Skip to main content

இன்று அமலுக்கு வரும் பிரைவசி பாலிசி: ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன ஆகும்? - வாட்ஸ்அப் விளக்கம்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
whatsapp

 

 

வாட்ஸ்அப் நிறுவனம், இவ்வாண்டு தொடக்கத்தில் தனது சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்தது. இது பயனர்களின் தனியுரிமைக்கு எதிரான செயல் என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, வாட்ஸ்அப் பயனர்கள் ‘சிக்னல்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர்.

 

இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்களைப் பாதுகாப்போம் என தெரிவித்ததோடு, புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்காவிட்டாலும் அவர்களின் கணக்குகள் முடக்கப்படாது  எனவும் தெரிவித்தது. மேலும் சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்களை அமல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டது. 

 

இந்தநிலையில் சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்தநிலையில்  சேவை மற்றும் தனியுரிமை கொள்கைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை பயனர்கள் ஏற்காவிட்டால், என்ன ஆகும் என்பதை வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, சேவை மற்றும் தனியுரிமை கொள்கை மாற்றங்களை ஏற்காவிட்டால், பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. சில காலம் வரை தொடர்ந்து வாட்ஸ்அப் கணக்கை எப்போதும்போல் உபயோகிக்கலாம். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும்படி நோட்டிபிகேஷன் அவ்வப்போது வரும். அதன்பிறகு வாட்ஸ் அப் செயலியை திறந்தாலே, மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சொல்லும் நோட்டிபிகேஷன் மறையாமல் தொடர்ந்து ஸ்க்ரீனில் இருக்கும்.

 

அப்போது பயனர்கள், தங்களது சாட் லிஸ்டை பார்க்க முடியாது. இதனால் யாருக்கும் மெசேஜ் செய்யவோ, அழைப்பு விடுக்கவோ முடியாது. அதேநேரம் வாட்ஸ்அப் நோட்டிபிகேஷன் ஆன் செய்யப்பட்டிருந்தால் அதனை தொடுவதன் மூலம் வரும் மெசேஜ்களுக்கு பதிலளிக்கலாம். வீடியோ/ ஆடியோ அழைப்புகளுக்கு பதிலளிக்கலாம்.

 

அதன்பிறகும் பயனர்கள்சேவை மற்றும் தனியுரிமை கொள்கை மாற்றங்களை ஏற்காவிட்டால், அவர்களது வாட்ஸ்அப் கணக்கிற்கு மெசேஜ்ஜோ, அழைப்போ, நோட்டிபிகேஷனோ வாராது. இதனால் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

 

 

சார்ந்த செய்திகள்