

ஆண்டாண்டு காலம் ஆடி மாதம் 12ம் நாள் திருவிழாவாக நடக்கிற ஆடித்தபசு நிகழ்ச்சியின் பொருட்டு ஒவ்வொரு நாளும் அன்னை கோமதியம்பாள் தவக்கோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழா நிகழ்ச்சியின் சிகரமாக ஆக. 10 அன்று அபிஷேக தீபாராதனைக்குப் பின்பு கோமதியம்பாள் தங்கச் சப்பரத்தில் பகல் 12.15 மணியளவில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 4.30 மணியளவில் சுவாமி ரிஷப வாகனத்தில் புறப்பட்டு ரதவீதி எழுந்தருளினார். மாலை 6.30 மணியளவில் தபசு மண்டபத்தில் தவமிருக்கும் அன்னை கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. மிகச் சிறப்பாக நடந்த ஆதிசிவனின் இந்த அற்புதமான அரியகாட்சியை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி சிரத்தையோடு தரிசித்தனர்.

 

கொரோனாத் தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்த ஆடித்தபசு காட்சித் திருவிழா இந்த வருடம் வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்களின் ஆரவாரத்தோடு நடந்தது மிகச் சிறப்பான அம்சமாகக் கருதப்படுகிறது.
 

 

 

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.