Skip to main content

அமேசான், ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு - இந்தியர்களுக்கும் ஆபத்து

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 - தெ.சு.கவுதமன்

nn

 

கரோனா பெருந்தொற்றின் பரவலால் கடந்த 2020 - 2021ஆம் ஆண்டுகளில் உலகெங்கும் பொருளாதாரச்சரிவு ஏற்பட்டது. கரோனா பொது முடக்கம் படிப்படியாக விலக்கப்பட்டு, விமான போக்குவரத்தும், கப்பல் போக்குவரத்தும் சீரடைந்த பின்பே கொஞ்சம் கொஞ்சமாகப் பொருளாதார நிலை சீரடையத் தொடங்கியது. இந்தச் சூழலில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்து தாக்கத் தொடங்கியதில் உக்ரைன் பெருத்த நாசத்தை எதிர்கொள்ளத் தொடங்கியது. உக்ரைன் நகரங்களைத் தொடர்ச்சியாகத் தாக்கி சின்னா பின்னப்படுத்திய ரஷ்யாவின் போக்கினை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கண்டித்தன. இந்தியா நடுநிலை வகித்தது.

 

இந்நிலையில், ரஷ்யாவின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடை விதித்தது. உலகளவில் பெரிய பெட்ரோலிய ஏற்றுமதி நாடான ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிறுத்திக்கொண்டன. இதனால் ரஷ்யாவில் உற்பத்தியாகும் பெட்ரோல் தேக்கமடைந்ததோடு, ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 

nnn

 

அடுத்த பாதிப்பாக, உணவு ஏற்றுமதி இறக்குமதியில் உலகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும், கோதுமை உற்பத்தியில் உலகளவில் மூன்றாவது இடம் வகிக்கின்றன. தற்போது கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் இதை நம்பியிருக்கும் குறைந்த வருவாய் நாடுகளான ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பார்லி உற்பத்தியிலும், சூரியகாந்தி உற்பத்தியிலும் ரஷ்யாவும்  உக்ரைனும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இதை நம்பியுள்ள நாடுகளுக்கும் பலத்த அடியாகியுள்ளது.

 

ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு ராணுவ உதவியளிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மறைமுகமாக அடி கொடுக்கும் வகையில் அந்நாடுகளுக்குச் செல்லும் எரிவாயுக் குழாயை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது ரஷ்யா. குளிர்காலம் வந்தாலே ஐரோப்பிய நாடுகளுக்குக் கதகதப்பு தேவைப்படும். அதற்கு எரிவாயு மிகவும் அவசியம். தற்போது முக்கியமான எரிவாயு குழாயில் தொழில்நுட்பப் பிரச்சனை என்றும், மெயின்டெனன்ஸ் என்றும் ஏதேதோ காரணம் சொல்லி எரிவாயு சப்ளையைக் குறைத்துள்ளது ரஷ்யா. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள்,  மாற்று எரிபொருளை அதிக விலைக்குத் தேட வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றன. ஆக, கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்ட உலக நாடுகள், தற்போது இந்தப் போரின் காரணமாக மீண்டும் பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டு வருகின்றன.

nn

 

இதன் எதிரொலியாக, உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து அதனைச் சரிசெய்வதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் இத்தகைய அறிவிப்பு கார்ப்பரேட் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகம் முழுவதுமுள்ள அந்நிறுவனத்தின் பணியாளர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இ-மெயில் மூலம் பணியாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இந்தப் பணி நீக்கம் அவர்களுடைய ஊழியர்கள் எண்ணிக்கையில் 3% என்று கூறப்படுகிறது.

 

அதேபோல்  பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் 13 சதவீதமாகும். அடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் மூன்றரை லட்சம் கோடிக்கு விலை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே பணியாளர்கள் விஷயத்தில் கெடுபிடியாக நடந்து வருகிறார். ஒருபுறம் ட்விட்டரில் ப்ளூ டிக் ஆப்ஷனுக்கு விலை நிர்ணயம் செய்தவர்; தனது நிறுவன ஊழியர்கள் பணியிலிருந்து விலக விரும்பினால் விலகலாமென பச்சைக்கொடி காட்டினார். அதோடு, 3,700 பணியாளர்களை இவரே பணி நீக்கம் செய்துள்ளார். 'இன்று தான் உங்களுடைய கடைசி பணி நாள்' என்று இ-மெயிலில் ஊழியர்களுக்குச் செய்தி அனுப்பி அதிர்ச்சியளித்தார். இவர்களுக்கான பணி இழப்பீடாக 2023 ஜனவரி மாதம் வரையிலான ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. ஃபைனான்சியல் டிரேடிங் நிறுவனமான ராபின்ஹூட் தனது ஊழியர்களில் 23% பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இந்த மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 1,20,000 பேர் பணியிழப்பைச் சந்தித்துள்ளார்கள். ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல் விலை எகிறியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் முடிவுக்கு வராமல் தொடர்ந்தபடியே இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதன் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்குமென்று பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது '2024 தேர்தல் திருவிழா'- தேதிகள் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'2024 Election Festival' begins- dates announced

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சந்து ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதே நேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதி பற்றி முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று (16/03/2024) பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதன்படி இதற்கான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உரையாற்றுகையில், ''மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் முழுமையாக தயாராகி உள்ளது. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 986.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை விட 6 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.50 கோடி பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நூறு வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆள்பலம், பணபலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக உள்ளது. நான்கு பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்கு சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியில் நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும். சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 7 கட்டங்களாக 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.  'மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல், மார்ச் 27 வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்,  மார்ச் 28 வேட்புமனு மறுபரிசீலனை, மார்ச் 30 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) வாக்கு எண்ணிக்கை என விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விளவங்கோட்டுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.