Skip to main content

காய்கறிகளை திருடி பாஸ்ட் ஃபுட் கடை நடத்திய இளைஞர் கைது!

 

 youth who stole vegetables and ran a fast food shop was arrested

 

திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு அருகே அண்ணா நகரில் மதுரை சாலையில் செந்தில்குமார் என்பவர் காய்கறி கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் கடையில் இரவு நேரங்களில் நாள்தோறும் காய்கறி திருடு போய் உள்ளது. அதனைத் தொடர்ந்து செந்தில்குமார் கடையில் சிசிடிவி கேமரா பொருத்திக் கண்காணித்து வந்தார்.

 

அப்போது நள்ளிரவு நேரத்தில் காய்கறி கடைக்குள் புகும் தாடி வைத்த இளைஞர் ஒருவர் கடையில் இருந்த ஒரு சாக்கு பையை எடுத்து சாவகாசமாக தனக்கு தேவையான காய்கறிகளை ஒவ்வொன்றாக கடையில் சென்று வாங்குவது போல் தரம் பார்த்து எடுத்து பையினுள் போடுகிறார். முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், தேங்காய் என தனக்குத் தேவையான காய்கறிகளை மட்டும் நிரப்பிக் கொண்டு கிளம்பும் தறுவாயில் நிமிர்ந்து பார்த்தபோது புதிதாக பொருத்தப்பட்ட கேமரா தன்னை கண்காணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நெஞ்சில் கை வைக்கும் அந்த இளைஞர், ‘சரி விடு ஆனது ஆச்சு பார்த்துக்கலாம்’ என்ற மனநிலையில் திருடிய காய்கறிகளை எடுத்துக்கொண்டு கடையை விட்டு கிளம்புகின்றார்.

 

இதனைத் தொடர்ந்து காய்கறி திருடப்பட்ட சம்பவம் குறித்து கடை உரிமையாளர் செந்தில் குமார் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியில் பாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த கிருஷ்ணகுமார் என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த இளைஞர் காய்கறிகளை திருடிச் சென்று தனது பாஸ்ட் ஃபுட் கடையை நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !