Skip to main content

வேலையைத் தொடங்கிய ‘ஆபரேஷன் தோஸ்த்’

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

'Operation Dost' started work; turkey earthquake

 

துருக்கியில் மொத்தம் 3000க்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் 1800 பேர் இஸ்தான்புல் நகரிலும் 250 பேர் தலைநகரான அங்காராவிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் துருக்கியில் இந்தியர் ஒருவரைக் காணவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தொலைதூரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

 

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நிர்வாகி சஞ்சய் வர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துருக்கியில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் இந்தியாவை சேர்ந்த நபரைக் காணவில்லை. கடந்த இரு நாட்களாக அவரைக் கண்டறிய முடியவில்லை. அவரது குடும்பத்தார் பெங்களூருவில் வசிக்கின்றனர். அவர்களுடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தொலைவில் உள்ள 10 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார். 

 

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறுகையில், “தற்காலிக மருத்துவமனையை அமைப்பதற்கான நான்காவது இந்திய விமானப்படை விமானம் துருக்கிக்கு சென்றுள்ளது. இதில் இந்திய ராணுவ மருத்துவக் குழுவைச் சேர்ந்த 54 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் மருந்துகளும் முகாம் அமைப்பதற்கான பிற பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

 

இந்நிலையில் மத்திய அரசு துருக்கிக்கு அனுப்பிய ஆபரேஷன் தோஸ்த் சிறப்பு மீட்புக் குழு நிவாரணப் பணி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கடவுளின் கோபத்திற்கு இஸ்ரேல் ஆளாகும்" - நாடாளுமன்றத்தில் எம்.பியின் கடைசி உரை

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
turkey MP who lost his lives while speaking in Parliament about criticized israel

துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹசன் பிட்மெஸ் (53). இவர், அந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய ஃபெசிலிட்டி கட்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி அன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அதில், இஸ்ரேலுடனான துருக்கி ஆளும் கட்சியின் உறவை விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

சுமார் 20 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய அவர், திடீரென்று மயங்கிக் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதறினர். அதன் பின்பு, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தும் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்” என்று கூறினர். நாடாளுமன்றத்தில் அவர் தனது கடைசி உரையாக “வரலாற்றிலிருந்து தப்பித்தாலும், கடவுளின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாது” என்று துருக்கி ஆளுங்கட்சியையும் இஸ்ரேலையும் விமர்சித்துப் பேசி தனது உரையை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு” - துருக்கி அதிபர் கண்டனம்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Turkey president crictized israel

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கு இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதனிடையே, காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகின்றது. மேலும், இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

 

இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்ததாகக் கூறிய கோகோ கோலா மற்றும் நெஸ்லே ஆகிய தயாரிப்பு பொருட்களுக்கு துருக்கி நாடாளுமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவித்திருந்தது. 

 

இந்த நிலையில், ரசிப் தைய்யிப் எர்டோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஒரு நகரத்தையும், அங்கு வாழும் மக்களையும் முழுமையாக அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறேன். இந்த கொடூரமான தாக்குதலை நடத்திய இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்” என்று கூறினார். துருக்கி அதிபரின் இந்த பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர், “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சில சக்திகள் இன்னும் இருக்கின்றன. துருக்கி அதிபர், துருக்கி கிராமங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார். அதனால், இவர்களிடம் இருந்து எந்தவித அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை” என்று கூறினார்.