Skip to main content

"ஒரு பிங்க் செயற்கை கையை எனக்கு பொருத்த முடியுமா..?" உலகை கலங்கவைத்த 9 வயது சிறுமியின் பேச்சு

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

9 year old ukrainian girl lost her hand in russian invasion

 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 21 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், ரஷ்ய ராணுவத்தினரின் தாக்குதலால் கையை இழந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர், "அவர்கள் என்னைக் காயப்படுத்த நினைக்கவில்லை என்றும் நம்புகிறேன்" எனப் பேசியிருப்பது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.  

 

உக்ரைன் தலைநகர் கீவ்வின் மேற்குப்பகுதியான ஹோஸ்டோமலில் வசித்து வந்த சாஷாவின் குடும்பத்தார் போரின்போது அங்கிருந்து தப்பித்து கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். சாஷாவின் தந்தை காரை ஒட்டிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த ரஷ்ய ராணுவத்தினர் காரின் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறுமி சாஷாவின் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட, ஒன்பது வயதுடைய சாஷா, அவரது சகோதரி மற்றும் தாய் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். 

 

அப்போது, சாஷாவின் கைகளை ரஷ்ய ராணுவத்தின் குண்டுகள் கடுமையாகச் சிதைத்துள்ளன. பின்னர், அருகிலிருந்த ஒரு மறைவிடத்திற்கு சாஷாவையும் அவரது சகோதரியையும் கொண்டு சென்றுள்ளார் அவர்களின் தாய். இரண்டு நாட்கள் மருத்துவ சிகிச்சை எதுவும் கிடைக்காமல் அந்த மறைவிடத்திலேயே பதுங்கியிருந்துள்ளார்கள் அந்த குடும்பத்தினர். அப்போது சிறுமி சுயநினைவை இழந்ததையடுத்து, அங்கிருந்த சிலர் வெள்ளைக் கொடிகளுடன் அந்த சிறுமியை ராணுவத்தினர் சுற்றி வளைத்திருந்த பகுதியின் வழியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். 

 

சிறுமியின் இடக்கை சிதைக்கப்பட்டிருந்ததாலும், அப்பகுதியில் செல்கள் இறந்து தொற்று ஏற்பட்டிருந்ததாலும் அவரது கையின் பெரும்பகுதியைத் துண்டிக்கும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டனர். கை துண்டிக்கப்பட்டுக் குணமடைந்து வரும் சிறுமி, தன் மீதும் தன் குடும்பத்தினரின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசுகையில், "எனது கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. நான் எனது சகோதரியை அங்கிருந்து வேகமாக மறைந்து கொள்ளத் துரத்திக்கொண்டிருந்தேன். அப்போது என் அம்மா திடீரென கீழே விழுந்து விட்டார். உலகத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என நினைத்தேன். ஆனால் என் அம்மா சாகவில்லை. அவர் துப்பாக்கிச்சூட்டில் இருந்து மறைந்து கொண்டிருப்பது போலத் தெரிந்தது. 

 

பின்னர் நான் சுயநினைவை இழந்தேன். யாரோ என்னைப் பாதாள அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருந்தவர்கள் எனக்கு உதவி செய்தனர். சிலர் என்னை ஒரு துண்டுடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். ரஷ்யர்கள் என்னை ஏன் சுட்டார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு விபத்து என்றும் அவர்கள் என்னை வேண்டுமென்றே காயப்படுத்த நினைத்திருக்க மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார். ரஷ்யாவின் தாக்குதலால் தனது தந்தையையும் கையையும் இழந்த இந்த சிறுமியின் பேச்சு உலகம் முழுவதிலும் பலரையும் கண்ணீர்விட வைத்துள்ளது. 

 

சிறுமி சாஷாவுக்கு சிகிச்சை அளித்த செவிலியர் சிறுமி குறித்து ஊடகம் ஒன்றிடம் கூறுகையில், "சுயநினைவு வந்ததும் சாஷா என்னிடம் சொன்ன முதல் விஷயம், ‘தயவுசெய்து உண்மையைச் சொல்லுங்கள். எனக்கு இடது கை இருக்கிறதா இல்லையா?’ என்பதுதான். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எதுவும் சொல்லாமலிருப்பதா, பொய் சொல்லுவதா அல்லது அவளிடம் உண்மையைச் சொல்லுவதா என்று எனக்குத் தெரியவில்லை. வலியில் இருக்கும் ஒரு குழந்தை அதனைச் சகித்துக்கொண்டே ஆகவேண்டும் எனத் தெரிந்துகொண்டு கேட்கும் அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும். 

 

'நான் இனி ஆரோக்கியமாக இருப்பேனா..? பூக்கள் வரையப்பட்ட ஒரு புதிய பிங்க் செயற்கை கையை எனக்கு பொருத்த முடியுமா..?' என அவள் கேட்டாள். அவள் மிகவும் வலிமையானவள். அவள் அழுவதில்லை, ஏனென்றால் பலவீனமானவர்கள் மட்டுமே அழுவார்கள் என்பதை அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். குழந்தைகளைச் சுட்டுக் காயப்படுத்துபவர்களை நினைத்தால் நான் மிகவும் வெறுப்பாக உணர்கிறேன்" என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.