Skip to main content

இரவு 7 மணிக்கே வெறிச்சோடும் யாழ்ப்பாணம்! அடுத்த வீட்டுக்காரருடன் பேசவே அஞ்சும் யாழ் தமிழர்கள்!!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

 

 

இலங்கை வடக்கு மாகாணத்தில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று உலகம் முழுவதும் இலங்கை அரசு கூறிக்கொண்டிருக்கிறது. இதை நம்பி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்த ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆனால், அங்கு போனவுடன்தான் எதார்த்த நிலை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள். தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த ஒரு குடும்பம் இலங்கை திரும்பியது. அங்கு சென்றவுடன், அவர்களுக்கு எச்ஐவி, டி.பி., மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் இருக்கின்றனவா என்று சோதனை நடத்தப்பட்டது. அப்படி சோதனை நடத்தப்பட்டு மாதங்கள் ஆகியும் அவர்களுடைய குடியுரிமை உறுதிசெய்யப்படவில்லை என்று புலம்பித் தவிக்கிறார்கள்.

 

yazhpanam




12 ஆண்டுகள் குடியிருந்த தமிழகத்தை விட்டு போகும்போது, பக்கத்து வீடுகளில் குடியிருந்தவர்கள், அவர்களை இலங்கைக்கு ஏன் போகிறீர்கள் என்று அன்பாக தடுக்க முனைந்தார்கள். ஆனால், சொந்த நகரமான யாழ்ப்பாணத்துக்கு போன பிறகு, பக்கத்து வீடுகளில் குடியிருக்கும் தமிழர்கள்கூட பேச பயப்படுகிறார்கள். குறைந்தபட்சம் புன்னகைக்கக்கூட மறுக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள்.

 

கொழும்பு நகரில் கூட இரவு முழுவதும் போக்குவரத்து இருக்கிறது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இரவு 7 மணி ஆவதற்கு முன்னரே மயான அமைதி குடிகொண்டுவிடுகிறது. யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதால்தான் மக்கள் வீடுகளில் அடைந்து கொள்கிறார்கள்.
 

yazhpanam



தமிழகத்திலேயே இருக்கலாம் என்றுதான் அந்தக் குடும்பத்தினர் நினைத்திருந்தார்கள். ஆனால், 12 ஆண்டுகளாக தங்களுடைய அடையாளத்தை இழந்து, ஒரு வேலைக்கு போக முடியாமல், தங்குவதற்கு வீடுகட்ட முடியாமல், போலீஸ் அழைக்கும்போதெல்லாம் ஆஜராக வேண்டிய அவலத்தில் எத்தனை காலம்தான் இருக்க முடியும் என்று வேதனையில் அழுந்தினார்கள். தமிழகத்திலிருந்து வெளிநாடு போக வேண்டும் என்றாலும் திருட்டுத்தனமாகத்தான் போக வேண்டும். அப்படி போய் மாட்டிக்கொண்டு அவமானப்பட வேண்டுமா என்ற தயக்கத்தில் கிடைத்த வேலையை செய்துகொண்டு பிழைப்பை ஓட்டினார்கள்.

 

இந்நிலையில்தான் வேறு வழியே இல்லாமல் இலங்கைக்கு திரும்பி அந்த நாட்டு குடியுரிமையோடு வெளிநாடு போகலாம் என்று நினைத்தார்கள். அதுவும் எளிதான காரியமாகவில்லை. யாழ்நகரில் நிலவும் இந்த கொடூரமான அமைதியைத்தான் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக வடக்கு மாகாண மீடியாக்கள் பரப்புகின்றன.

 

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதுகூட யாழ்ப்பாணத்தில் இரவு முழுக்க நடமாட்டம் இருந்தது. ஆனால், வடக்கு மாகாணத்திற்கென தமிழர்களின் சொந்த ஆட்சி இருந்தும், மக்கள் நடமாட பயப்படுவதை வெளியுலகுக்குச் சொல்ல மீடியாக்கள் பயப்படுவது அங்கு சென்ற பிறகே அந்தக் குடும்பத்துக்கு தெரியவந்தது.

 

பாவம், தமிழகத்தில் அவர்கள் அனுபவித்த சுதந்திரம்கூட சொந்த மண்ணில் கிடைக்காமல் உள்ளுக்குள் புழுங்குகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.