Skip to main content

ஊருக்காக ரூ. 10 லட்சம் செலவு செய்த இளைஞர்!  

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

The youth who spent 10 lakhs For the town

 

 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகில் உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் சந்திரசேகர்(31). பொறியியல் பட்டம் படித்த இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கரோனா நோய் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்த சந்திரசேகர், வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் தனது அலுவலகப் பணியை தொடர்ந்து செய்து வந்து கொண்டிருந்தார். 

 

அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது தான் பிறந்த ஊரைச் சுற்றி பார்ப்பது கோவில்களுக்கு செல்வது நண்பர்களுடன் பேசுவது என்று நேரத்தை கழித்து வந்துள்ளார். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக ஊரில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெரு சேரும் சகதியுமாக மாறி மக்கள் நடக்க முடியாத நிலையிலிருந்தது. அந்தத் தெருவை சுத்தம் செய்து ரோடு போட்டுத் தருமாறு வானூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கோரிக்கை மனு அனுப்பினார். 

 

தற்போது அதற்கான நிதி எங்களிடம் இல்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் அனுப்பினார். இதையடுத்து சந்திரசேகரன், ஈஸ்வரன் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு எவ்வளவு நிதி செலவாகும் அதற்கான முழு தொகையை தானே முன்வந்து தருவதாக கூறி ஒன்றிய அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி கேட்டு மனு அனுப்பினார். 

 

மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பத்து லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை அமைக்க சந்திரசேகருக்கு அனுமதி கடிதம் கிடைத்தது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வழிகாட்டுதல் படி சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் தனது சொந்த பணத்தை செலவு செய்து சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார் இளைஞர் சந்திரசேகர். இந்த பணியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.