Skip to main content

தனது கட்சிக்காரர்களால் ட்ரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

republican leaders turns against trump in election result issue

 

 

அமெரிக்க தேர்தல் முடிவுகள் தொடர்பான ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு அவரது சொந்தக்கட்சிக்குள்ளேயே அதிருப்தி அதிகரித்து வருகிறது. 

 

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில், பைடன் 306 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர். 

 

இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு அவரது சொந்தக்கட்சிக்குள்ளேயே அதிருப்தி அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு ஆதரவாக நின்ற அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது, அந்நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளனர். அதோடு, ட்ரம்ப்பை தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியும் வருகின்றனர். அந்தவகையில், ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பரும், ட்ரம்ப்பை 2016 ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்த முதல் ஆளுநருமான நியூஜெர்சி முன்னாள் ஆளுநர் கிறிஸ்டி இது குறித்து கூறுகையில், "அதிபரின்  சட்டக் குழுவின் நடத்தை ஒரு தேசிய சங்கடமாக அமைந்துள்ளது. ட்ரம்ப் தரப்பு பெரும்பாலும் நீதிமன்ற அறைக்கு வெளியே தேர்தல் மோசடி பற்றி விவாதிக்கிறது, ஆனால் அவர்கள் நீதிமன்ற அறைக்குள் செல்லும்போது  அவர்கள் மோசடி பற்றி வாதிடுவதில்லை.

 

நான் ட்ரம்ப்பின் ஆதரவாளராக இருந்தேன், நான் அவருக்கு இரண்டு முறை வாக்களித்தேன். ஆனால் தேர்தல்கள் கொடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், இங்கு எதுவும் நடக்காதது போல் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியாது" எனத் தெரிவித்துள்ளார். இவரைத்தவிர குடியரசுக்கட்சியின் பல முக்கிய தலைவர்களும் ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ளதால், ட்ரம்ப் தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றி” - நீதிமன்றத் தீர்ப்பால் மகிழ்ச்சியில் டிரம்ப்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Trump happy with court ruling and he posted "Victory for America" ​​

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ மாகாணத்தின் நீதிமன்றத்திலும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கொலராடோ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், இந்த ஆண்டு (2024) நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்தது. 

இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (05-03-24) அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடத் தடையில்லை எனக் கூறி கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப், சமூக வலைத்தளத்தில், ‘அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முக்கிய தலைவரைக் கொன்ற புதின்? நெருக்கடியில் ரஷ்யா!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

ரஷ்யாவில் அதிபர் புதின் அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 47 வயதாகும் அலெக்ஸி நவல்னி எதிர்கால ரஷ்யா என்ற புதிய கட்சியை தொடங்கி புதினைத் தொடர்ந்து விமர்சனம் செய்தும், ரஷ்ய மாகாணங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். இதனால் ரஷ்ய மக்களிடையே பிரபலமானார். கடந்த அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அலெக்ஸி நவல்னி போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் தேர்தலின் போது புதினுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது அலெக்ஸி நவல்னி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை ஜெர்மனி அரசு உறுதி செய்ததோடு, விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்தது. 

இதனைத் தொடர்ந்து 5 மாத சிகிச்சைக்குப் பிறகு ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆர்க்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவரது இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அலெக்ஸி நவல்னியின் மனைவி, புதின் தான் தனது கணவர் இறப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு கொலை செய்துவிட்டார். இது ரஷ்ய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து நான் உண்மையில் ஆச்சரியம் அடையவில்லை. புதின் அரசாங்கம் செய்யும் ஊழல் மற்றும் அனைத்து மோசமான செயல்களையும் அவர் தைரியமாக எதிர்த்தார். பதிலுக்கு, புதின் அவருக்கு விஷம் கொடுத்தார், அவரைக் கைது செய்தார். புதினால் இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களுக்காக நவல்னியின் மீது வழக்கு தொடர்ந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவரைச் சிறையில் அடைத்தார்.  அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதின் தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார். அலெக்ஸியின் மரணம் தற்போது புதினின் ரஷ்ய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.