Skip to main content

உலகின் முதல் விண்வெளி ஹோட்டல்! என்னென்ன வசதிகள் இருக்கின்றன..?

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

world's first space hotel for tourists

 

அமெரிக்காவின் 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' நிறுவனம் தயாரிப்பில் உருவான, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல் வரும் 2027ஆம் ஆண்டில் திறக்கப்பட உள்ளது.

 

விண்வெளிக்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும், அங்கு கிடைக்கும் அனுபவத்தைப் பகிர வேண்டும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்குக் கனவாக இருக்கும். இந்நிலையில், விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் பெரும்பாலான நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதேபோல, ஒரு சில நிறுவனங்கள் விண்வெளிக்கு வருகிறவர்களை உபசரித்துத் தங்க வைப்பதற்கு ஹோட்டல்களை அமைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், மக்களின் விண்வெளி பயணம் என்பது இனி ஒரு கனவு அல்ல. ஏனெனில், 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' நிறுவனமானது, உலகின் முதல் விண்வெளி ஹோட்டல் ஒன்றை, வரும் 2027ஆம் ஆண்டில் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் விண்வெளிக்கு மிக விரைவில் சுற்றுலா செல்ல முடியும், இனி வரும் நாட்களில் புத்தாண்டு விடுமுறை நாட்களை விண்வெளிக்குச் சென்று செலவிட முடியும் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

வாயேஜர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி ஹோட்டலில் 400 விருந்தினர்கள் வரை தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல்,  ஜிம், பார், நூலகம், உணவகம் மற்றும் பொழுதுபோக்கு மையம் ஆகியவையும் இந்த ஹோட்டலில் இடம்பெற உள்ளது. இருப்பினும், ஹோட்டல் கட்டுமான செலவினை இதுவரை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

 

இந்த விலை உயர்ந்த ஹோட்டலின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், இது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியை வட்டமிடும். இந்த விண்வெளி நிலையம் ஒரு பெரிய வட்ட வடிவமாகவும், செயற்கை ஈர்ப்பு சக்தியை உருவாக்கிச் சுழலும் வகையிலும் இருக்கும். இதில் உருவாக்கப்படும் ஈர்ப்பு விசை, சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்பு விசைக்கு ஒத்ததாக அமைக்கப்படும். மேலும் 2025ஆம் ஆண்டில் பூமியின் சுற்றுப்பாதையில் இதற்கான பயண நிலையம் ஒன்றையும் உருவாக்க அந்தநிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் 2027ஆம் ஆண்டு முதல் இந்த விண்வெளி ரிசார்ட் செயல்படக்கூடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

 

அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்பிட்டால் அசெம்பளி கார்ப்பரேஷன்' என்கிற கட்டுமான நிறுவனமானது, வாயேஜர் ஸ்டேஷன் என்ற பெயரில் விண்வெளி ஹோட்டலை அமைக்க நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்தது. அதன்படி, அந்நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டில் விண்வெளி ஹோட்டல் கட்டுமான திட்டங்கள் முதன்முதலில் வெளியிட்டது. இந்நிலையில், அதன் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு, வரும் 2027 ஆம் ஆண்டில் உலகின் முதல் விண்வெளி ஹோட்டலை திறக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்த ஹோட்டல் 2025ஆம் ஆண்டு திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல், உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தாமதம் ஏற்பட்டதால், அதன் தொழில்நுட்ப வேலைகளில் ஏற்பட்ட தடை காரணமாகத் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இனி வரும் விடுமுறை நாட்களை விண்வெளியில் கழிக்க ஆர்வமாக இருப்பவர்கள், அங்கு சென்று மூன்று  நாள் தங்குவதற்குத் தேவையான 5 மில்லியன் டாலர்களைச் செலுத்தி, தங்கள் அறையை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்கிறது இந்நிறுவனம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

கடலூர் கடற்கரையில் விழுந்த எரி விண்கற்கள்; கண்டுபிடித்த மாணவருக்குக் குவியும் பாராட்டுகள்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Flaming meteorites fell on Cuddalore coast; Kudos to the student who discovered it

 

கடலூர் கடற்கரையில் விழுந்த எரி விண்கற்களைக் கண்டுபிடித்த மாணவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருபவர் வெங்கடேசன். இவரது மகன் அனீஸ்வர். இவர் கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதல் விண் ஆய்வில் ஆர்வம் கொண்டு வருகிறார். விண் ஆய்வு குறித்து நடைபெறும் போட்டிகளில் இவர் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார். இவரது ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை இவருக்குத் தொலைநோக்கி விண் ஆய்வு உபகரணங்களை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

 

இந்நிலையில் மாணவர் கடலூர் சில்வர் பீச் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது விண்ணிலிருந்து விழுந்த 56 எரிகற்களைக் கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவை விண்ணிலிருந்து விழுந்த எரிகற்கள் என்பதை நிரூபித்து விண் ஆய்வாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளார்.

 

இதனைச் சர்வதேச விண்ணியல் தேடல் குழுமம் மற்றும் ஹவாய் ஸ்டார் வான் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து விண்கற்கள் குறித்த ஆய்வில் மாணவர் அனீஸ்வரை இணைத்துக் கொண்டு அவருக்கு அங்கீகார பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. சர்வதேச வான் ஆய்வுக் குழுமம் அவரை உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.

 

மாணவர் அனீஸ்வர் கடலூரில் விழுந்த 56 எரிகற்களுடன் ஏழு விண்கற்களையும் சிறு கோள்கள் கண்டுபிடித்து ஹார்ட்டின் சிமன்ஸ் பல்கலைக்கழகத்தின் டெக்சாஸ் விண் ஆய்வாளர் சான்றிதழும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ்நாடு இளையோர் விண் ஆய்வு மையம் என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி சக மாணவர்களிடையே விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வருகிறார். இதனை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாணவரை நேரில் அழைத்துச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டினார். சிறுவயதிலேயே மாணவர் விண் ஆய்வில் வெற்றி பெறுவது அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.