Skip to main content

இந்தியாவின் சாதனையை முறியடித்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் - எக்ஸ்...

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

space x launches 143 satellites by falcon and creates record

 

விண்வெளித்துறையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ படைத்திருந்த உலக சாதனை ஒன்றை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது.  

 

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளித்துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது. மறுபயன்பாட்டிற்கு உகந்த விண்கலங்களை உருவாக்குவது, மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்றுவரும் விண்கலத்தை உருவாக்குவது என இந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், இந்தியாவின் இஸ்ரோ படைத்திருந்த உலக சாதனை ஒன்றை தற்போது இந்நிறுவனம் முறியடித்துள்ளது. 

 

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தன்னுடைய பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட் மூலம் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. இதுவே ஒரு ராக்கெட்டில் அதிக அளவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையாக இருந்தது. ஆனால், இந்த சாதனையை தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ராக்கெட் மூலம் மொத்தம் 143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன்மூலம் ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய இஸ்ரோவின் சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் தற்போது முறியடித்துள்ளது. 

 

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த 143 செயற்கைக்கோள்களில் 10 செயற்கைக்கோள்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இந்த செயற்கைக்கோள்கள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அடுத்த கனவுத்திட்டமான ஸ்டார்லிங்க் (நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து அதிவேக இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பம்) திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட உள்ளன.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்காணிப்பை தொடங்கியது ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோள்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
'Insat 3DS' satellite started monitoring!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - இஸ்ரோ), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட் - 3டிஎஸ்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தது. இந்த செயற்கைக்கோள் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் கடந்த 17 ஆம் தேதி (17-02-2024) மாலை 5.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான வானிலை செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப் -14 ராக்கெட் சுமார் 420 டன் எடை கொண்டதாகும். 2 ஆயிரத்து 274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வுக் கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் மூலம் வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வானிலை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்ட இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோள் தனது கண்காணிப்பை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 7 ஆம் தேதி இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் நிலமேற்பரப்பு, வெப்பநிலை, மூடுபனி தீவிரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தரவுகளை இந்த செயற்கைக்கோள் வழங்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அமெரிக்க அதிபர் தேர்தல்; டிரம்புக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Elon Musk shocked Trump at US Presidential Election

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில், வேட்பாளராக நிற்க போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

Elon Musk shocked Trump at US Presidential Election

அந்த வகையில் கடந்த 3ஆம் தேதியும், 5ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதே போல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன், அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும், தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அதே வேளையில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் நிதி தேவைப்படுவதால், பல முன்னணி தொழிலதிபர்களை டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கோரி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்தவரும், உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்கை டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியது.  

இந்த நிலையில், டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், வேட்பாளர்களில் எவருக்கும் நான் நிதியுதவி அளிக்கப்போவதில்லை’ எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அதிரடி அறிவிப்பு, டிரம்பிற்கு பின்னடைவாக மாறலாம் எனக் கூறப்படுகிறது.