Skip to main content

ஐ.நா. யுத்த நிறுத்த தீர்மானத்தையும் மீறி சிரியாவில் தொடரும் தாக்குதல்கள்!

Published on 26/02/2018 | Edited on 26/02/2018

சிரியா நாட்டில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. சமீப காலமாக அங்குள்ள கிழக்கு கோட்டா பகுதியில் சிரிய நாட்டு அரசு நடத்தும் விமானத் தாக்குதல்களால் தொடர்ந்து அப்பாவி பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

 

சிரிய நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 527 பேர் அந்தப் பகுதியில் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 129 பேர் குழந்தைகள் என்பது சோகமான தகவல்.

 

Syria

 

சிரியாவில் நடத்தப்படும் இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. யுத்த நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்றியது. சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில், அடுத்த 30 நாட்களுக்கு யுத்த நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனாலும், இந்த தீர்மானத்தை சிரியா அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமை காலை கிழக்கு கோட்டா பகுதிகளில் மீண்டும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மர்க்கேல் மற்றும் ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் ஆகியோர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைத் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஆனாலும், ‘தீவிரவாதப் படைகள்’ மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருகிறோம் என சிரிய ராணுவ தலைமை அதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்