Skip to main content

சரியான நேரத்தில் பூக்காத பூக்கள்; தோட்ட தொழிலாளர்களுக்கு தண்டனை அளித்த வடகொரியா!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

kim jong un

 

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் அதிரடி நடவடிக்கைகளைப் பற்றிய செய்திகள், அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வகையில் பூக்கள் சரியான நேரத்தில் பூக்காததற்காகத் தோட்ட ஊழியர்களை வடகொரிய தொழிலாளர் முகாமில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

 

வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் பிறந்தநாள், நேற்று கொண்டாடப்பட்டது. வருடந்தோறும்  கிம் ஜாங் இல்லின் பிறந்த தினத்தின்போது, அவரது பிறந்தநாளுக்காக 1988 ஆம் ஆண்டு ஜப்பானியத் தாவரவியலாளர் கமோ மோட்டோடெரு உருவாக்கிய 'கிம்ஜோங்கிலியா' மலரைக் கொண்டு நாட்டின் வீதிகள் அலங்கரிக்கப்படும்.

 

வடகொரியாவில் அழிவற்ற மலர் என அழைக்கப்படும் 'கிம்ஜோங்கிலியா' மலர், பசுமைக்குடிலில் வளர்க்கப்பட்டு வருகிறது. பசுமைக்குடிலில் இந்த மலரை வளர்க்கச் சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பராமரிக்க வேண்டும். இந்தச்சூழலில் கிம் ஜாங் இல்லின் பிறந்த தினத்தின்போது மலர்கள் மலராததற்காக பசுமைக்குடிலின் தோட்டக்காரர்கள் சிலரை வடகொரியா, தொழிலாளர் முகாமில் அடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

விறகுகள் பற்றாக்குறையே பசுமைக்குடிலில் சரியான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பராமரிக்க முடியாததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது . கடந்தாண்டு இறுதியில் கிம் ஜாங் இல்லின் நினைவுநாளையொட்டி, 10 நாட்களுக்குச் சிரிப்பது, மதுபானம் அருந்துவது, மளிகைப் பொருட்களை வாங்குவது, ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பிறந்தநாள் கொண்டாடுவது, இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது ஆகியவற்றுக்கு வடகொரியா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

“தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
North Korea's warning on We will destroy countries that provoke South Korea

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

இதற்கிடையே, வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, சில தினங்களுக்கு முன் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல் பகுதியில் விழுந்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சக்தி வாய்ந்த ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால், வடகொரியா அதிபர், தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.