Skip to main content

எதிர்க்கட்சிகளின் திட்டத்தை முறியடித்த இம்ரான் கான்! 

Published on 03/04/2022 | Edited on 03/04/2022

 

No-confidence motion against Pakistan PM Imran Khan

 

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான் கானே காரணம் எனக் கூறி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரீஃப் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை, அதன் முக்கிய கூட்டணி கட்சியான எம்கியூஎம் கட்சி திடீரென வாபஸ் பெற்றது. இதனால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது. 

 

மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். ஆனால் எம்கியூஎம் கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், இம்ரான் கான் அரசுக்கான ஆதரவு 164 ஆக குறைந்தது. அதே நேரம், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்துள்ளது. 

 

முன்னதாக பாகிஸ்தான் மக்களின் கேள்விக்கு பதில் அளித்த இம்ரான் கான், "பாகிஸ்தானில் நிலவும் தற்போதைய நெருக்கடிகள் அனைத்திற்கும், அமெரிக்காவே காரணம். என் அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். பாகிஸ்தான் அடிமையாக இருக்கப் போகிறதா?, சுதந்திரமாக இருக்கப் போகிறதா? என்பதை வாக்கெடுப்பே முடிவு செய்யும். சுதந்திரமான, வெளிப்படையான வெளியுறவுக் கொள்கைகள் பாகிஸ்தானுக்கு அவசியம். கடைசி பந்து வரை நின்று விளையாடுவேன். ஒரு கேப்டனாக என்னிடம் பல திட்டங்கள் உள்ளன" எனத் தெரிவித்திருந்தார். 

 

இதனையடுத்து, இன்று காலை 11.30 மணிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரீஃப், இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.  

 

ஆனால், அப்போது பாகிஸ்தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான், ``இது பாகிஸ்தான் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதால் இம்ரான் கான் அரசின் மீதான இந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் நிராகரிக்கப்படுகிறது. நாடாளுமன்றம் ஏப்ரல் 25ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது" என அறிவித்தார். 

 

அதேசமயம், அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான், அவைகளை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கோரிக்கை வைத்தார். அதனை உடனே ஏற்ற ஆரிஃப் ஆல்வி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். மேலும், விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். 


சில தினங்களுக்கு முன்பாக “ஒரு கேப்டனாக என்னிடம் பல திட்டங்கள் உள்ளன” என பேசிய இம்ரான் கான் தற்போது அவர் மீதான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சாதுர்யமாக நீர்த்துபோகச் செய்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

குஜராத்தில் ரூ. 480 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
unwanted things seized in Gujarat worth Rs 480 crore

குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.