Skip to main content

பள்ளி மாணவர்கள் கைது; போராடினால் 20 வருடம் சிறை - போராட்டங்களை ஒடுக்க புதிய சட்டம் கொண்டுவந்த மியான்மர்!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

myanmar

 

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இப்போராட்டத்தில் கலந்துகொள்ள முயன்ற உயர்நிலை கல்வி படிக்கும் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே மியான்மரில் சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து தற்போது மியான்மர் இராணுவம், போராட்டங்களை ஒடுக்க புதிய சட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்மூலம் போராட்டம் நடத்துபவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் நடத்துபவர்களுக்கு, அந்தச் சட்டத்தின்படி அபராதம் விதிக்கவும் முடியும். மேலும் மக்கள் போராட்டத்தை ஒடுக்கும்விதமாக மியான்மர் நாட்டின் சாலைகளில் இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
worth Rs 280 crore seized in Chennai

சென்னையில் ரூ. 280 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் கடந்த 10 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்த சூழலில் அவர் போதைப்பொருள் கடத்த இருப்பதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் புகாரின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் உதயகுமார் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பெரம்பூரில் உள்ள அக்பர் அலி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 280 கோடி மதிப்புள்ள 56 கிலோ போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருளை மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக இலங்கைக்கு கடந்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story

மணிப்பூருக்குள் சட்ட விரோதமாகப் புகுந்த 718 பேர்; அரசின் அடுத்த அதிர்ச்சி

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

718 Myanmar nationals have entered Manipur illegally

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைச் சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையடுத்து, மைத்தேயி சமூகத்தைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரில் பாதயாத்திரை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததில், கலவரமாக மாறியது. இதனால் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் இந்தக் கலவரத்தால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 

இந்த நிலையில், கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது மணிப்பூர் அரசு. இதனிடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட, 5வது நாளான இன்றும்  இரு அவைகளும் முடங்கியது. 

 

இந்த நிலையில் மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் ஊடுருவியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மியான்மர் நாட்டினர் 718 பேர் அகதிகளாக ஊடுருவியுள்ளனர் என்றும், மியான்மரில் இருந்து ஊடுருவியவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுக்கத் தவறியுள்ளனர் என்றும் கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து மணிப்பூர் உள்துறை அமைச்சகம் அசாம் ரைபிள் படையிடம்  விளக்கம் கேட்டுள்ளது. அதில் முறையான பயண ஆவணங்கள் மற்றும் விசா இல்லாமல் 718 பேர் எப்படி மணிப்பூருக்குள் வந்தனர் என்பதையும் அசாம் ரைபிள் படையிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.